பத்திரிக்கையாளரை கடத்திய தீவிரவாதிகள் குறிப்பிட்ட இடத்தில் பதுங்கி இருக்கிறார்கள் என செய்தி அறிந்த அமெரிக்க ராணுவத்தினர் மூன்று கிலோமீட்டர் சுற்றளவை சுற்றி வளைத்தனர். இரவு பகல் பாராமல் ஈராக் மக்களின் வீடுகளை சோதனை செய்தனர். துப்பாக்கியோடு உள்ளே நுழைந்த அமெரிக்கர்களை கண்டு மக்கள் அலறினர். வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் கீழே தள்ளி சுரங்கப் பாதைகள் இருக்கின்றதா என்று ராணுவத்தினர் தேடினர். எதிர்த்து கேட்க முடியாமல் வீட்டில் உள்ளவர்கள் கூனிக் குறுகி நின்றனர். மீறி கேள்வி கேட்பவர்களை துப்பாக்கியால் மிரட்டி அடிபணியச் செய்வார்கள் .அதையும் மீறி அவர்களை எதிர்த்து பேசினால் சுட்டாலும் சுடுவார்கள் . இப்படித்தான் போன வாரம் அமெரிக்கர்களை எதிர்த்து கேள்வி கேட்ட இர்பானை அமெரிக்க ராணுவத்தினர் கொன்றனர். இங்கே அவர்கள் வைத்தது தான் சட்டம். அதனால் ஈராக் மக்கள் கண்ணிருந்தும் குருடர்களாக வாழ்ந்தனர்.
சந்தேகத்திற்கு இடமான ஓர் இடத்தை அமெரிக்கர்கள் கண்டுபிடித்தார்கள். அதில் தான் தீவிரவாதிகள் இருக்கக்கூடும் என யூகம் செய்து, பூட்டியிருந்த அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள். நாலாபக்கமும் துப்பாக்கி குழல்கள் பார்த்தன. அந்த வீட்டில் தீவிரவாதிகள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன. படியில் ஏறி மேலே சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. அங்கே ஒருவன் நின்றிருந்தான் .
ராணுவ வீரர்கள் அவனை துப்பாக்கியால் குறிபார்த்தபடி அவன் கையை மேலே உயர்த்த சொன்னார்கள். அவன் அமைதியாக இருந்தான்.
“நாங்கள் சொல்வது போல் நீ செய்யவில்லை என்றால் உன்னை சுட்டுவீழ்த்துவோம்” என்று மீண்டும் எச்சரித்தனர்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
அவர்களின் எச்சரிக்கையை அவன் சிறிதும் லட்சியம் செய்யவில்லை, அமைதியாக இருந்தான். அவனை சுட ராணுவத்தினர் ஆயத்தமானார்கள். அவன் திரும்பினான். ராணுவத்தினர் அதிர்ந்தார்கள். அவன் உடலில் வெடிகுண்டு கட்டி இருந்தான் .
இராணுவர் வீரர்களில் ஒருவன் "நோ.." என்று சத்தமாக கத்தினான். அந்த இடமே வெடித்து சிதறியது. அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. புகை மண்டலம் கண்ணை மறைத்தது. அந்த இடமே நரகம் போல் மாறியது.
கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளரை தீவிரவாதிகள் கழுத்து அறுத்து கொன்றதை ஈராக் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிக்கொண்டிருந்ததை கர்னல் ஜார்ஜ் பார்த்துக்கொண்டிருந்தார் .
"இப்போ என்ன செய்யணும் கர்னல்?" என்றார் வாட்சன்.
"இனி இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. அதுக்கு நீங்க என்ன வேணும்னாலும் செய்யுங்க கேப்டன் வாட்சன்"
வாடசனின் முகத்தில் ஒரு குரூர சிரிப்பு உதயமானது. உடனே அங்கிருக்கும் ராணுவ வீரர்களை அழைத்து பேசினார். எல்லோரும் அவரைச் சுற்றி இருக்க அனல் போன்ற வார்த்தைகளை உதிர்த்தார் கேப்டன் வாட்சன்
"உலகத்திலேயே எல்லா நாட்டு ராணுவத்தை விட அமெரிக்க ராணுவம் பலம் வாய்ந்தது. நம்ம கிட்ட மோதி யாரும் ஜெயிச்சது கிடையாது. ஜெயிக்கவும் விட மாட்டோம். ஆனா இன்னைக்கு என்ன நடந்திருக்கு? பதுங்கி வாழுற தீவிரவாதி கூட்டம் நமக்கே தண்ணி காட்டி இருக்கு. இது அவமானம் இல்லையா?"
அனைத்து வீரர்களும் அமைதியாக இருந்தார்கள் .
"அவங்க நம்மளை பொறி வச்சு கொன்னு இருக்காங்க. இதுக்கு நாம என்ன செய்ய போறோம். அவங்க ஜெயிச்சத உங்களால ஏத்துக்க முடியுமா? இதே போல அவங்க தொடர்ந்து செய்வாங்க. அப்போ என்ன செய்யபோறிங்க? தோத்துட்டு தான் நிக்க போறிங்களா?"
வாட்சன் ராணுவ வீரர்களின் முகங்களை கூர்ந்து நோக்கினார்.
"உங்களுக்கு நான் மூணு உத்தரவு கொடுக்கிறேன். ஒன்று, இனி எந்த அமெரிக்கனும் சாகக்கூடாது, இரண்டு, இதுக்கு காரணமான தீவிரவாதிகளை உயிரோட விடக்கூடாது. மூன்று, இதை செய்றதுக்கு நீங்க எந்த எல்லைக்கு வேணும்னாலும் போகலாம். நான் சொன்னதை இப்போது இருந்தே நடைமுறைபடுத்துங்க" என்று கர்ஜித்து முடித்தார் வாட்சன்.
ராணுவ வீரர்கள் பதற்றத்தோடும் பரபரப்போடும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மணி சரியாக இரவு ஒன்பது மணி. வான் நிலவு வெண் மேகங்களோடு சரசமாடிக்கொண்டிருந்தது. ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தான் ஹகீம். தன் அண்ணனின் வரவைக் கண்ட பஹீரா ஓடி வந்து தன் அண்ணனைக் கட்டிக்கொண்டாள்.
"ஏன் அண்ணா இவ்வளவு நேரம் கழிச்சு வரீங்க. நான் பயந்துட்டேன்"
"மார்க்கெட்ல நிறைய வேலை பஹீரா" என்றபடி தான் கொண்டு வந்த உணவை அவளிடம் கொடுத்தான்
பஹீரா, வீட்டு திண்ணையில் அமர்ந்து உணவு பொட்டலத்தைப் பிரித்தாள். அந்த வீடே பாழடைந்து கிடந்தது. வீட்டுக்கூரை கூட பொத்தலாகி இருந்தது. எந்த நேரத்திலும் மேற்கூரை இடிந்து விழலாம். அதில் தான் ஹகீமும் பஹீராவும் வாழ்ந்து வருகிறார்கள்.
ஹகீமிற்கு வயது ஒன்றும் பெரிதாக ஆகவில்லை. பதினான்கை தாண்டியிருக்கமாட்டான். அவனது தங்கையோ மூன்றாம் வகுப்பு தான் படித்துக்கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு தாய் தந்தையர் இல்லை. அவர்கள் இருவரும் இறந்து சரியாக பதினோரு மாதம் ஆகி இருந்தது. ஹகீமிற்கு பஹீரா தான் எல்லாமே. அவளுக்கும் அப்படித்தான்.