அர்னவ் ஊருக்கு வந்து இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது… ஆனாலும் வீட்டிற்குள்ளேயே இருந்தான்…
“என்னடா வேலைக்குப் போகலையா?..” என்று கேட்ட அன்னையிடம்,
“ஒரு வாரம் லீவ் கேட்டிருந்தேன்ம்மா சிஸ் ஊருக்கு போகும்போது… அங்க இருந்து உடனே வந்துட்டேனே இப்போ… அதான் போட்ட லீவ் அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன்…” என அவன் சொல்ல,
“சரி… அப்போ ஒழுங்கா வீட்டுல இரு… வெளியே எங்கேயாவது போயிடாத… நல்லா சாப்பிட்டு படுத்து தூங்கி எந்தி… போதும்…” என்ற கண்டிப்போடு வாசந்தியும் அங்கிருந்து அகல,
வேலையை விட்டுவிட்டதை வீட்டில் இப்போது சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற கவலையும் தொற்றிக்கொள்ள, அந்த நேரம் சரியாக அவனுக்கு போன் வந்தது…
“என்ன… சொல்லு…” என எடுத்த எடுப்பில் அர்னவ் கேட்க,
மறுமுனையில் சிறு நிசப்தம்…
“ஹலோ இருக்குறீயா இல்லையா?...” என அர்னவ் கத்தியதும்,
“இருக்குறேன்…” என்றாள் ஜானவி...
“சொல்லு எதுக்கு போன் பண்ணின?...”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“இல்ல சும்மாதான்…”
“உனக்கு வேற வேலை இல்லையா?... எப்ப பாரு போனை போட்டு சும்மாதான்னு சொல்லி கடுப்பேத்திகிட்டு… சே…”
“இல்லங்க…. நான்….”
“என்ன இல்ல?... உனக்கு இதே வேலையா போச்சு எப்பவும்…”
“சரி.. என்னை அப்புறம் திட்டிக்கலாம்… சாப்பிட்டீங்களா?...”
“ஏன் நீ சாப்பிட்டியான்னு கேட்கலைன்னா நான் சாப்பிடமாட்டேனா?..”
“இப்போ நான் கேட்டேன்… சாப்பிட்டீங்களான்னு தான கேட்டேன்… அதுக்கு ஏன் இவ்வளவு கோபம்?...”
“இப்போ என்ன உனக்கு?... நான் சாப்பிட்டேனா இல்லையான்னு தெரியணும்.. அவ்வளவுதான?.. சாப்பிட்டேன்… போதுமா?... ஆளைவிடு கொஞ்ச நேரம்…” என அவன் கலைத்துப்போனவனாய் சொல்ல, அவளுக்கு வலித்தது…
எடுத்த எடுப்பில் ஹலோ சொல்லியிருந்தாலும் பரவாயில்லை… விட்டால் அடித்துவிடுவது போல், என்ன சொல்லு… என்றால் யாருக்குத்தான் ஒருமாதிரி ஆகாது…
அதுவும் ஆசையாக போன் செய்து பேச எண்ணியவளுக்கு அவன் கேட்ட முதல் வார்த்தையே மனதிற்குள் கவலையை உருவாக்க நினைக்க, அதை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளியவள் அவனுடன் சகஜமாக பேச விரும்பி பேசினால், மீண்டும் அவன் பிடிகொடுத்தே பேச மறுத்தான்…
“சாரிப்பா… எதும் பிரச்சினையா?...” என மெதுவாக அவள் கேட்டதும்,
“அதெல்லாம் எதுவுமில்லை…” என்றான் உடனேயே…
“ஹ்ம்ம்… சரி… அக்கா கிட்ட பேசினீங்களா?...”
“இல்ல…”
“ஏன்?...”
“சும்மாதான்…”
அவனது பதிலில் புன்னகை தான் வந்தது அவளுக்கு…
“நான் சும்மான்னு சொன்னா மட்டும் சாருக்கு கோபம் மூக்குக்கு மேல வருமாம்… இப்போ அவரே அதை சொல்லுவாராம்… நான் மட்டும் கோபம் வராம கேட்டுக்கணுமாம்…” என மனதினுள் அவள் நினைத்து சிரிக்க,
அவள் நினைப்பது அவனுக்கு தெரிந்து போனதோ என்னவோ, பேச்சை முடித்துக்கொள்ளும் எண்ணத்துடன்,
“சரி… வொர்க் இருக்கு… வைக்குறேன்…” என்றான் அவன்…
வொர்க் என்றதும் சட்டென அவளுக்கு நினைவு வர, “ஹே.. கேட்க மறந்துட்டேன்… வேற எங்கேயும் ட்ரை பண்ணி பார்த்தீங்களாம்மா?...” என அக்கறையுடன் அவள் கேட்க, சற்று நேரம் அமைதியானவன்,
பின், “இல்லை…” என்றான்…
“ஏன் ட்ரை பண்ணலை?... வீட்டிலேயும் நடந்ததை நீங்க இன்னும் சொல்லலை… அப்படி இருக்கும்போது நீங்க வீட்டுல இருக்குறதைப் பார்த்து, வேலைக்குப் போகலையான்னு அம்மா கேட்டா என்ன செய்வீங்க?.. அதனால தான் சொல்லுறேன்… ட்ரை பண்ணி பாருங்க… ப்ளீஸ்…”
“எனக்கு தெரியும்… உன் அட்வைஸ் முடிஞ்சுதா?... போனை வைக்குறீயா?... சும்மா கடுப்பேத்திகிட்டு… பேசாம போ…” என அவன் பேச, அவளுக்கு அவனது வேதனை புரிந்தது…