இரண்டு நாளாய் கணவனின் செயல் மனதை வாட்ட, என்ன செய்ய என்று தெரியாது நொந்து போனாள் சரயூ…
அர்னவ் ஊருக்கு கிளம்பிய அன்றிரவு சாப்பிட்ட பாத்திரத்தை கழுவிவைத்துவிட்டு, கிட்சனையும் சுத்தம் செய்துவிட்டு, துவண்டு போனவளாய் தனதறைக்கு செல்ல மாடிப்படி ஏறினாள் சரயூ…
மற்ற நேரங்கள் என்றாலும் இவ்வளவு அலுப்பு ஏற்பட்டிருக்காது அவளுக்கு… ஜூரத்தின் பிரதிபலிப்பான சோர்வு மீண்டும் அவளிடம் தென்பட ஆரம்பிக்க, அவள் உடல் வலிக்க ஆரம்பித்தது…
விசாலம் மதியம் சென்றதிலிருந்து வேலைகளை அவள் பார்க்கும்படி நேர, ஓய்ந்து தான் போனாள் அவள் காய்ச்சலின் வீரியத்தில்…
எங்கே திலீப்பிடம் சொன்னால் திட்டுவானோ என்ற பயத்திலேயே அவனிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல் இருந்துவிட்டாள் இவ்வளவு நேரம்…
இப்போதோ அது சத்தியமாக முடியாது… அதுவும் அறைக்குள் சென்றுவிட்டால் அவன் பார்வையிலிருந்து தப்பிக்கவே முடியாது… அவனிடம் மறைக்கவும் முடியாது என்றெண்ணியவளுக்கு தலை சுற்றுவது போல் இருக்க, தன்னை சமாளித்துக்கொண்டு அறைக்குள் சென்றாள்…
அவன் இல்லாதது போல் இருக்க, சட்டென கட்டிலில் படுத்துக்கொண்டு கண் மூடினாள் அவள்…
தூங்கிக்கொண்டிருந்தவளுக்கு விழிப்பு ஏற்பட, திலீப் அவளை கட்டிக்கொண்டு இருப்பது புரிந்தது…
“என்னடி தூங்கிட்ட?...” என்றவனது குரலில் அவளுக்கான தேடல் தெரிய, அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை…
அவன் மேலும் முன்னேற, அவள் தவித்தாள்… கடைசியில் உடல் வலி, மனதினை தைரியமூட்ட,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
“இன்னைக்கு வேண்டாங்க…” என்றாள் மெல்லிய குரலில்…
“ஏன்?...” என்றவனது குரலில் காட்டம் அப்பட்டமாக தெரிய,
“ப்ளீஸ்ங்க… இன்னைக்கு மட்டும்… புரிஞ்சிக்கோங்க…” என பலவீனமான குரலில் அவள் சொல்ல,
சட்டென அவளை விட்டு விலகினான் அவன்…
நெற்றியில் கைவைத்து, காய்ச்சல் இருக்கிறதா என பார்த்தவன், காய்ச்சல் எதுவும் இல்லை என்ற நிம்மதியில்,
“காய்ச்சல் இல்லையேடி… அப்புறம் என்ன செய்யுது உடம்புக்கு?...” என்றான்..
“இல்லங்க… உடம்பு வலிக்குதுங்க…” என அவள் சுருங்கி படுத்துக்கொள்ள,
கட்டிலை விட்டு கீழே இறங்கியவன், அவளுக்கு ஒரு போர்வையை போர்த்திவிட்டு,
“அத அப்பவே எங்கிட்ட சொல்லுறதுக்கு என்ன?... வாயைத் திறந்து பேசிடாத என்னைக்கும் எங்கிட்ட….” என எரிந்து விழுந்தவன்,
“இதுக்குத்தான் அத்தனை தடவை சொன்னேன்… ஒழுங்கா ரெஸ்ட் எடுன்னு… கேட்டாதான என் பேச்சை… இப்ப பாரு இன்னும் இழுத்து வச்சிட்டிருக்குற…” என்று கத்த ஆரம்பிக்க, கண் மூடிக்கொண்டாள் அவள்…
“நாளைக்கு என்னோட நீ ஹாஸ்பிட்டல் வர்ற… என்ன புரிஞ்சதா?...” என அவன் கேட்க, சரி என தலை அசைத்தாள் அவள் விழி திறக்காமலேயே…
“சரி சரின்னு சொல்லு… ஆனா எதையும் கேட்டுடாத……” என கோபமாக கதவைத் திறந்து அதை அறைந்து சாத்தி விட்டுச் சென்றான் அவன்…
திலீப் சாத்திவிட்டு சென்ற கதவின் அதிர்வு அவள் உடம்பிலும் எதிரொலிக்க, அவளால் தாங்கமுடியவில்லை… மௌனமாக இரண்டு துளி கண்ணீர் அவளது கன்னங்களை நனைக்க, அப்படியே அயர்வில் உறங்கி போனாள் அவள்…
மறுநாள் விடிந்ததும் அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்றபோது, அவள் கண்டிப்பாக இரண்டு. மூன்று நாளாவது எந்த வேலையும் செய்யாது ஓய்வெடுக்க வேண்டும் என்று அவர் கூறிவிட, மனைவியிடமிருந்து விலகியே இருந்தான் திலீப்… அறைக்குள் அவள் இருந்தாலும் கண்டுகொள்ளவில்லை அவன்… அதுமட்டும் அல்லாது எந்த குத்தல் பேச்சுக்களும் கிடையாது… சராசரி பேச்சு வார்த்தைகளும் கிடையாது…
இப்போது கொஞ்ச நேரத்திற்கு முன் கூட, நேரத்துக்கு சாப்பிடு நான் வரேன் என சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டான்… இவனை என்ன செய்து மாற்ற என்று தலையைப் பிய்த்துக்கொண்டாள் அவள்…
முதலில் உடல்நிலை குணமாக வேண்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டாள் அவள்… கடவுளும் அவளைப் பார்த்து சிரிக்க,
அதே நேரம் இங்கே அர்னவ் ஜானவியிடம்,
“கேட்குறேன்ல… சொல்லுடி…. கோபமா?..” என மீண்டும் அவன் மெஸேஜ் அனுப்ப
“இல்ல…” என கஷ்டப்பட்டு வார்த்தைகளை வெளியே கொண்டு வந்தாள் ஜானவி அவள் இருந்த இனம் புரியாத நிலையிலிருந்து…
“சரி… ஹேப்பி ப்ரெண்ட்ஷிப் டே…” என அவன் சொன்னதும்,
“இப்படியா விஷ் செய்வாங்க?...” என்றாள் அவள்…
“வேற எப்படி விஷ் செய்வாங்க?..”
“கை கொடுத்து விஷ் பண்ணனும்…”
“ஹ்ம்ம்… லூசு…” என செல்லமாக திட்டியவன்,
“அப்புறம் பேசவா?...” எனக் கேட்டதும்
“ஹ்ம்ம்.. வேலை இருக்கா?...” என்றாள்…
அவளது பதிலே போக வேண்டாம் என சொல்ல, அதை புரிந்து கொண்டவனது உதடுகளில் மென்னகை பரவியது அழகாய்…
“இல்ல… குளிச்சிட்டு கிளம்ப அப்பதான் சரியா இருக்கும்…”
“கிளம்பவா?...” என கேள்விக்குறியோடு அவள் நிறுத்த,
“ஆமாடி லூசு… வேலைக்கு ட்ரை பண்ணுன்னு நீதான சொன்ன?... அதான் கிளம்ப போறேன்… அதுக்கு குளிச்சிட்டு கிளம்பம்ணும்ல…” என அவன் சிரித்துக்கொண்டே சொல்ல,
மறுபுறம் அவளது முகம் மலர்ந்தே போயிற்று…
“ஹேய்… நிஜமாவா?... போயிட்டு வாங்க… குட்லக்….” என அவள் வாழ்த்த,
“சரி லூசு… நான் போயிட்டு வந்துட்டு பேசுறேன்… இடையில மெஸேஜ் அனுப்பி நான் பார்க்கலைன்னு மூஞ்சிய தூக்காத… என்ன?... சரியா?...” என்றான் அவள் என்ன செய்வாள் என தெரிந்து கொண்டு…
“ஆளைப் பாரு ஆளை… மூஞ்சி… ஹ்ம்ம்… போயிட்டு வாங்க…” என அவளும் சிரித்துக்கொண்டே சொல்ல
அதைப் பார்த்துவிட்டு போனை ஓரமாய் வைத்துவிட்டு குளிக்கச் சென்றான் அர்னவ்…
இங்கே மெஸேஜ் சீன் என அவளுக்கு காட்ட, அதே நேரம் டூ மினிட்ஸ் அகோ என்ற எழுத்தும் அவனது பெயரின் கீழ் வர,
“ஹ்ம்ம்…. ஆள் கிளம்பியாச்சு…” என்ற எண்ணத்தோடு அவளும் வேலைக்கு செல்ல தயாரானாள்…
ஹேப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே ஃப்ரெண்ட்ஸ்….
இந்த வீக் அப்டேட் எப்படி இருந்துச்சு?
கதையை படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸை சொல்லுங்க…
ஹ்ம்ம்… நெக்ஸ்ட் வீக் மறுபடியும் புத்தம் புது காலையில பார்க்கலாம்… பை… பை…
தொடரும்
{kunena_discuss:995}