09. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
திருமணம் முடிந்து ஹாலிற்கு புது மணத் தம்பதிகள் வந்துச் சேர மதியம் ஆகி விட்டிருந்தது. மேளதாளத்தோடு வந்த மணமக்கள் இருவரையும் நண்பர்கள், உற்றார் உறவினர்ஆர்ப்பரிப்போடு வரவேற்க, மிகவும் உற்சாகமான தொடர் நிகழ்ச்சிகளுக்கு பின்னர் இருவரும் கேக் வெட்டினர் உடனே ரிசப்ஷன் ஆரம்பித்தது.
அதே நேரம் ஹாலின் விஸ்தாரமான மாடியில் மதிய சாப்பாடும் ஆரம்பித்திருந்தது. சாப்பிட்டு விட்டு மணமக்களை வாழ்த்தி பரிசுக்களைக் கொடுத்து புகைப்படம் எடுத்து விட்டுபுறப்பட தயாராக கூட்டம் ரிசப்ஷனை மொய்த்தது.
இன்னொரு பக்கம் ஏஸி ஹாலில் இதமாக ஒலித்த இசையை கண்டுக் கொள்ளாமல் பலகாலம் கழித்து சந்தித்த உறவினர்கள் ஒருவர் மற்றவரிடம் உற்சாகமாய் அரட்டையடித்துக்கொண்டிருந்தனர். மணப்பெண்ணின் பக்கத்தில் உறவுப் பெண் ஒருவர் நின்று ப்ரீதாவிடம் கொடுக்கும் பரிசுகளை வாங்கி வாங்கி வைத்துக் கொண்டிருக்க, மணமகன் பக்கத்தில்ஜாக்குலின் நின்றுக் கொண்டிருந்தாள்.
அனிக்கா பிரின்ஸ் மற்றும் அங்கிருந்த ஒன்றிரண்டு வாண்டுகளோடு சங்கமமாகி இருந்தாள் .
பெரியவர்கள் விருந்தினர்களை வரவேற்கவும் சாப்பிடச் சொல்லவுமாக மிகவும் மும்முரமாக இருந்தனர். இரண்டு குடும்பத்தினருமே செலவுகளை பங்கிட்டு இருந்ததால்மாப்பிள்ளை வீட்டுச் செலவுகள் அனைத்தின் போதும் ராஜ் அன்றைய தினத்தின் ஏ டி எம் மிஷினாக மாறி மனைவியும் பிள்ளைகளும் சொல்லச் சொல்ல செலவுகளுக்குதேவையான பணத்தை பையிலிருந்து எண்ணி எண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஒன்றிரண்டு மணி நேரத்திற்கு அங்கு திருமண வீட்டினர் அனைவரும் இரு கால்களிலும் சக்கரம் கட்டி விடப்பட்டார் போல சுழன்றனர். அதன் பின்னர் ஓரளவு கூட்டம் குறைந்துவிட்டிருந்தது. அவ்வளவு அலைச்சலிலும், சோர்விலும் ஒரு வகையான மன நிறைவு. தங்கள் பிள்ளைகளுக்கான கடமைகளை நிறைவேற்றும் போது வரும் மன நிறைவு அது.பெற்றோர்கள் வாழ்வில் இது ஒரு வகையான வெற்றியின், சாதனையின் நிறைவைக் கொடுக்கும் என்றால் அது பொய்யன்று.
அனைவரும் ஓய்வாக அமர்ந்து ஆற அமர உரையாடிக் கொண்டிருந்தனர். அனிக்கா ஏற்கெனவே பிரின்ஸை சாப்பிட வைத்து விட்டதால் ஜாக்குலினுக்கு ஒரு பெரிய வேலைமுடிந்து விட்ட மாதிரி இருந்தது ,
"ஏன் அனி, இவன் உன் கிட்ட சேட்டையே செய்யாம சாப்பிட்டுடானா?" வியப்பு தாளாமல் கேட்டாள்.
"அதெல்லாம் அவன் சேட்டை செய்யலியே....நல்லா சாப்பிட்டான் அண்ணி, நீங்க வேணா பிரின்ஸ் கிட்ட கேளுங்க? ப்ரின்ஸ் நீ சாப்பிட்டல்லமா.. அம்மாட்ட சொல்லு"
"ம்ம்ம்...சாப்தேன் மம்மி" சமர்த்தாக பதில் சொல்லி தலையாட்டினான் அவன்.
"பரவால்லியே, அப்போ நம்ம இந்த அத்தையை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு போயிடுவோமா........தினமும் நீ சத்தமில்லாம சாப்பிட்ருவ பாரு"
"ம்ம்..நான் வரலப்பா, வேணும்னா இந்த குட்டி பிரின்ஸை என் கிட்ட விட்டுட்டு போங்க....எனக்கும் போரடிக்காது'
"அதான் உங்க வீட்ல ஒரு குட்டி வரப் போகுதில்ல , பிறகு என் பிரின்ஸ ஏன் கேட்கிற நீ................. ச்சீ இந்த அத்தை வேணாண்டா நமக்கு..."
"நோ, நோ என்கு இந்த அத்தே தா வேணு" அவளிடம் தாவினான் பிரின்ஸ்..
கல கலத்து சிரித்தவாறு பிரின்ஸை தூக்கிக் கொண்டு தன் அக்காவின் தோளில் சாய்ந்து நிற்கும் அனியை விடாமல் தொடர்ந்தது ரூபனின் பார்வை.
அவன் உள்ளத்தில் புதிதாக ஒரு யோசனை எழுந்தது அதை செயல் படுத்த எண்ணியவனாக சரியான நேரத்திற்காக காத்திருந்தான்.
அண்ணன் திருமணம் முடிந்து இரண்டு நாட்களில் அவனது பயணம் இருந்ததால், தான் திருமண போட்டோ ஆல்பத்தை பார்க்கவியலாதே என்னும் காரணம்சொல்லி ஏற்கெனவே மணமக்கள், மற்றும் ஏனைய குடும்பத்தினர் அனைவரையும் ,மற்றும் அத்தை குடும்பத்தையும் திருமண வீட்டு மகிழ்ச்சியான சூழலில் தன்னுடைய கேமராவில்படங்களாக எடுத்து தள்ளிக் கொண்டிருந்தான்.
ஒரு சில படங்களை தானும் அவர்களோடு நின்றவனாக எடுக்கையில் திருமணத்திற்கு வந்திருந்த தன் நண்பன் அசோக்கின் உதவியை நாடினான். மேடையில் தீபன் அருகில்பெரும்பாலும் ஜாக்குலின் நின்றிருக்க இடையிடையே தேவைப் படும்போது அனிக்காவை அழைத்துக் கொண்டாள்.
இப்போதோ இருவருமே மேடையில் நின்றுப் பேசிக் கொண்டிருந்தனர். பிரின்ஸ் ஏதோ கேட்க அவனோடு மேடையை விட்டு ஜாக்குலின். இறங்கிச் செல்ல அனிக்கா மட்டுமேதீபன் அருகில் நின்றுக் கொண்டிருந்தாள். மணமக்களோ தங்கள் அக்கம் பக்கம் நின்றுக் கொண்டிருப்பவர்களை கவனிக்க நேரமில்லாதவர்களாக தங்களுக்குள்ளே பேசுவதும் ,புன்னகை புரிவதும், தங்களை வாழ்த்த வருபவர்களின் வாழ்த்தைப் பெற்றுக் கொள்வதும் , தங்கள் உறவினர்களை ஒருவருக் கொருவர் அறிமுகப் படுத்துவதும், அடுத்த நொடியேஅறிமுகப் படுத்தப் பட்டவர்களின் பெயர்கள் மறந்து போக, புதிதாக வாழ்த்துச் சொல்ல வருபவர்கள் குறித்து ஆர்வமாக கேட்பதுமாக இருந்தனர்.