“ச்ச..என்ன பிறவி வினய் நீ? இப்படி பண்ணினா அர்ப்பணா எதுவும்செய்ய மாட்டாள்ன்னு நினைச்சியா? கோழையே! உன்னை என்ன பண்ணுறேன் பாரு” என்று அவள் மனதினுள் உரைக்கும்போதே அர்ப்பணாவின் கதவு உடைக்கப்படுவது போல தட்டப்பட்டது. அவள் வீட்டின் வெளியே பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் காத்திருக்க,அவர்களின் மூலமாய் செய்தியை அறிந்து கொண்ட சொக்கலிங்கம், “என் மகள் இப்படி செய்ய மாட்டாள்” என்று ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல் அர்ப்பணாவைத் தேடிச் சென்றார்.
அர்ப்பணா தனது அறைக்கதவை திறந்த மறுநொடியே அவள் கன்னதில் இடியாய் அறை விழுந்தது.
“ என் மானத்தை வாங்கிட்டியே .. பொண்ணா நீ ! இந்த பொழப்புக்கு செத்துற வேண்டியதுதானே!” என்று அவர் கர்ஜிக்க,அவளின் அன்னை மீனாட்சியோ
“ இப்படியாடி வளர்த்தேன் உன்னை நானு? என் வயிறு பத்தி எரியுது!”என்றார். உடைந்தே போய்விட்டாள் அர்ப்பணா.
அந்த படங்களை பார்த்துக்கூட அவள் இப்படிஉடையவில்லை.ஆனால், தனக்கு துணையாய்,தன் மீது நம்பிக்கை வைக்கவேண்டிய பெற்றோரே இப்படி பேசவும் கூனி குறுகி போனாள் அவள்.
ஆனால்,அதற்காக கூனிக் குறுகி ஒரு இடத்தில் அமர்ந்துவிடவில்லை அவள் ! அவளுக்குத் தெரியும்..இப்போது அவள் ஓய்ந்து அமர்ந்துவிட்டால் நடந்தது எல்லாம் உண்மையென்றாகிவிடும். அப்படி விடக்கூடாது. வீட்டின் மேல்தளத்தில் நின்றவளுக்கு கீழே அனைவரும் இருப்பது தெரிந்தது. கண்களை துடைத்துக் கொண்டு அப்பா,அம்மா இருவரின் கைகளையும் பிடித்து இழுத்துகொண்டு தனது அறையை தாழிட்டுக் கொண்டாள்.
“ நான் சொல்லுறதை கொஞ்சம் கேளுங்க ப்ளிஸ்” என்றவள் வினய்க்கும் தனக்குமான உறவையும் இந்த சதிச்செயலையும் எடுத்துக் கூறினாள். நம்பவில்லை அவர்கள் ! அவள் சத்தியம் செய்து கூறவும், காதலித்தையே மறைத்தவள் இன்னும் எதையெதை மறைத்திருப்பாளோ என்று பெற்றவர்களே வாய்ப்பேச இனிமேல் அவர்களிடம் ஆதரவை எதிர்ப்பார்ப்பது முட்டாள்த்தனமென்று உணர்ந்தாள் அர்ப்பணா. எங்கிருந்து தான் அவளுக்கு அவ்வளவு கோபமும் தைரியமும் வந்ததோ,
“என்னை நம்பாதவங்க யாரும் என்னோட இருக்க வேண்டாம். என் வீட்டை வெளில போங்க” என்று கத்தியிருந்தாள் அவள். அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமல்கீழே இறங்கி வந்தாள் அவள்.
அவள் பார்வையில் அப்படி ஒரு நிமிர்வு. விழிகளில் தீட்சன்யம் பரவிட “ இந்த மாதிரி செய்திகள் உங்களுக்கு புதுசு இல்லையே அப்பறம் ஏன் இவ்வளவு ஆர்வமாய் என்னிடம் கேள்வி கேட்க வந்தீங்க?” என்றாள்.
“மேடம், இந்த ஃபோட்டோஸ் பத்தி என்ன சொல்லுறிங்க?”
“என்ன சொல்லனும்? இது நான் இல்லைன்னு சொன்னால் உடனே நம்பிடுவிங்களா? என்னை பத்தி தப்பா பேசினவங்க மன்னிப்பு கேட்க போறிங்களா? அல்லது இந்த செய்தியை இதோட விடப்போறிங்களா ? ஒரு நடிகைக்கு இப்படியெல்லாம் நடக்குறது புதிது இல்லையே ! அவங்க எல்லாம் சொன்ன அதே பதிலைத்தானே நானும் சொல்லப் போகிறேன்?”
“ நீங்க ப்ரெஸ்ஸை அவமதிச்சு பேசுறிங்க.. இதன் விளைவுகள் மோசமாக அமையலாம்” கூட்டத்தில் இருந்து முகமறியாதவரின் மிரட்டல் அவளை எட்டியது !
“ மோசமான விளைவுகளா ? இப்போ நான் இருக்கும் சூழ்நிலையை விட மோசமானதா அது ? இழப்பதற்கு இனி என்ன இருக்கு?” என்று ரௌத்தரமாய் கேட்டவள், கண்களை இறுக மூடி திறந்து
“ என் மேல தவறு இல்லைன்னு ப்ரூவ் பண்ண வேண்டியது என் கடமை.அதை நான் பார்த்துக்குறேன். அப்போ உங்களை கூப்பிட்டு செய்தி கொடுக்குறேன்.அப்படி உண்மையை நிரூபிக்க முடியலன்னா இந்த இண்டஸ்டிரியிலேயே நான் இருக்க மாட்டேன்” என்று விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் அர்ப்பணா.
அதற்குப்பின் அர்ப்பணா என்னென்னசெய்தாள் என்பது நிரூபணாவிற்கே தெரியாது. தனது பேஸ்புக்கை முடக்கிவிட்டிருந்தாள் அவள். யாரிடமும் பேசவில்லை அவள். அவளின் பவித்ரம் எனும் தீ ஜ்வாலையாய் எரிய, அதன் அருகில் யாரும் செல்லவில்லை.
ஆனால் தினமும் அர்ப்பணாவைப் பற்றி செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
“ பெற்றோரை விட்டு பிரிந்து வந்தார் அர்ப்பணா!
அர்ப்பணா தொடர்ந்து நடிப்பார் என்கிறார் அவர் படத்தின் இயக்குனர்!
நேர்காணல்மேடையில் கோபத்தை கொட்டி தீர்த்த நடிகை அர்ப்பணா” இப்படி தினம் ஒரு செய்தி. இதற்கிடையில் அர்ப்பணாவை பற்றி சத்யனிடம் சிலர் பேட்டிகாண முதன் முறையாய் அந்த விஷயத்தைப் பற்றி ரத்தின சுருக்கமாய் தனது எண்ணத்தை சொன்னான் அவன்.
“ நடிகை அர்ப்பணாவின் பெர்சனல் லைஃப் பத்தி பேசுறதுக்கு எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.ஆனால் ஒரு யூனிட்டாகவும், சக நடிகனாவும் எ என் ஆதரவு அவங்களுக்கு உண்டு. சீதையை எல்லாரும் சந்தேகப்பட்டாங்க.. ஆனாலும் இன்னமும் கோவிலில் அவங்களை வெச்சு கும்பிட்டுட்டு தானே இருக்கீங்க? உண்மை ஒரு நாள் வெளிவரும்!” என்றுவிட்டிருந்தான் அவன்.