22. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்
“மச்சான் என்னடா இது?...”
இஷான் குரலில் அதிர்ச்சி அப்பட்டமாகவே தெரிய, ஜெய்யோ அமைதியாக காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்…
“டேய்… நான் கேட்டுட்டே இருக்குறேன்… நீ எதுவுமே சொல்லாம வண்டியை எடுக்குற?...”
“சொல்லுறேன்… கொஞ்சம் அமைதியா இரு…”
“காலையில 6 மணிக்கு பிடிச்சு கொடுத்த அக்யூஸ்ட் இப்போ பத்து மணி ஆகலை வெளிய சுத்திட்டிருக்கான்… என்ன நடந்துச்சுன்னு ஒன்னும் புரியாம நான் குழம்பி போயிருக்கேன்.. நீ என்னடான்னா அமைதியா இருக்க சொல்லுற?...”
“சரி… போ… அவனை அரெஸ்ட் பண்ணு… மறுபடியும் அவன் வெளிய வந்து உன் முன்னாடி இப்போ பார்த்தமாதிரி வந்து நிற்பான்… அப்போ என்ன செய்வ?... இன்னொரு தடவையும் அரெஸ்ட் பண்ணுவீயா?...”
ஜெய் நிதானமாக அதே நேரம் சற்றே கோபமாக கேட்டுவிட்டு,
“நீ எத்தனை தடவை அவனை அரெஸ்ட் பண்ணினாலும் அவன் வெளிய வந்துட்டே தான் இருப்பான்… ஏன்னா அவனை நிரந்தரமா உள்ள வைக்க எந்த ஆதாரமும் கிடையாது… அது மட்டும் இல்லாம இங்க அவன் தான் போலீஸ்… அவன் தான் திருடன்… அவன் தான் எல்லாமேன்னு இந்த ஏரியாவையே கைக்குள்ள வச்சிட்டிருக்குறான்….”
விளக்கமாக ஜெய்யும் எடுத்து சொல்ல, இஷான் அவனை ஆச்சரியமாய் பார்த்தான்…
“இதைப்பாரு… இன்னும் தெளிவா புரியும்….” என்றபடி ஜெய் அவனிடம் சில பேப்பர்களை நீட்ட, அதை வாங்கி படித்தான் இஷான்….
இஷானின் முகத்தில் திகைப்பு வெளிப்படையாகவே பிரதிபலித்தது…
“ஜெய்…. இது….”
“இப்போ உனக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்…”
“சரிடா ஜெய்… வந்த வேலையை பார்க்கலாம்…”
“ஓகே… ஸ்டேஷன் போகலாமா?...”
ஜெய்யின் கேள்விக்கு போகலாம் என இஷானும் பதில் சொல்ல, இருவரும் அங்கிருந்து கிளம்பினர்….
அதே நேரம்,
அந்த அழகான மலைப்பகுதியின் ஓரிரு இடங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் திவாகர்….
கையில் துப்பாக்கியுடன் சர்வ சாதாரணமாக அவனுக்கு வேண்டாதவரை சுட்டு தள்ளி இருந்த தடமே தெரியாமல் மலைப்பகுதியில் தூக்கி எறிந்துவிட்டு எலும்பு கூட கிடைக்காதபடி செய்திடுவது அவனுக்கு எளிதான ஒன்று…
அவனை எதிர்த்து உயிரை விட துணிவில்லாது, அவனுக்கு அடங்கி இருந்தனர் அந்த பகுதி காவலாளர்கள்…
அப்படிப்பட்ட சூழ்நிலையில், திவாகரை அடித்து ஜெயிலில் அடைத்த ஜெய்யை உடனேயே கொன்று விட துடித்தனர் அவனது அடியாட்கள்…
“என்ன சார்… யார் என்னன்னே தெரியாம உங்களை தூக்கி உள்ள வச்சிருக்கான்… அவனை போய் ஒன்னும் செய்யவேண்டாம்னு சொல்லுறீங்க?...”
திவாகர் பதில் சொல்லும் முன்பே, அந்த கூட்டத்தில் இன்னொருவன்
“அவன் உள்ள வச்சிட்டா சார் வெளிய வர முடியாதா என்ன?... அதான் இரண்டே மணி நேரத்துல வெளிய கொண்டு வந்துட்டோமே…” என்றான் வேகமாய் சிரித்துக்கொண்டே…
“அதுதானே….” என்று பல்லைக்காட்டினான் இன்னும் ஒருவன்…
மாற்றி மாற்றி அவர்கள் சிரித்துக்கொண்டிருக்க,
“அவன் யார் என்னன்னு எனக்கு தெரிஞ்சாகணும்… அந்த இன்ஸ்பெக்டருக்கு போன் போடு…”
அகங்காரத்துடன் ஒலித்தது அந்த திவாகரின் குரல்….
கொஞ்ச நேரத்தில் ஜெய் ஒரு கேஸ் விஷயமாக ஊட்டிக்கு தன்னுடன் பணிபுரியும் இஷானுடன் வந்திருப்பது தெரிய வந்தது…
அதற்கும் மேல், அந்த இன்ஸ்பெக்டருக்கு எதுவும் தெரியவில்லை…
“சார்… அவன் கூட ஒருத்தன் மட்டும் தான் இருக்கானாம்…. இப்போ போனா கூட கொன்னு தூக்கி போட்டுட்டு வந்துட்டே இருக்கலாம்…”
மிக இலகுவாக அவர்களில் ஒருவன் சொல்ல, திவாகர் சிரித்தான்…
“என்ன சார் சிரிக்குறீங்க?...”
“சிரிக்காம வேற என்ன செய்ய சொல்லுற?...”
அவன் கேட்க அவர்கள் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொண்டனர்…
“என்னையே ஒரு நிமிஷத்துல அடிச்சி கீழே தள்ளிட்டான்… அவனை நீங்க எல்லாரும் போய் சுட்டு கொன்னுட்டு வந்துடுவீங்க?....”
நக்கலாக அவன் கேட்க, அவனின் கூட்டத்தில் இருந்தவர்களின் தலை கவிழ்ந்தது தானாய்…