25. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்
விலகவே தோன்றாது தன் மார்போடு புதைந்து போனவளை அவனது கரங்கள் அணைத்துக்கொள்ள துடித்தன…
அந்நேரம் அவளின் அழுகை அவனின் சட்டையையும் மீறி நெஞ்சத்தை தொட, அவன் அவளிடமிருந்து சட்டென விலகி நின்றான்…
அவனை நோக்கி வர இருந்தவளின் கால்கள், “இஷான்………… உன் தங்கச்சியை கீழே கூட்டிட்டு போ……….” என்ற சத்தத்தில் அப்படியே நின்றன…
இஷானோ, தங்கையின் முகத்தினைப் பார்க்க, அதில் மிரட்சி அப்பட்டமாய் பிரதிபலித்தது…
“சதி… வா…” என அவளின் கைப்பிடித்து அவன் அழைக்க, அவள் அசையவே இல்லை…
ஏக்கத்துடன் ஜெய்யைப் பார்த்துக்கொண்டிருந்தவளை, ஜெய்யின் குரல் மேலும் பேதலிக்க வைத்தது…
“கூட்டிட்டு போன்னு சொன்னேன்…”
அந்த இடமே அதிரும்படி அவன் கூற, இஷான் தங்கையின் கைப்பிடித்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல,
தாயைப்பிரிந்து செல்லும் குழந்தையின் மனநிலையில் இருந்தாள் சதி…
கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே, திரும்பி திரும்பி ஜெய்யைப் பார்த்துக்கொண்டே சென்றாள்…
அவள் சென்றதும், சற்று நேரம் அப்படியே அங்கிருந்த பாறையின் மீது அமர்ந்து தலையைப்பிடித்துக்கொண்டவனுக்குள் சதியின் கலங்கிய விழிகளும், ஏக்கத்துடன் கூடிய சிறுகுழந்தை பார்வையும் வந்து போக, உடனேயே அங்கிருந்து கிளம்பினான்…
இஷான் சதியோடு கீழே செல்ல, அவர்களின் பின்னேயே வந்தான் ஜெய்யும்….
சதியைப் பார்த்துவிட்டு பிரசுதி அவளிடம் என்னாயிற்று என்று கேட்க, அவள் பதில் எதுவும் பேசவில்லை…
“ஒன்னுமில்லம்மா… மேல ரொம்ப குளிர்… அதான் கீழ கூட்டிட்டு வந்துட்டேன்…”
இஷான் தாயிடம் தன்மையாக கூற,
“சொன்னப் பேச்சைக் கேட்டா தான?... போகாதன்னு சொன்னேனே…. கேட்டாளா இவ….” என ஆதங்கத்துடன் மகளிடம் தனது வருத்தத்தைக் காட்டியவரின் கண்களில் ஜெய் வருவது தெரிய, கூடவே அவனது உடையில் இருந்த கறையும் பட, அவனின் அருகில் வந்தார் பிரசுதி…
“ஜெய்… என்னாச்சுப்பா?... ட்ரெஸ் எல்லாம் கறையா இருக்கு?... என்னாச்சு?...”
“ஒன்னுமில்லம்மா… வரும்போது லேசா வழுக்கிட்டு… அதான் விழுந்துட்டான்…”
ஜெய் பதில் சொல்வதற்குள் முந்திக்கொண்டு கூறினான் இஷான்…
“அச்சச்சோ… அடி எதுவும் படலையேப்பா…”
கேட்டுக்கொண்டே ஜெய்யை அவர் ஆராய, உடையில் தெரிந்த கறைகளை தவிர, வேறெதுவும் அவர் கண்களுக்கு புலப்படவில்லை…
சற்றே ஆசுவாசமடைந்தவர், “எல்லாம் சதியோட பிடிவாதத்தால வந்தது தான்… நீங்க போகும்போதே எனக்கு மனசுக்கு சரியாப்படலை… இப்போ பாரு… ஜெய்யும் கீழ விழுந்துருக்கான்… நல்லவேளை அடி எதுவும் படலை… பட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்?....”
கோபத்தோடு பிரசுதி சதியிடம் கேட்க, அவள் கண்கள் நிறைந்துவிட்டது கண்ணீரில்…
“எனக்கு எதுவும் இல்ல… நீங்க சதியை திட்டாதீங்க…”
சதி தன்னால் திட்டு வாங்குவது பொறுக்காது பட்டென வந்தது ஜெய்யின் குரல்...
“நீ போம்மா… நான் பார்த்துக்கறேன்… தட்சாக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்…”
பிரம்மரிஷி அழுத்தம் திருத்தமாக கூறிவிட, பிரசுதியும் சரி என தலைஆட்டிவிட்டு அங்கிருந்து நகன்றார்…
“இஷான்… நீ சதியை கூட்டிட்டுப்போ…”
“சரி தாத்தா…..”
சொல்லிவிட்டு இஷான் சதியுடன் கிளம்ப,
“கையைக் காட்டு சிவா…” என்றார் அவர்…
“தாத்தா…!!!!!!!!!!!!...”
கீழே விழுந்ததில் ஜெய்க்கு கையில் அடிப்பட்டிருந்தது… அதனைப் பக்கத்தில் இருந்து கண்டவர் போல் பிரம்மரிஷி கூற திகைத்தான் ஜெய்…
“காயம்பட்ட இடத்துல மருந்து போடலைன்னா, காயம் ஆறாது சிவா...”
“ஆறவேண்டாம் தாத்தா… இருக்கட்டும்…”
விரக்தியாக சொன்னவனின் முகத்தினைப் பார்த்தார் பிரம்மரிஷி…
அவனின் கையைப் பிடித்து அங்கிருந்த சில மூலிகைகளைப் பறித்து அவர் சாறெடுத்து பிழிந்து விட்டார்…
“கொஞ்சம் எரியும்… பொறுத்துக்கோ சிவா…”
“எரிஞ்சிட்டு தான் தாத்தா இருக்கு ரொம்ப நாளா…..”
தனக்குள்ளே நினைத்துக்கொண்டவன் எதுவும் கூறாமல் பிரம்மரிஷியிடம் இருந்து விலக முற்பட,
“இன்னும் ஒரு பரீட்சையை நீ கடந்து தான் ஆகணும் சிவா…”
நடப்பதை முன் கூட்டியே கணித்தவர் போல் அவர் கூற, அவன் விழிகளில் வியப்பு குடிகொண்டது…