09. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி
ஐந்தாம் நாள்
அன்று வீட்டின் அழைப்பு மணி சத்தத்தை கேட்டு கதவை திறந்த அனிதாவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது! விழிகள் உருண்டு விழுந்துவிடும் அளவிற்கு வந்தவர்களை பார்த்து விழித்தாள் அவள்.
“உள்ளே வரலாமா?".. அவர்கள் கேட்டதும் திரு திருவென விழித்தவள், அவர்கள் மீண்டும் “அனிதா நாங்க உள்ளே வரலாமா?" என சற்று அழுத்தாமாக கேட்டு வைத்தனர். அவர்களின் அழுத்தமான குரலை கேட்ட பின்னரே தான் அவர்களுக்கு பதில் சொல்லாமலும் வழி விடாமலும் வாசலை மறைத்துக்கொண்டு நிற்பது புரிந்தது அவளுக்கு.
"ஹான் வா.. வாங்க". அவள் நகர்ந்து வழிவிட்டு நிற்க உள்ளே வந்தவர்களின் கண்கள் அந்த வீட்டை அளசியது.
"வினிதா எங்க?” அவர்களின் குரலில் ஒரு பதட்டம்!
"அவ ரூம்லதான் தூங்குறா"
“இவ்வளவு நாள் அவள் எங்க இருந்தா?”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
“ஹான்.. என்ன?” என்று அனிதா புரியாதவள் போல கேட்கவும், அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு வினிதாவின் அறைக்கு செல்ல எத்தனித்தனர். சரியாய் அந்நேரம் அங்கு வந்து சேர்ந்தாள் சித்ரா. அவர்களை அங்கு அந்த நேரத்தில் எதிர் பார்க்காததால் அவளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது..!
அவர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என தெரியாமல் அவள் அனிதாவை பார்த்து செய்கையில் கேட்க, தனக்கு தெரியாது என இடது வலமாக தலை அசைத்தாள் அனிதா. அவர்கள் இருவரும் குழம்பி விழித்து கொண்டிருந்த நேரம் ரூபன் ஃபோனில் அழைத்தான்.
“ஹலோ ரூபன் நீங்களும் மகேனும் இங்க வர முடியுமா?” அவளின் கேள்வி அவனுக்கு சரியாக கேட்டவில்லை! ஆகையால் சதாரணமாய், “வினிதா எப்படி இருக்கா?” என்றான். அவனுக்கு பதில் சொல்லாமல் கைதொலைபேசியை எடுத்து பார்த்து “இவனுக்கு காது செவுடா?” என மனதில் நினைத்து முறைத்தாள் சித்ரா.
அவன் மீண்டும், “ ஹலோ சித்ரா.. லைனில் இருக்கீங்களா?” என்று கேட்க,
“ம்ம்.. அவ துங்கறா” என்றாள் அவள்.
“சரி” ஒற்றை சொல்லில் பதிலை முடித்துக்கொண்டு அழைப்பை கட் செய்ய இருந்தவனின் காதில் சித்ரா ஏதோ சொல்லுவது விழ மீண்டும் காது கொடுத்தான்.
“ஹலோ ரூபன், நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே?”
“என்ன கேட்டீங்க?”
“நீங்களும் மகேனும் இங்க வர முடியுமா?” அவள் அவசரமாக கேட்ட விதத்தில்
“ஏன்?” என வினவினான் ரூபன்.
“அ..அது.. வினிதாவின் அண்ணனும் அண்ணியும் வந்து இருக்காங்க! ஏன்னு தெரியல..”
“ஓ!! எப்போ வந்தார்கள்? அதும் திடீர்ன்னு??” என்று கேட்டவன், அவள் பதிலுக்கு காத்திருக்காமல், “ ம்ம் சரி..நான் மகேனிடம் சொல்லி அங்க வர சொல்லறேன்.. நானும் வந்துடறேன்” என்றான். ரூபன் பேசிக் கொண்டு இருக்கும்போது அவன் பின்னால் ஒரு உருவம் தோன்றி மறைந்தது! அதன் முகத்தில் வெற்றி புன்னகை!அதை ரூபனின் அப்பா பார்த்து விட, அவர் அவனை நெருங்கி செல்லும் முன்பே அது சுவற்றினுள் மறைந்தது. நடப்பதை கவனித்துக் கொண்டே அவனை தேடி வந்தார் அவர்.
“நீ யாருடன் பேசின? ”அவர் சந்தேகத்துடன் கேட்க,
“ஏன்?” என்றான் ரூபன்.
“இல்ல நீ பேசிட்டு இருக்கும்போது உனக்கு பின்னால் ஒரு உருவம் தோன்றி மறைஞ்சது..”
“பச்…. உங்களுக்கு வேற வேலை இல்லையா?”. ரூபனின் சலிப்பு அவரை கோபப்படுத்தவில்லை. இது அவன் எப்போதும் சொல்லுவது தானே?
"நான் பார்த்தது பொய்யாகாது ரூபன்.. இன்று மதியத்திலிருந்து உன்னை நான் பார்த்துட்டுதான் இருக்கேன்..நீ நிலையான சிந்தனையில் இல்லாமால் இருக்க! அவப்போது பைக்கின் கண்ணாடியையும் உனக்கு பின்னாலும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு இருக்க!!”. அவனின் நடவடிக்கையை கண்காணித்ததை அவர் சொன்னார்.
“ம்ம்ம் ஒன்னும் இல்லப்பா! எனக்கு வெளியே போகும் வேலை இருக்கு.. நான் வினிதாவின் வீட்டுக்கு போகனும்.. அவளுக்கு வேற உடம்புக்கு முடியலை..” என்றான் அவன் தன் தந்தையை நேராக பார்ப்பதை தவிர்த்தபடி.
அவனின் அச்செயலே அவரின் உள்மனதில் தான் பார்த்த அந்த கோர உருவத்திற்கும் அந்த வீட்டிற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதை சுட்டிக் காட்டியது. உடனே, “நானும் உன்னுடன் அங்கு வரேன்..”என சொன்னார்.
“இல்ல.. என்னால உங்களை அங்க கூட்டிச் செல்ல முடியாது..”. அவனின் மறுப்பே அவருக்கு அங்கு ஏதோ சரியில்லை என புரிய வைத்தது.
“சரி நீ போ! எனக்கு அங்கு எப்படி வரனும்ன்னு தெரியும்..” என்றார் உறுதியுடன்
இது ரூபனுக்கு பிடிக்கவில்லை. அவனுக்கு தெரியும் இவர் தான் இல்லாமல் அங்கு வந்து விடுவார் என்று. சில நிமிடங்களின் போசனைக்கு பிறகு “அங்கே வந்து, பேயி பிசாசுன்னு ஏதும் சொல்லாமல் இருந்தால் மட்டுமே நான் உங்களை என்னுடன் அழைத்து செல்லுகிறேன்” என அவனின் நிபந்தனையை சொல்ல,
“அது அங்கு உள்ள சூழ்நிலையை பொறுத்து உள்ளது” என்றார் அவர். இந்த பதில் அவனுக்கு பிடிக்கவில்லைதான்! இருந்தாலும் அவரையும் உடன் அழைத்து சென்றான்.