நாராயணன் தன் அறையில் இருந்த துணிப்பெட்டியின் அருகே அமர்ந்தார். அந்தப் பெட்டியையே பார்த்துக்கொண்டிருந்தார். 'தன்னைப் பெற்றவள் நினைவே இந்த பிள்ளைகளுக்கு இல்லையே. என்ன தான் வயிற்று சொந்தமாய் இருந்தாலும், இறந்தபின் சிறிது காலத்திலேயே மறந்து வாழப் பழகிக்கொள்கிறார்கள். தான் இறந்துவிட்டால் கூட இதே நிலை தான் போலும். இது தான் வாழ்க்கை' என எண்ணினார் நாராயணன்
தன் படுக்கையின் கீழே இருந்த பெட்டியை குனிந்து மெல்ல இழுத்து வெளியே எடுத்தார். பெட்டியில் படிந்திருந்த தூசியைத் தன் மேல் துண்டால் மெல்ல துடைத்த பின்பு, பெட்டியைத் திறந்தார். அவர் மனைவியின் துணிமணிகள் இருந்தன.பொக்கிஷம் போல் பாதுகாத்து வந்த அவற்றை மெதுவாக வெளியே எடுத்து வைத்தார்..துணிகளின் வாசம் அவர் மனைவியின் தழுவலை நினைவுபடுத்தி அவரை அறியாமலேயே கண்களில் நீரை வரவழைத்தது.
மேலும் சில துணிகளை வெளியே எடுத்தவரின் கண்கள் சில நொடிகள் இமைக்க மறந்தன. இளம் வயது நாராயணன் தன் மனைவியோடு இருந்த புகைப்படம் அதிலிருந்தது. போட்டோ செல்லரித்து ஆங்காங்கே கிழிந்து முகம் கூட தெளிவாக புலப்படாமல் போயிருந்தது. தனது மூக்குக் கண்ணாடியைத் துடைத்து கண்களில் அணிந்தவர், தன் மனைவியோடு முதன் முதலாக எடுத்த புகைப்படத்தை சரியாக பராமரித்து பாதுகாக்க முடியாமல் போனதை எண்ணி வருத்தமுற்றார்.
அவர் நினைவுகள் அந்நாளை நோக்கிப் பறந்தன. கல்யாணமான புதிதில் போட்டோ ஸ்டுடியோவில் சிரிப்பும் பதற்றமுமாய் அவர்கள் நின்றதை எண்ணிப் பார்த்தார். புகைப்படம் எடுத்துவிட்டு வந்த நாள் முதல், அந்த புகைப்படம் எப்பொழுது கிடைக்குமென்று அவர்கள் ஏங்கியதை நினைவுபடுத்தினார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...
படிக்க தவறாதீர்கள்..
அந்த காலத்தில் வண்ண புகைப்படமெல்லாம் கிடையாது. கருப்பு வெள்ளை புகைப்படம் தான், இப்பொழுது கிடைப்பது போல் புகைப்படத்தை உடனே தந்துவிட மாட்டார்கள். ஒரு வாரம், இரு வாரங்கள் கூட ஆகிவிடும். அவ்வளவு நாட்கள் காத்திருந்து புகைப்படத்தை வாங்கிக்கொண்டு தன் மனைவியுடன் சேர்ந்து மகிழ்ந்த சுகமிருக்கிறதே, அதைச் சொல்ல ஏது வார்த்தை? அதற்கு ஈடு கொடுக்கும் மகிழ்ச்சியை அதன் பின் நாராயணன் அனுபவித்ததில்லை.
தன் மனைவியின் முதல் பார்வை, முதல் ஸ்பரிசம், ஆவலுடன் சேர்ந்த அந்த முதல் நாள், முதல் சண்டை, முதல் கண்ணீர் நெஞ்செங்கும் நீங்கா நினைவுகளுடன் நிழலாடியது நாராயணனுக்கு. அந்த நாட்களுக்கு மீண்டுமொரு முறை சென்று வரக்கூடாதா என ஏங்கினார். அவரால் எப்படி செல்ல முடியும். அதனால் தன் மனதை மட்டும் தான் வாழ்ந்த அந்த காலத்திற்கு அனுப்பினார். அது, நினைவுகளை இன்னும் அழகாய் பசுமையாய் காட்டியது.
இறுதியாக தன் மனைவி இறப்பதற்கு சில வருடங்கள் முன் எடுத்த புகைப்படத்தைத் தேடிய நாராயணனுக்கு அப்புகைப்படம் கையில் அகப்பட்டதும் விழிகள் விரிந்தன. அந்தப் புகைப்படத்தில் அவர் மனைவின் முகம் கிழிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் விழுந்தார்.
தொடரும்...
{kunena_discuss:983}