அமேலியா - 15 - சிவாஜிதாசன்
காரை மிதமான வேகத்தில் செலுத்தியபடி சென்றுகொண்டிருந்தான் வசந்த். காரில் இளையராஜாவின் காதல் பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது.
பயணத்தின் போது இளையராஜாவின் பாடல்களைப் போல் வழித்துணை கிடையாது. மனம் அமைதியாகவும் நிம்மதியோடும் இருக்கும். பல நினைவுகள் வந்து வந்து போகும். வானில் பறப்பதைப் போன்ற பிரம்மை தோன்றும். அவர் இசையில் கடவுளிடம் பேசிக்கொள்வது போன்ற உணர்வு ஏற்படும்.
அதே உணர்வோடு தான் வசந்த் பயணம் செய்தான்.ஜெசிகா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன ஜெசி அப்படி பாக்குற?"
"வித்யாசமா நடந்துக்குற"
"நானா? அப்படி என்ன வித்யாசத்தை பார்த்த?"
"நாம நண்பர்களாகி எத்தனையோ தடவை கார்ல போயிருக்கோம். அப்போ நீ இது போல பாட்டு போட்டுட்டு அப்பப்போ ஸ்மைல் பண்ணிட்டு இருந்தது கிடையாது"
வசந்த் சிரித்தான். "நிறைய தடவை இப்படி போயிருக்கேன். வேணும்னா ஜானை கேளு"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
"அவனை ஏன் இந்த நேரத்துல இழுக்கிற?"
"டென்ஷன் ஆகாத ஜெசி"
"எங்களுக்குள்ள ஒரு ஒப்பந்தம் இருக்கு"
"என்ன அது"
"சொன்னா கோச்சிக்கமாட்டியே?"
"அது நீ சொல்லப்போற விஷயத்தை பொறுத்து"
"எங்க வீட்டுக்கு ஒண்ணு வந்திருக்கே, அந்த பொண்ண திரும்ப அவங்க ஊருக்கே அனுப்ப ஜான் உதவுறேன்னு சொல்லிருக்கான்"
"நல்ல விஷயம் தான. அப்படி ஒரு உதவிய அவன் செஞ்சிட்டான்னா, உண்மையை சொல்றேன், அவன் வாழ்க்கைல உருப்படியா பண்ண ஒரே விஷயம் அதுவா தான் இருக்கும்"
வசந்த் சிரித்தான். காரின் வேகத்தை சற்று கூட்டினான். சிறிய மௌனம் அங்கு நிலவியது.
"ஆமா, எதோ ஒப்பந்தம்னு சொன்னியே, என்ன அது?"
"பாத்தியா மறந்தே போய்ட்டேன். அதான், அந்த உதவிய செஞ்சான்னா, உன்ன அவன் கூட சேர்த்து வைக்கிறதா சொல்லிருக்கேன்"
"சார், மாமா வேலைய எப்போதில இருந்து பாக்க ஆரம்பிச்சீங்க?" ஜெசிகா கோபத்தோடு கேட்டாள்.
"ஏய், ரிலாக்ஸ். அப்படி சொன்னா தான் அவன் ஹெல்ப் பண்ணுவான்"
"அதுக்கு நான் தான் கிடைச்சேனா? உண்மையிலேயே அந்த பொண்ண அவங்க ஊருல சேர்த்துட்டா, அப்புறம், ஜெஸிகாவை சேர்த்துவைனு சொன்னா என்ன செய்வ? கண்டிப்பா நான் கொலைகாரியா மாறிடுவேன்"
"அது அப்புறம் பாத்துக்கலாம். இந்த விஷயத்துல நான் தப்பிச்சா போதும்"
"நீ தப்பிக்கிறதுக்காக நான் பலிகடா ஆகணுமா?"
"உனக்கு எந்த பிரச்சனையும் வராது. நான் பாத்துக்குறேன்"
"என்னமோ பண்ணு. ஆனா அவனால எனக்கு ஒரு சின்ன டிஸ்டர்பன்ஸ் வந்தா கூட, அப்புறம் நான் மனுஷியா இருக்கமாட்டேன்"
கார் நகரத்தைக் கடந்து மலைப் பக்கமாய் சென்றது. ஆள் அரவமே இல்லாமல் எங்கும் பச்சை நிறம் தாங்கிய இயற்கை மட்டுமே பளிச்சென தெரிந்தது.
ஜெசிகா அமைதியாக அதையெல்லாம் பார்த்தாள். அவளது மனம் கொதித்துக்கொண்டிருந்தது. ஜானிடம் சண்டை போட்ட நாட்கள் நினைவுக்கு வந்தது.
தனது நிலையையும் மனதையும் ஜான் புரிந்துகொள்வான், தன்னை விட்டு விலகிவிடுவான் என எண்ணினாள். ஆரம்பத்தில் அவனும் அவ்வாறு தான் நடந்துகொண்டான். ஆனால், நாளாக நாளாக அவனது நடவடிக்கைகள் மாறத் தொடங்கின. சின்ன சின்ன சண்டைகள், பிறகு பெரிய சண்டை, என ஜானின் தொந்தரவுகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.
ஜெசிகா நீண்ட மூச்சை விட்டாள். அவள் நெஞ்சு தகித்துக் கொண்டிருப்பதை வசந்த் அறியவில்லை..
"ஜெசி"
"ம்ம் "
"இந்த பொண்ண என்ன பண்ணுறது?"
"புரியல"
"அவளால வெளிய சுதந்திரமா போக முடியாதுல்ல, அதுக்கு ஏதாச்சும் வழி இருக்கா?"
"அவளை ஏன் வெளிய அனுப்பணும்? வீட்டுக்குள்ளேயே இருக்கட்டும்"
"திடீர்னு யாராச்சும் வந்துட்டா? அதாவது, பிரண்ட்ஸ் இல்ல திடீர்னு ஏதோ ஒரு காரணத்துக்காக போலீசே வந்தா டக்குனு தப்பிக்கணும்ல?"
ஜெசிகா சிந்தித்தாள்.