12. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி
சொல்லியிருந்தாள் கண்மணி. தன் வாழ்வும் வாழ்வின் பயணமும் இனி சத்யனுடன்தான் என்று மிகத்தெளிவாய் சொல்லியிருந்தாள். முகத்தில் தெளிவு, குரலில் நிமிர்வு, கண்களில் காதலென நின்ற தோழியைப் பார்க்கையில் வெற்றியின் மனதில் தென்றல் வீசாமல் இல்லை. என்னத்தான் புன்னகையுடனும் துள்ளலுடன் பட்டாம்பூச்சியாய் கண்மணி தன்னுடன் சுற்றி வந்தாலும் அவளுக்கென ஒரு வாழ்க்கை துணை அவசியம்தான் என்று அவனே பலமுறை உணர்ந்துள்ளான்.
பலமுறை இதைப்பற்றி அவளிடம் பேசும்போதெல்லாம் தண்ணீரில் நழுவி ஓடிடும் மீனாக அவள் நழுவி விடுவாள். அப்படிப்பட்ட தன் தோழி இன்று காதலின் ஆட்சியில் விருப்பத்துடன் அடிமையாகி இருக்கிறாள். அவளுக்காக அவன் மனம் சந்தோஷப்படத்தான் தோன்றியது. ஆனால், இதெல்லாம் நடந்தது எப்போது?
எந்நேரமும் அவளருகிலேயே இருந்தவன் இன்று தூரம் தள்ளி வைக்கப்பட்டுவிட்டதுபோல உணர்ந்தான். இதெல்லாம் எப்போது நடந்தது? என்று ஒரு வார்த்தை கேட்டிருந்தால் எல்லாம் சரியாகி இருக்கும்தான்.
ஆனால் நான் கேட்டுதான் நீ சொல்ல வேண்டுமா? என்ற பிடிவாத எண்ணம் வெற்றிக்குள் தலைத் தூக்கியது. அதே நேரம் அவனது செல்ஃபோனும் பாடியது.
“விஹாஷினி” என்ற பெயரை பார்த்ததும், அதை கட் செய்ய போனவன், கண்மணி பார்வையாலேயே அதட்டவும் ஃபோனை எடுத்திருந்தான். விஹாஷினியின் திட்டம் எதையுமே அறிந்திறாத கண்மணி வெகு இயல்பாய் சத்யன் பக்கம் திரும்பினாள். நண்பனின் உரையாடலுக்கு சுதந்திரம் கொடுக்க அவள் நினைக்கையில், அவள் மனதினை படித்தவன் போல,
“வீட்டை சுத்தி காட்ட மாட்டியா கண்மணி?”என்று இதமாய் கேட்டான் சத்யேந்திரன்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...
படிக்க தவறாதீர்கள்..
“ ஹா ஹா ..பல ஃபாரின் லொகேஷன்ல டூயட் பாடும் ஹீரோ, நம்ம வீட்டை பார்க்கலன்னா எப்படி?”என்று கேட்டபடி கண்மணி அவனை அழைத்துக் கொண்டு நடந்தாள்.
“ஓஹோ.. நான் டூயட் பாடுறதையெல்லாம் ரசிச்சிருக்கியாடா? எப்படி நம்ம பெர்ஃபார்மன்ஸ்?”என்று கேட்டான் சத்யன் குறும்பு மின்னிடும் குரலில்.
நேற்று கேட்டிருந்தால், “நல்லா இருக்கு.. சுமார்” என்று எதையாவது சொல்லியிருப்பாள்கண்மணி. ஆனால் இன்று அவள் கண்ணெதிரில் நிற்பவன் அவளுக்கு மட்டுமே சொந்தமானவன் ஆயிற்றே.
இருப்பினும் தனக்கே உரிய தெளிவான சிந்தனையை பற்றிக் கொண்டு பதிலளித்தாள்.
“ நடிகன் சத்யனுக்கு எந்த காட்சியை கையில் கொடுத்தாலும் அதை வெகு சிறப்பாக படைக்கும் திறமை இருக்கு! இது எல்லாரும் அறிஞ்ச விஷயம்..அதனால் நான் மட்டும் விதிவிளக்காகவா பதில் சொல்லுவேன்?”என்றாள்.
அவள் பேச்சினில் சொக்கித்தான் போனான் சத்யன். அவனும் நன்றாக பேசத் தெரிந்தவன்தான்!பல ஜாம்பவான்கள் எழுதிய வசனங்களுக்கு தன் நடிப்பினால் உயிர் கொடுத்தவன் தான்.. ஆனால் அவள் பேசும் வார்த்தைகள் மட்டும் ஏதோ மாயசக்தி கொண்டவையோ என்று தோன்றியது அவனுக்கு.
“பெண்ணே,
உன் இதழ்கள்,
அலட்சியமாய் சிதறும் வார்த்தைகள் எல்லாம்,
என் இலட்சியமாய் மாறி, மயக்கிடும் கலையை
என்னவென்று உரைப்பேன்?”
“ஆனால்..”
“என்ன ஆனால்?”
“நிஜத்தில் சத்யனுக்கு ரொமான்ஸ் கம்மியாகத்தான் வரும் போல”என்று சொல்லி குறும்பாய் சிரித்தாள் அவள்.
“அடிக்கள்ளி… நீ இப்படியெல்லாம் பேசுவியா?”என்று வாயைப் பிளந்தவன், தான் இங்கு வந்ததே அவளை சமாதானப்படுத்தி தைரியமளிக்கத்தான் என்ற உண்மையை மறந்தே போயிருந்தான்.
“ ஹா ஹா.. பேசினதுக்கே இப்படியா?”என்று மீண்டும்கண்மணி அவனை சீண்டவும், அவளது காதலெனும் பேரலையில் மூழ்கி போயிக்கொண்டிருந்தான் சத்யன்.
இன்னொரு பக்கம், தவறென்று தெரிந்துமே வெற்றியின் நட்பின் ஆழத்தை சோதித்து கொண்டிருந்தாள் விஹாஷினி. அடிப்படையில் அவளும் நல்லவளே ! எனினும் காதல் யாரைத்தான் விட்டு வைத்தது.இதுவரை தனது காதலுக்கு துணை நின்ற கண்மணியை தனது சகோதரியை போல பாவித்த்வள், நேற்று அந்த விருதுக்கு தன் பேச்சினை கேட்காமல் சென்று விட்டாளே என்ற கோபம் அவளை மாற்றியது.
கண்மணி முடியாது என்று சொன்னபோது கூட அவளுக்கு கோபம் எழவில்லை. எனினும் தான் கணித்ததுபோலவே தன் வீட்டார் கண்மணி மற்றும் வெற்றியைப் பற்றி கேள்வி கேட்கவும், எரிச்சலுற்றாள் விஹாஷினி.
“எத்தனையோ பேரு பொய்யா காதலிக்கிறாங்க! சிலர் தங்களுடைய தேவைக்காக காதலை ஆயுதமாக பயன்படுத்துறாங்க! நான் அப்படி என்ன பண்ணினேன்? ஏன் என் காதலில் மட்டும் இத்தனை தடங்கள்? ஏன் நான் மட்டும் எனக்கு வேண்டிய ஒன்றிற்காக அனைவரிடமும் கெஞ்ச வேண்டும்?” ஆயாசமாக உணர்ந்தாள் விஹாஷினி. அந்த எண்ணமே அவளை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றியிருந்தது. காலையில் செய்தி தாளை பார்த்தவள் செவ்வனே திட்டமொன்றை தீட்டி இப்போது செயல்படுத்தி கொண்டிருந்தாள்.