மகாதேவனைக் கண்டதும் ஒருகணம் தட்ச பிரஜாபதிக்கே அந்த எம்பெருமானைக் கண்டது போலவே இருந்திட, முகத்தில் தெறிக்கும் கோபத்துடன் அவனை பார்த்தவர்,
“நிறுத்துங்கள்….” என்ற சத்தத்துடன் மக்களிடம் திரும்பினார்…
அவரின் சத்தம் கேட்டு, மக்கள் பயந்து நடுங்க, மகாதேவனோ சிரித்தான்…
“நிறுத்து உன் சிரிப்பை… நான் யாரென்று அறிவாயா நீ?....”
பெருங்குரலெடுத்து அவர் கத்திட,
“அவரை முதலில் யார் என்று அறிவீர்களா தாம்?...”
தேவமகரிஷியிடமிருந்து கேள்வி சட்டென வந்தது….
“இவனை அறிந்து கொள்ள என்ன இருக்கிறது?... இவன் யார் முதலில்?...”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
பிரஜாபதி இகழ்ச்சியுடன் கூற
“அவரை அறிந்து கொள்ளவில்லை என்றால், தாங்கள் தங்களையே அறிந்திருக்கவில்லை என்று அர்த்தம் ஆகும் பிரஜாபதி தட்சரே…” என்றார் தேவமகரிஷி ஓர் அழுத்தத்துடன்…
“போதும்… நிறுத்துங்கள் உங்கள் அறிவுரையை… தாங்கள் வந்த வேலை முடிந்துவிட்டதல்லவா?... கிளம்புங்கள்…”
“இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது….”
சொல்லிவிட்டு தேவமகரிஷி மகாதேவனையும், சதியையும் பார்த்திட, தட்சரோ அதனை கவனிக்கவில்லை…
“அதுதான் அனர்த்தத்தை நிகழ்த்தி விட்டீர்களே… இன்னும் என்ன வேலை காத்திருக்கிறது தங்களுக்கு இங்கே?...”
“எந்த அனர்த்தமும் நேராமல் தடுக்கவே யாம் இங்கு வந்தோம்… கூடவே எமது மகாதேவனின் தரிசனத்தையும் பெற்றுக்கொண்டோம்… அதுவும் தங்களின் கருணையால்… தங்களுக்கு என்றும் யாம் கடமைப்பட்டவனாவோம்…”
கையெடுத்து அவர் பிரஜாபதியை வணங்கிட, அவருக்கோ எல்லையில்லாத எரிச்சல் வந்து மூண்டது மனதில்…
“தேவி சதியின் உண்மையான பக்தியே அவரை இங்கு வரவழைத்திருக்கிறது… அதற்கு யாம் சதி தேவிக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிக்கிறோம்…” என்றவர் சட்டென சதியின் பக்கம் திருப்ப,
“எதற்காகவோ இங்கு வந்தவனை, என் மகள் அழைத்ததால் வந்திட்டான் என்று கூறுவதை முதலில் நிறுத்துங்கள் தேவமகரிஷி….”
பிரஜாபதி கூறியதும், மறுத்து பேச இருந்த தேவமகரிஷியைத் தடுத்தான் மகாதேவன்…
“பிரஜாபதி தட்சரே… என்னை மனமுருக யாரோ அழைத்தார்கள்… அதனாலேயே யாம் இங்கு வர நேரிட்டது… ஆனால் இங்கு வந்த பின்னர் தான் தெரிந்தது, அது யாரென்று….”
சொல்லியவரின் பார்வை, செல்லும் திசை உணர்ந்த பிரஜாபதிக்கு கோபம் மேலும் பெருகியது…
“உன்னை யாரும் நினைக்கவும் இல்லை… அழைக்கவும் இல்லை… செல் இங்கிருந்து உடனேயே…”
அவசரமாய் அவர் ஆணையிட, அவனோ சிரித்தான்…
“உனது இந்த கோஷக்கூட்டங்களையும் உன்னுடனே அழைத்துச் சென்றுவிடு…”
“எனக்கென்று நான் எந்த கூட்டத்தினையும் வைத்துக்கொள்ளவில்லை… அவர்கள் என்மேல் உள்ள பிரியத்தில் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்…”
“உன் பிதற்றலை நிறுத்து… அதைக் கேட்க நான் தயாராக இல்லை… எனக்கு அதற்கு நேரமும் இல்லை…”
“யாரிடம் பேசுகிறீர்கள் என்பதனை உணர்ந்து பேசுங்கள் பிரஜாபதி தட்சரே…”
குறுக்கிட்டார் தேவமகரிஷி…
“நான் தட்ச பிரஜாபதி… இந்த பிரம்மாபுரத்தை படைத்திட்டவன்… யாரிடம் எப்படி பேச வேண்டுமென்ற வரைமுறையை தாம் எனக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை தேவமகரிஷி… அதை முதலில் தாம் தெரிந்து கொள்ளுங்கள்…”
“என்று மனிதனுக்கு ஆணவமும், தலைக்கணமும் அதிகமாகிறதோ அன்றே அவன் அழியத்தொடங்குகிறான்… பிரஜாபதி தட்சரே… தாமே இந்த பிரம்மாபுர உலகத்தை படைத்தவராக இருக்கலாம்… எனினும் படைத்தவனுக்கு பொதுநலம் இருக்கவேண்டுமே தவிர, தன்னலம் இருக்க கூடாது… தன்னலத்துடன் செயல்படும் எதுவும், பொதுநலம் ஆகாது… தங்கள் புகழ், பெருமைக்காகவே பிரம்மாபுரத்தை படைத்தீர்களா?... அன்றி, உயிரினங்கள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் படைத்திட்டீர்களா?... தங்களின் படைப்பில் பொதுநலம் துளிகூட தெரியவில்லையே…”
“எனில் உன் நாட்டில் உள்ளவர்கள் உன் புகழ் பாடுகின்றரே அது மட்டும் தன்னலம் இல்லையா?...”
“நிச்சயமாக இல்லை… அவர்கள் என் மீது கொண்டுள்ள பக்தியில் அவ்வாறு செயல்படுகின்றனர்… ஆனால் அது அனைத்துமே, அந்த புகழை நான் விரும்பினால் தானே…”
“உனது இந்த வார்த்தைகளை மற்றவர்கள் வேண்டுமானால் நம்பலாம்… ஆனால் இந்த பிரஜாபதி ஒருநாளும் நம்ப போவதில்லை…. ஏனெனில் நான்…. பிரஜாபதி… தட்ச பிரஜாபதி….”
பிரஜாபதி அகங்காரத்துடனும், சிரமேறிய செருக்குடனும் கூற, மகாதேவேனோ லேசான புன்னகையை உதிர்த்துவிட்டு,
“தாம் தமது செயலை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை…” என்றவன், சட்டென அங்கிருந்து நகர, அவனைத் தொடர்ந்து தேவமகரிஷியும், அவரது சீடர்களும் கிளம்பிவிட,
அவன் அங்கிருந்து செல்வதை உணர்ந்த வேளை, பல அடிகள் அவன் முன்னே சென்றிருக்க, சதி சட்டென சில அடிகள் அவனை நோக்கி செல்ல முயல
“சதி………………….” என குரல் கொடுத்து அவளது ஓட்டத்தினை தடை செய்தார் பிரஜாபதி….