17. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி
கோவில் மணியின் ஓசை அவ்விருவரையும் வரவேற்பது போல இருக்கவும்,ஒரு பரவசமான மனநிலையுடன் சத்யேந்திரனுடன் நடந்தாள் கண்மணி. அவ்வப்போது அங்கிருந்தவர்களின் பார்வை சத்யனை பரிட்சயமாய் தழுவி வந்தாலும்,அதை சட்டை செய்யாமல் கண்மணி அவனுடன் வலம் வர, அவனை நெருங்கி கேள்வி கேட்டிட யாருக்கும் தைரியம் வரவில்லை.
“என்ன மாப்பிள்ளை சார், ஸ்க்ரிப்ட்டு எழுதி தந்தா மட்டும்தான் பேச்சு வருமா? மத்தபடி அபிநயம் மட்டும்தானா?”என்று அவனை சீண்டினாள் கண்மணி.
“நீ ஏன்மா சொல்ல மாட்ட, அதிரூப சுந்தரி..! ஒரு பக்கம் நீ ஒரு பக்கம் கூட்டம்.. எதை கவனிக்கிறதுன்னு தெரியாம நானே குழம்பி போறேன்”என்று சலித்துக் கொண்டான் சத்யன்.
“இதே கூட்டம் தியேட்டரிலோ இல்லன்னா அவார்ட் மேடையிலோ நிறைஞ்சிருந்தா உங்க மனசு ரசிக்கத்தானே செய்யுது?”என்று கூர்ந்து நோக்கி வினவினாள் கண்மணி. உண்மைதான் என்பதினால் அவனும் ஒருநொடி அமைதியாய் ஆமோதித்தான்.பின் தனது தனிப்பட்ட எண்ணத்தை பகிரும் நோக்கில் பதில் உரைத்தான்.
“ பூமியில இருந்து பார்க்குற எல்லா மனுஷங்களுக்கும் நிலா ஒன்னுதான் கண்ணம்மா!பல நேரங்களில் நிலாவின் பார்வையும் தங்கள் மீதுதான்னு மனுஷங்க நினைச்சு ரசிக்கிறாங்க..ஆனா அவங்களுக்கு புரியறது இல்லை, நிலாவின் பார்வை உணர்ச்சியற்றது.. அது எல்லாத்துக்கும் பொதுவானது.. அதனுடைய தேடல் அறிய முடியாத ஒன்னுன்னு!” என்றான்.
அவனை மெச்சியபடி பார்த்தாள் கண்மணி.
“என்னடா?”
“அதில்லை மாப்பிள்ளை சார்..எங்கிருந்து வருது இந்த உவமையும் கவி நயமும்?இப்படி பேசி பேசித்தான் முகம் காட்டாமலேயே என் மனசுல நின்னுட்டீங்களா?” என்று அவள் கேட்கவும் மீண்டும் மந்தகாசமாய் புன்னகைத்தான் சத்யன்.
“அதை நீதான் கண்ணம்மா சொல்லனும்..நானும் அந்த உண்மையை தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்!” என்றவன் சொல்லும்போதே, ஒரு பெண் அவனை மோதிட அவள் விழாதவாறு தாங்கி பிடித்தான் சத்யன். அந்த புதியவளின் அருகில் இருந்தவளோ இப்போது உற்சாகமாகினாள்.
“ஹேய் கீர்த்தி, நாந்தான் சொன்னேன்ல இது சத்யன்தான்னு சத்யனுக்கு வலது கையில் ஒரு மச்சம் இருக்கு”என்று அவள் கூவிட,அவனை மோதிய பெண்ணோ சினிமாவில் நாயகன் கைகளால்நிமிரும் நாயகியை போலவே மெல்ல அசைந்து கண் சிமிட்டி நாணினாள்.
“ஒரு..ஒரு செல்ஃபி எடுக்கலாமா?” என்று கேட்ட பெண்ணின் குரல் ஐஸ்க்ரீமாய் உருகிட சத்யனின் பார்வை கண்மணியின் மீது நிலைத்தது. அவளோ கூலாய்
“ம்ம் ஃபோட்டோ தானேப்பா? அதுவும் தங்கச்சிங்க கூட! தாராளமா எடுக்கலாமே” என்றாள் நமட்டு சிரிப்புடன். அவள் கண்களின் எதையோ கண்டவன் போல அவனும் சிரித்து கண்மணியின் தோளில் கைப்போட்டுக் கொண்ட போஸ் கொடுத்தான். மற்ற இரு பெண்களும் ஆச்சர்யம் தாளாமல் விழிகளை விரிக்க,
“ ஏன் அப்படியே நிக்கிறீங்க? வந்து என் வைஃப் பக்கத்துல நின்னுக்கோங்க!” என்றான் அழுத்தமாய் அதே நேரம் சிரிப்புடன்.
“வைஃப்பா?” என்று அவர்கள் ஆச்சர்யபட கூட நேரம் கொடுக்கவில்லை கண்மணி. அவ்விருவரில் ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுத்து தன்னருகில் நிறுத்திக் கொள்ள மற்றவளும்
“இந்த செல்ஃபி ரொம்ப அவசியமா?”என்ற சலிப்பில் முணகி கொண்டே ஃபோட்டோவை எடுத்தாள்.
“ஒகே சிஸ்டர்ஸ்! இப்போ ஃபேமிலி டைம்..சோ அதிகம் பேச முடியல.. இன்னொரு நாள் பார்க்க முடிஞ்சா பேசலாம்”என்று சத்யன் நாசுக்காய் விலக, அவன் தப்பித்து ஓடும் அழகை கண்மணி ரசிக்கவே செய்தாள்.
அவனை அதிகமாக சோதிக்காமல், சில நிமிட வேண்டுதலுக்கு பின் அங்கிருந்து அவனுடன் புறப்பட்டிருந்தாள். இதய ஏட்டில் நிலைப்பெற்ற அந்நாளை குறிப்பேட்டிலும் எழுதி வைத்து கொண்டனர் இருவரும்.
மறுநாள்!
விடிந்தும் விடியாத காலைபொழுது! தனது அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு சோம்பலுடன் கண் திறந்தாள் விஹாஷினி. இன்னொரு பக்கம் அவளது செல்போனும் சிணுங்கி இம்சித்தது.ஒரு கையில் ஃபோனை எடுத்தவள், “வரேன் !” எஎன்று குரல் கொடுத்தப்படியே ஃபோனை அட்டென் செய்தாள்.
எதிர்முனையில் வெற்றி “ ஹலோ!” என்று சொல்வதற்கும்,அவள் கதவை திறந்ததால் அவளின் தங்கை “வெற்றி வந்திருக்கார்”என்று சொல்வதற்கும் சரியாய் இருந்தது.
“ என்னக்கா இன்னக்குன்னு இப்படி தூங்குற? அவர் வருவார்ன்னு உன்கிட்ட சொல்லலையா?” என்று விஹாஷினியை அவளது தங்கை கேட்டிட, அவளோ எரிச்சலாக,
“என்னடீ உளறுற?அவர்தான் ஃபோன்ல கூப்பிடுறார் பாரு”என்றாள்.
“அய்யோ அக்கா! அவர் ஹாலில் இருந்துட்டேதான் ஃபோன் பண்ணுறாரு.. அப்பா வேற ஐயனாரு மாதிரி முறைச்சிட்டு உட்கார்ந்து இருக்கார்.. வீடு ரெண்டாகுறது குள்ள ஓடி வா”என்று இளையவள் உரைத்துவிட்டு சிட்டாய் பறந்து போனாள்.