11. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி
புவனா சஞ்சல மனதுடன் மலைக்கோவிலில் அமர்ந்திருந்தாள். அவளின் மடியில் அமர்ந்திருந்த அம்முக்குட்டி தன் அம்மாவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அருகில் அமர்ந்து இருந்த கணவனும் அவளையே தான் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த மலைமேலிருந்து பார்த்தால் அந்த ஊரில் உள்ள அனைத்தும் தெரியும். அந்தி சாயும் வேளையில் குளு குளுவென வீசும் தென்றலும் கண்ணுக்கு எட்டும் தொலைவில் பச்சை பசேலென்று தெரியும் காட்சிகள் யாவும் புவனா (தென்றல்) மனதை அமைதி படுத்தவில்லை.
அவளின் மனதில் சொல்ல முடியாத வலி, அது எதற்கு என்பதை அவளுக்கு சொல்ல தெரியவில்லை. ஏனோ திடீரென முளைத்த திட்டத்தை நம்பி போக முடியவில்லை. அவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஆபத்து வர போகிறது என்றது அவளின் உள்மனம்.
அவர்கள் கிளம்பும் நேரம் நெருங்கியது. “புவி இது நாம எடுத்த முடிவுதான் ஆனால் இன்னும் எவ்வளவு நேரம் இங்கயே இருக்க முடியும்..? மணி ஆகுதும்மா கிளம்பலாமா?” என ஆதி மென்மையாக கேட்க
“ம்ம்ம் சரி” என்று ஒற்றை சொல்லில் அவளின் பதிலை முடித்துக்கொண்டாள். காரில் அவர்கள் பயணிக்க குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
இது அவள் பிறந்து வளர்ந்த ஊர். அலுவலகத்தில் ஒரு முக்கிய மீடிங்க்காக சென்ற இடத்தில் ஆதியை சந்தித்தாள். பழகிய சில நாட்களில் இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு பிடித்து இருக்க, ஆதி அவனின் நண்பர்களுடன் புவனா பெற்றோரிடம் பேச, அங்கு அவர்களுக்கு கிடைத்தது என்னவோ அவமரியாதை தான்.
ஆதிக்கு பெற்றோர் இல்லை! அவர்களை போல அவனிடம் வசதியும் பணமுமில்லை என்பதால் புவனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நண்பர்களின் உதவியோடு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கென ஒரு சின்ன உலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ, சில மாதங்களில் புவனா தாய்மை பெற, அவர்களின் குழந்தையை பார்க்கும் ஆவலுடன் காத்து இருந்தனர்.
அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. புவிக்கும் ஆதிக்கும் அந்த சின்ன குடும்பம் முழுமை பெற்றதாக தோன்றியது. குழந்தையின் சின்னஞ்சிறு அசைவும், பொக்கை வாயின் சிரிப்பும் அவர்களுக்கு இந்த உலகத்தை மறக்க வைப்பதாய் இருந்தது.
குழந்தை பிறப்பதற்கு முன்னால் இருந்து ஆதியின் நண்பர்களின் முலம் தெரிந்த சிலரிடம் இருவரும் பழகினர். குழந்தை பிறந்த பிறகு அவர்கள் குள்ள நரியினர் என்பது தெரியாமலே அவர்களுடன் நெருங்கி பழகினர் புவியும் ஆதியும்.
மகிழ்ச்சியாக சென்ற இவர்களின் வாழ்கையில் புவியின் பெற்றோர்களால் அவ்வப்போது சிறு தொல்லைகள் நேர்ந்தன. எல்லாவற்றையும் அமைதியாக பொறுத்துக் கொண்டவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் அது முடியாமல் போனது.
அன்று ஒரு நாள் நல்ல மழை.. பல மணி நேரமாக மேகம் நிற்காமல் வேலை செய்ததில், சாலை முழுக்க சேரும் சகதியுமாக காட்சி அளித்தது. பள்ளங்கள் எல்லாம் தண்ணீர் நிரம்பி கிடைக்க, சாலை எது பள்ளம் எது தெரியாத வண்ணம் இருந்தது.
ஆதி மிக கவனமாக அவனின் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தான். அவனின் வாழ்வில் இன்று மிக முக்கியமாக நாள். அவனின் பிரசெண்டேஷன் வெற்றி பெற்றால் அவனுக்கும் அவன் வேலை செய்யும் அலுவலத்திற்கும் நல்ல பெயர் கிடைக்கும். மற்றும் பொருளாதார ரீதியில் அவர்களுக்கு மேலும் ஒரு நல்ல முன்னேற்றம் இது.
மனதில் அங்கு பேச வேண்டியதை சொல்லிக்கொண்டு செல்லுகையில் ஒரு வளைவில் சென்ற கார் அவனின் மேல் சாலையில் உள்ள அழுக்கு தண்ணீரையும் சகதியும் வாரி இறைத்து சென்றது. தட்டு தடுமாறி அவன் சாலை ஓரத்தில் பைக்கை நிறுத்தி சென்ற அந்த காரை பார்கையில், அது நிற்காமல் சென்றுக் கொண்டிருந்தது. அந்த காரின் நம்பரை பார்த்ததில் அவனுக்கு அதிர்ச்சியே! அது புவனாவின் அண்ணனின் கார்.
மீண்டும் அந்த வளைவை பார்த்தான். சென்ற அந்த கார் அந்த சின்ன பள்ளத்தை தவிர்த்து இருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை!!! இப்போ அவன் முழுவதுமாக நனைந்து ரோட்டில் உள்ள சகதியும் அவனின் மேல் பட்டிருக்க, அவனால் இந்த நிலையில் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் போனது. மேலும் முக்கிய ஆவணங்கள் எல்லாம் அவனிடத்தில் இருக்க, இந்த பிரசெண்டேஷன் பற்றிய விபரமும் மற்றவர்களுக்கும் தெரியாதலால், யாராலும் அவனுக்கு பிரதிநிதியாக செல்ல முடியாமல் போனது.
அவனால் உரிய நேரத்திற்கு சென்று பிரசெண்டேஷன் செய்ய முடியதலால் அவர்கள் கம்பனிக்கு வர இருந்த கிளைன்ட் வேறு ஒரு கம்பெனி உடன் ஒப்பந்தம் போட்டதால், அவனுக்கு வர இருந்த ப்ரோமோஷன் வராமல் போனது. இது அவனுக்கு மன உளைச்சலை உண்டாக்கியது.
பாவம் தெரியவில்லை அவனுக்கு அவனின் நண்பனே அந்த காரை ஓட்டியதும் நம்பர் பிளேட்டை மட்டும் சிறிது நேரத்திற்கு மாத்திருந்தான் என்றும்!! தனது எதிரி யார் என தெரியாமல் அவனுடனே பயணித்தான் ஆதி.
அது மட்டும் இல்லாமல், புவனாவின் பிறந்தநாளுக்கு பரிசை வாங்கி அவன் வீடு திரும்புகையில் ஒரு வாகனம் அவனின் பைக்கை உரசி செல்லுகையில் தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தான். அந்நேரம் சாலை ஓரத்தில் நடந்து சென்ற ஒருவர், அவனை இழுக்கையில் பின்னால் வந்த ஒரு கணரக வாகனம் அவனின் பைக்கின் மேல் ஏறியது... ஒரு கால் அந்த வழிபோக்கன் உதவில்லை என்றால் அவனின் நிலையை நினைக்கையில் குலை நடுங்கியது அவனுக்கு!!! ஏதும் ஆகி இருந்தால் அம்முவின் புவனாவின் நிலை என்ன ஆகி இருக்கும் என நினைத்து பார்க்க முடியவில்லை அவனால். சொற்ப காயங்களில் உயிர் பிழைத்தான் அன்று...