கிராம மக்கள் சாலையில் போராட்டம் செய்து அது கலவரமாகி அமெரிக்க ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி அந்த இடமே போர்க்களம் ஆனதைக் கண்டு .பல இரவுகளை தூக்கமில்லாமல் கழித்திருக்கிறாள்.
வீட்டு வாசலில் வசந்தின் கார் வந்து நின்றதைப் பார்த்த அமேலியா தன் சிந்தனையைக் கலைத்துவிட்டு துரிதமானாள்.
வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வசந்த் வருவதைக் கண்டு அவள் இதயத்துடிப்பு அதிகரித்தது. இரண்டு நிமிடத்தில் வீட்டின் காலிங்பெல் ஒலி கேட்டது. தயக்கத்தோடு கதவைத் திறந்தாள் அமேலியா.
வசந்த் உள்ளே நுழைந்தான் .அவன் கண்கள் அமேலியாவை நோக்கின. அமேலியாவின் கண்களோ தரையை நோக்கிக்கொண்டிருந்தன.
வீட்டினுள் நுழைந்த அடுத்த நிமிடமே, வீட்டில் அமேலியாவைத் தவிர யாருமில்லை என வசந்த் புரிந்துகொண்டான். 'இவளோட பேசலாமா? வேணாமா?' என வசந்த் எண்ணியபடி அமேலியாவை நோக்கினான். பின்பு, வேறு பக்கம் தன் பார்வையை ஓடவிட்டு சிந்தித்தான்.
'எப்பொழுதும், வந்தவுடன் மாடியில் உள்ள தன் அறைக்கு செல்லும் வழக்கமுடைய வசந்த், இன்று ஏன் தன்னையே வெறித்துக்கொண்டிருக்கிறான்' என பய உணர்வு கொண்டாள் அமேலியா. என்ன செய்வதென்று புரியாமல் விறுவிறுவென்று சமையலறைக்குள் சென்று தன்னை மறைத்துக்கொண்டாள்.
மீண்டும் அமேலியாவின் பக்கம் திரும்பிய வசந்த், அமேலியா அங்கு இல்லாததைக் கண்டு லேசாக அதிர்ந்தான். சமையலறையில் இருந்து சத்தம் வரவே அங்கு சென்று பார்த்தான். அமேலியா படபடப்போடு பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாள்.
வசந்த் மெதுவாக தொண்டையை செறுமியபடி உள்ளே நுழைந்தான். காட்டில் வாழும் பயங்கரமான மிருகத்தை நேரில் கண்டதை போல் பயத்தின் உச்சிக்கு சென்ற அமேலியா "வீல்!" என அலறினாள்.
அதைச் சற்றும் எதிர்பாராத வசந்த் திடுக்கிட்டான். சைகை மொழியில் அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்தான். அவன் கூறியது அமேலியாவிற்கு புரியவில்லை.
"பயங்கரமா தலைவலிக்குது, ஒரு காபி போட்டு கொடு" என்று சைகையில் கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்து ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தான் வசந்த்.
உண்மையில் அங்கு நடந்த நிகழ்வு அவனுக்கு தலைவலியைத் தான் உண்டாக்கியது. அமேலியாவிற்கு எப்படி புரியவைப்பது என்று அவன் தீவிரமாக யோசித்தான்.
சில நிமிடங்களில் அமேலியா காபி கோப்பையோடு வெளியே வந்தாள். வசந்த் நெற்றியைத் தேய்த்தபடி அமர்ந்திருந்தான். அமேலியா காபியை அவன் முன்னால் வைத்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் வேகமாய் சென்று மறைந்தாள்.
சமையலறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு.காபி கோப்பையை எடுத்து மெதுவாக உறிஞ்சினான் வசந்த். குமட்டிக்கொண்டு வந்தது. இருந்தும், கஷ்டப்பட்டு மெதுவாக குடித்து முடித்தான், மீண்டும் சமையலறைக்கு சென்றான். வசந்தை கண்டதும் அமேலியா பின்னோக்கி நகர்ந்தாள்.
காபி கோப்பையை வைத்துவிட்டு,.ஓவியமாக தீட்டவேண்டிய மாடல் பெண்ணின் புகைப்படத்தை அருகே வைத்துவிட்டு, "இந்த பெண்ணை ஓவியமாக வரைய முடியுமா?" என சைகையில் கேட்டான் வசந்த்.
அமேலியா அவன் மீது புரியாத பார்வையை வீசினாள். 'இதற்கு மேல் என்னால் உனக்கு புரியவைக்க முடியாது' என்று மனதிற்குள் எண்ணிய வசந்த் அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றதும், மாடல் பெண்ணின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள் அமேலியா. அவள் விழிகள் வெறுப்பைக் கக்கின.
"என்ன இது! இந்தப் பெண் மேலாடை இல்லாமல்....!!! சீ! வெட்கம் கெட்டவள்" என புகைப்படத்தைக் கசக்கி தூர எறிந்தாள் அமேலியா.
தொடரும்...
{kunena_discuss:983}