அமேலியா - 29 - சிவாஜிதாசன்
தனக்கு மிகவும் பிடித்தமான பாடலை முணுமுணுத்தபடி வெந்நீர் குளியலை அனுபவித்துக்கொண்டிருந்தான் ஜான். வசந்த் கூறிய சொற்கள் எல்லாம் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஜெஸிகா தன் காதலை ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கை நீண்ட நாள் கழித்து மெல்ல அவனுள் துளிர் விட ஆரம்பித்தது.
குதூகலம் தாங்கமுடியாமல் உரத்த குரலில் பாட்டு பாட ஆரம்பித்தான் ஜான். அந்த தனிமையான இடத்தில் யார் வரப் போகிறார்கள் என்ற எண்ணமும் அவன் தைரியத்திற்கு காரணமாய் அமைந்தது. திடீரென கதவு தட்டப்படும் ஓசை கேட்டு பாட்டை நிறுத்திய ஜான், பாதி குளியலோடு இடுப்பில் டவல் கட்டிக்கொண்டு கதவை திறக்க வந்தான்.
அவன் கதவை நெருங்கவும் கதவு இடிந்து விழும் அளவு பலமாக தட்டப்பட்டது. ஜான் திகிலை மூஞ்சில் பூசியபடி தடுமாற்றத்தோடு நின்றான்
முந்தின நாள் தொலைக்காட்சியில் அமானுஷ்ய படமான 'தி ரிங்' பார்த்ததை எண்ணினான். அந்த பேயைப் பார்த்தவர்கள் ஒவ்வொருவராக மரணிப்பார்கள் என்பது கதை. அந்த பேய் தான் வந்துவிட்டதோ என சில நொடிகள் நினைத்தவன், 'சே சே இது என்ன முட்டாள்தனமான கற்பனை' என தலையில் அடித்தபடி கதவைத் திறந்தான்.
திடீரென ஐந்தாறு நபர்கள் கேமராவும் கையுமாக பெரிய பெரிய பைகளை தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
அதைச் சற்றும் எதிர்பாராத ஜான் சுதாரித்துக்கொண்டு, "யார் நீங்க?" என ஒன்றும் புரியாமல் கேட்டான்
"கேமராவை இங்க வை...ஷூட்டிங்க்கு ஏத்தா போல வீட்டை மாத்துங்க...லைட்ஸ் எல்லாம் அரேஞ் பண்ணுங்க...கோ கோ பாஸ்ட்"
'என்னடா நடக்குது இங்க' என தனக்குள்ளாகவே முணுமுணுத்த ஜான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என கண்காணித்தான்.
"ஹால்ல பாத்ரூம் போல செட் போடுங்க...மாடல் குளிச்சிட்டு வரப்ப அப்படியே கேமராவுல பதிவு செய்யணும்"
"நான் குளிக்குறதை நீங்க ஏண்டா படம் எடுக்கணும்? என்னடா இது அக்கிரமமா இருக்கே"
"யார் சார் நீங்க?" வந்தவர்களில் ஒருவன் கேட்டான்.
"என் வீட்டுக்குள்ள வந்து நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? அதை முதல்ல சொல்லுங்க"
"ஓ! சாரி சார் நாங்க ஷூட்டிங் கம்பெனியில வேலை செய்யுற ஆட்கள். இன்னைக்கு வரோம்னு உங்களுக்கு சொல்லியிருந்தோமே"
"அப்படி யாரும் என்கிட்டே சொல்லலையே"
"வசந்த் சார் உங்க கிட்ட சொல்லலையா? சரி விடுங்க, எங்களுக்கு நிறைய வேலை இருக்கு தொந்தரவு செய்யாதீங்க"
"சரி நான் குளிச்சிடுறேன்"
"சாரி சார் பாத்ரூம்ல கூட எங்களுக்கு ஒர்க் இருக்கு".என்று கூறி வேலையை துவங்கிவிட்டான் பேசிக்கொண்டிருந்தவன்.
பாதி சோப்பு நுரையோடு இடுப்பில் டவலைக் கட்டியபடி தனது வீட்டின் வெளியே தன் நிலையை எண்ணி நொந்தபடி நின்றுகொண்டிருந்தான் ஜான்.
அரக்க பரக்க காரை ஒட்டியபடி வந்த வசந்த், ஜான் முன்னால் காரை நிறுத்திவிட்டு இறங்கினான். கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வேலைப் பளுவால் உறக்கத்தை தொலைத்த வசந்த் சோர்வோடு தலையை தேய்த்தபடி வீட்டின் வெளியே வேலை செய்துகொண்டிருந்த ஷூட்டிங் ஆட்களிடம் நிலைமையை விசாரித்து வீட்டின் உள்ளே செல்ல முற்பட்டான்.
"ஹலோ வசந்த்" கோபத்தை கட்டுப்படுத்தியபடி ஜான் அழைத்தான்.
ஜானை அருவெறுப்போடு நோக்கிய வசந்த், "யார் இவன மாதிரி ஆட்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள்ள விட்டது?" என்று அங்கிருந்தவர்களிடம் எரிந்து விழுந்தான்.
"நான் யாருனு உனக்கு தெரியல?"
"யார் நீங்க?"
"என்ன நல்லா பாரு"
"ஜான்! நீயா? சாரி சாரி. இந்த டிரஸ்ல உன்ன பாத்ததே இல்லையா. அது மட்டும் இல்லாம நான் வேற ஒர்க் டென்ஷன்ல இருந்தேன்"
"இது உனக்கு ட்ரெஸ்ஸா?"
"சாரிடா. ஆமா நீ ஏன் இந்த நிலமைல இருக்க?"
"உனக்கு உதவி பண்ணினேன்ல. நியாயமா பாத்தா ரோட்ல இந்த துண்டு கூட இல்லாம தான் நிக்கணும். ரோடு ரொம்ப தூரமா இருக்குன்னு இங்கயே நின்னுட்டேன்"
"கோவப்படாத ஜான். நீ தான் இதுவரை ஷூட்டிங் பாத்ததே இல்லைனு சொன்னியே. இன்னைக்கு என்ஜாய் பண்ணு"
அப்போது ஷூட்டிங் வேன் ஒன்று அங்கு வந்தது. அதிலிருந்து ஏராளமான மனிதர்கள் இறங்கி வந்தனர்.
"யார் இவங்க எல்லாம்?" என்று ஜான் கேட்டான்.
"எல்லோரும் ஒர்க்கர்ஸ்"