தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 08 - லதா சரவணன்
கவிதை எழுதி அதை உரையில் இட்டு நிலா வரும் வரையில் காத்திருந்தான் கதிரவன். நிலா தன் தடைகளை மீறி வரத் துடித்துக்கொண்டு இருந்தாள். இரவு பகலாகி என் நினைவு நெருப்பாகி சுட்டெரிக்க நீ எங்கே என் வானம் முழுவதிலும் உன்னைத் தேடுகிறேன். அங்கே தொலைவில் சூரியக் காதலன் என் கருப்பு போர்வையை நீக்கி வான வீதியில் மேக் தோட்டத்தில் என் பிறை நெற்றியில் ஒற்றை விரல் கொண்டு நட்சத்திர திலகமிடும் என் மணவாளனாக காத்திருக்கிறான். அவனின் ஒற்றை உரசலைக் கேட்டு, தீயைப் போல எரியும் அவன் பகலை குளிராய் மாற்றிட அவனின் இரவுக்காதலி நிலா வருகிறாள் என்று சொல்லுங்கள் ?!
அன்னத்தைத் தூது விட நேரம் இல்லை, மடல் எழுதிட விரல்களில் சக்தி இல்லை, என் மன குமுறல்களை எல்லாம் நட்சத்திரமாய் கொட்டி வைத்தேன் என்னைக் காண வரும் சூரியக் காதலனின் வருகைக்காய் காத்திருந்து சூனியமான என் இரவுதனை வெளிச்சமாக்கிட வா......வா...........வா...............!
நீ என்ன சொல்றே ? லட்சணா ?
ம்... இந்த சுப்ரியா ஒரு விலைமாது..... இந்த டைரியில் அவங்க சில விஷயங்களைக் குறிப்பிட்டு இருக்காங்க, விட்ட இடத்தில் இருந்து டைரியைப் புரட்ட ஆரம்பித்தனர் அசோக்கும் லட்சணாவும்.
உதவின்னு கேட்டவன் இத்தனை பெரிய உதவியைக் கேட்பான் சத்தியமாக எண்ணவில்லை சுப்ரியா. பெரிய இடத்துப் பையன் காலால் இட்ட வேலையை தலையால் செய்யக் காத்திருக்கும் ஆட்களுக்கு மத்தியில் தன்னிடம் வந்து ஏன் இப்படியொரு உதவியைக் கேட்கவேண்டும் இது தன்னால் செய்ய இயலாத உதவியில்லை என்றாலும், என் மூலம் ஒரு குழந்தையா ? எப்படி மனம் ஒப்பும் ? நான் செய்த பாவம் எல்லாம் போதாதா ? ரவியின் மனைவிக்கு இது தெரிந்தால் ..... வேண்டாம் அவள் வாழ்வில் நான் குறுக்கிட விரும்பவில்லை அந்த முட்டாள் ரவி வந்தால் உடனே சொல்லிவிட வேண்டும் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று ! நேற்று யோசிக்க அவகாசம் கொடுத்துவிட்ட போனவன் இப்போது வந்திருக்கிறான் என்பதை வாசலில் அழைப்பொலி உணர்த்தியது.
யாசகம் கேட்கும் நிலையில் அவன் ? என்னை மன்னிசிடு ரவி எனக்கு .. இது சரிப்பட்டு வராது, தாய்மை புனிதமான விஷயம் என் கருப்பைக்கு சக்தியிருக்கிறது என்று அதை குலைக்க நான் தயாராக இல்லை, உடலை விக்கிற நான் வயிற்றை விக்க ஆசைப்படக்கூடாது. ரவி விஞ்ஞானம் இப்போ எவ்வளவோ வளர்ந்திருக்கு. எனக்கு தெரிந்த டாக்டர்ஸ் இருக்காங்க இறுதியா ஒரு முயற்சி பண்ணிடலாமே உனக்கும் உன் மனைவிக்கும் இன்னமும் வயசாயிடலையே ? அப்பறம் என்ன ?
அது முடியாதுன்னு தானே நான் உன்கிட்டே வந்திருக்கிறேன் உன் தயக்கம் என்ன சுப்ரியா ஒளிவு மறைவில்லாமல் என்னிடம் பேசிடறேன்... ஒருவேளை என் மனைவி ஏதாவது நினைப்பான்னு யோசிக்கிறியா ? அவளோட முழு சம்மதத்தோடதான் இது நடக்குது. உன்னைப்பற்றி அவகிட்டே நான் சொல்லியிருக்கிறேன் சுப்ரியா. தகுதி தகுதின்னு கேட்குறீயே இன்னொருத்தியா இருந்தா நான் ஒண்ணும் தெரியாத வயசிலே உன்கிட்டே மயங்கி கிடந்ததுக்கு என்னை கைக்குள்ளேயே வைச்சிருப்பா, ஆனா நீ என் நலத்தைத்தானே விரும்பினே. உன்னாலதான் ரியா அவளுக்கு இந்த வாழ்க்கையே கிடைச்சிருக்கு, இப்போ ஒரு குழந்தையும் கிடைக்கப்போகுது.
நீ என்னை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்குறே ?! ரவி உன் சமூகத்திலேயே எத்தனையோ பேர் வாடகைத்தாயா இருப்பாங்களே ?! அதுவும் படித்த பெண்கள், குடும்பக் கஷ்டத்திற்காக இதை ஒரு வேலையாவே எடுத்து செய்யறாங்களே அவங்களையெல்லாம் விட்டுட்டு என்னையேன் ?
நமக்குள்ளே ஆரம்பத்தில் இருந்தே ஓடிய ஒரு இழை, நட்பையும் கடந்து உடலையும் கடந்து இணைந்திட்ட ஒரு உணர்வு, என் நினைவுகளோடு மனதை நேசிப்பவளின் வயிற்றில் வளரும் குழந்தை என் குழந்தைதானே ரியா. உன்னைவிட்டுப் பிரியணுமின்னு நான் நினைக்கலை, அனால் திருமணம் என்ற பந்தம் என்னைக் கட்டிப்பபோட்டது. என் உறவுகள் சமூகம் இதைக் கடந்து என்னாலே வெளி வர முடியலை, நீயும் அதுக்கு ஒப்புக்கலை, இப்பவும் என் மனதில் காதல் மனைவியாய் நீ இருக்கிறது நிஜ்ம் ரியா. கல்பனா கிட்டே நான் எதையும் மறைக்கலை, நம் பழக்கம் உட்பட, நம்முடைய காதல் கல்யாணத்தில் முடியாம இருந்திருக்கலாம், ஆனா நான் உன்னை நினைக்காத நிமிடங்களே கிடையாது.
ஒரு வகையில் இந்தக் குழந்தை உன் மூலமாக கிடைக்கணுமின்னுதான் கடவுள் கல்பனாவோட கர்பப்பபையைக் கட்டிப்போட்டாரோ என்னவோ ? இப்பவும் நான் உன்னைக் கட்டாயப்படுத்தலை, ஆனா குழந்தைன்னு எனக்கு ஒண்ணு பிறந்தா அது உனக்கும் எனக்கும்தான் பிறந்ததுதான். அதற்கு நல்ல தாயா நிச்சயம் கல்பனா இருப்பா ?! நான் உன்னையும் விட்டுடமாட்டேன். என் அன்பு நான் இறக்கும் வரையிலும் தொடரும் இனிமே என்னைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை ரியா மறுபடியும் உன் வாழ்க்கையில் இணைய எனக்கு ஒரு வாய்ப்பு கொடு. கல்பனாவை நாளைக்கு கோவிலுக்கு கூட்டி வர்றேன் அங்கே வச்சு மேற்கொண்டு பேசிக்கலாம் என்று சுப்ரியாவிற்கு வேண்டிய விளக்கங்களைத் தந்துவிட்டு வெளியேறினான் ரவி.