06. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ்
தீபக் முகம் வெளிறிப் போய்க் கிடந்தான். எப்போ எப்படி வீடு வந்து சேர்ந்தானென்றே தெரியாத மனநிலையில் இருந்தான்.கதவைத் திறந்த அம்மா அவன் முகத்தைப் பார்த்தவுடன்
“என்னடா? ஏன் ஒருமாதிரியா இருக்கே? “ என்றாள் பதறியபடி
“ஒண்ணுமில்லேம்மா”
சுபா …………….இங்கே வா உன் தம்பியைப் பாரு எதையோ பார்த்து பயந்தவனைப் போல வந்துருக்கான்….கேட்டா ஒண்ணுமில்லேங்கிறான்” என்று மகளைக் கூப்பிட்டாள்.
“என்னடா? ஏன் ஒருமாதிரியா இருக்கே?.......ஏதேனும் மோஹினிப் பிசாசிடம் மாட்டிக்கிட்டியா?”
“இல்லே சுபாக்கா” என்று சிரிக்க முயன்றான்.
“இரு உனக்கு கௌசிதான் சரி….அவதான் உன்னைச் சரியாக் கவனிப்பா “என்றபடி…………….உள்ளே அறையைப் பார்த்து …………….”கௌசி…இங்கே வாயேன் கொஞ்சம் வந்து என்னான்னு பாரேன்.”
“ஏய்ய் …………என்னண்ணா…….என்னா ப்ரச்னை? உன் ஃப்ரெண்டைப் பார்க்கப் போனியே உன் ஃப்ரெண்ட் உன்னை நீ யார்ரான்னு கேட்டுட்டானா?” என்று கலாய்க்க ஆரம்பித்தும் தீபக் சிரிக்காமல் சீரியஸாகவே இருக்கவே………..திடீரென சூழ்நிலை அமைதியாக மாறியது.
“சரி விடுங்கப்பா…..சாப்பாடு எடுத்து வை சுபா….”என்ற அம்மாவைப் பார்த்து
“வேண்டாம்மா சாப்டாச்சு…” என்றான் தீபக்.
இப்போ என்ன பண்ணுவது என்று “எப்பவும் இப்படிப் பிரச்னையை சாப்பாட்டு மேலே காட்டமாட்டானே “என்று அம்மா சுபாவைக் கண்ணால் “என்னான்னு கேளேண்டி” என்று சைகை செய்தார்கள்.
சுபா” உஷ்” என உதட்டின் மேல் கை வைத்து அம்மாவை அதட்டி விட்டு
“எல்லோரும் போங்க …தீபக் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றாள்.
தீபக் அந்த வீட்டின் உயிர். அவன் முகம் சுருங்க விடாமல் கொண்டாடும் குடும்பம். பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் தீபக் கொஞ்சம் முகம் வாடினாலும் அவன் சரியாகும் வரை அவனைக் கொன்றெடுத்து விடுவார்கள். தீபக் , சுபா, கௌசி மூன்று பேரும் கொட்டம் அடிக்கும் போது அம்மா திகட்டத் திகட்ட கண் நிறையப்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்பா போனப்புறம் அந்தக் குடும்பத்தைத் தாங்கும் தீபக் அப்பாவின் இழப்பை நினைவு படுத்தாமலிருக்க தன்னால் ஆனதையெல்லாம் செய்து அப்பாவின் நிழலாக மாறிவிட்டிருந்தான்.
எல்லோரும் சேர்ந்து சாப்பிடணும், யார்கிட்டேயும் பொய் சொல்லக் கூடாது, ஆஃபீஸ் வேலையை வீட்டில் பார்க்கக் கூடாது, சொல்லாமல் கொள்ளாமல் எங்கும் போகக் கூடாது , சாப்பிடும் போது டி.வி கூடாது , என்று நிறையக் குடும்ப சட்ட திட்டங்களைக் கொண்ட வீடு அது. அந்த சட்ட திட்டங்களைச் சந்தோஷமாகக் கொண்டாடும் குடும்பம் அது.
தீபக் ஒன்றும் பேசாமல் மொட்டை மாடிக்குப் போனான். சுபா அம்மாவையும் கௌசியையும் பார்த்து “நான் பார்த்துக் கொள்கிறேன் “ என்னும் தோரணையில் கைகளை அசைத்து விட்டுக் கூடவே படியேறினாள். மாடியில் சாயங்காலம் தண்ணீர் தெளித்து குளு குளுவென ஆக்கி வைத்திருந்தாள் கௌசி. தலைக்கு ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் கையை மடித்து வைத்துக் கட்டாந்தரையில் படுத்தான் தீபக்.
மொட்டை மாடியின் விளிம்புச் சுவரின் மீது உட்கார்ந்து கொண்டு
“ இப்போ உனக்கு என்ன தீபக் பிரச்னை?” என்றாள் சுபா.
மல்லாந்து படுத்துக் கொண்டு மினுமினுக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்த தீபக் “நான் உங்ககிட்டேயெல்லாம் பொய் சொல்லிட்டேன் இன்னிக்கு…….நான் ஒண்ணும் என் காலேஜ் ஃப்ரெண்டைப் பார்க்கப் போகலை சுபாக்கா ” என்றான்.
“இவ்வ்ளோதானா…..அதான் இப்போ சொல்லிட்டியே…..யாரானும் ஜி எஃப் பார்க்கப் போனியா…? என் கிட்டே மட்டுமாவது சொல்லுடா…..என்னா ……நீ ப்ரபோஸ் பண்ணி அவ வேண்டாம்னு சொல்லிட்டாளா…..விடுடா…ஆயிரம் பொண்ணுங்க கிடைப்பாங்கடா…..இதுக்குப் போய் இவ்வ்ளோ பெர்ரிய பில்ட் அப்பா…?”
“இல்லே சுபாக்கா ……நான் தயாவைப் பார்க்கப் போனேன் ………..சுபாக்கா……..உங்ககிட்டே சொன்னா நீங்க அவனைப் பார்க்கப் போகக் கூடாதுன்னு சொல்வீங்கன்னுதான் ஒரு ஃப்ரெண்டைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டுப் போனேன்.”
“என்னது தயாவையா? “ என்று கத்திய சுபா மொட்டை மாடியின் விளிம்பிலிருந்து குதித்து இறங்கிய சுபா…………”ஏண்டா அவனைப் பார்க்கப் போனே….?” என்று கோபத்துடன் தீபக்கைப் பார்த்தாள்.
“உங்களை எல்லாத்தையும் விட எனக்குதாங்கா அவனைப் பற்றி எல்லாம் தெரியும். அவன் ஒரு நெக்லெக்டெட் சைல்ட். ………அவனோட ஒவ்வொரு சின்ன அசைவுக்கும் அவன் சின்ன வயசுலே அவன் அனுபவிச்ச கஷ்டம்தான் காரணம்னு எனக்கு மட்டும்தான் தெரியும் சுபாக்கா……….”
“அவன் என்ன பண்ணினான்னு தெரியும்தானே தீபக் உனக்கு…. அதனாலேதானே அவன் சகவாசமே வேணாம்னு படிச்சுப் படிச்சு சொன்னேன்…..”
தயா தீபக்கின் வீட்டில் ரொம்ப அன்னியோன்யமா இருந்தவன் தான். சுபாக்காவையும் கௌஸியையும் தீபக்கை விட அதிகமாகக் கலாய்ப்பவன்தான். தீபக்கின் அப்பா இறந்த வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கவனித்துக் கொண்டவன்தான். என்னதான் தீபக் “தயா ஒண்ணும் என் ஃப்ரெண்ட் இல்லை”ன்னு பப்ளிக்கா சொன்னாலும் தயாவை அடிக்கடி வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வருவான். தயாவும் தன் வீட்டுலே செய்யாத வேலையெல்லாம் இழுத்துப் போட்டுச் செய்து வீட்டில் நல்ல பேரெடுத்து விடுவான்.
ஞாயிற்றுக் கிழமைகளில் அம்மாவையும் சுபாக்காவையும் கௌசியையும் ஒரு வேலை செய்யவிடாமல் உட்கார வைத்து விதவிதமாகச் சமைத்துப் போடுவதாகச் சித்திரவதை செய்வான். ஒரு சமயத்தில் “என்ன இந்தப் பையன் இப்படி வந்து மேலே விழுந்து பழகுகிறான் “என்று நினைக்கும் படி ஒட்டிக் கொள்வான்.
அப்படியெல்லாம் சுபாக்கா……….. சுபாக்கா என்று சுற்றியவன் ஒருநாள் சுபாக்கா கையில் ஒரு லெட்டரைக் கொடுத்து விட்டுப் போய்விட்டான். லவ் லெட்டர்.
பிரித்துப் படித்ததும் சுபாக்கா ஒன்றும் சொல்லாமல் தீபக்கிடம் கடித்தத்தைக் கொடுத்தாள். ரெண்டு பேருமாகச் சேர்ந்து அம்மாவிடமும் கௌசியிடமும் இதை மறைத்து விடலாம்னு முடிவு பண்ணி மறைத்து விட்டார்கள். ரெண்டு நாளைக்குத் தீபக்காலேயே கண்டு பிடிக்கமுடியவில்லை தயா எங்கேயென்று.
மூன்றாம் நாள் தெரு முக்கிலேயே தயாவை வளைத்துப் பிடித்த தீபக் எதுவும் சொல்லாமல் கையெடுத்துக் கும்பிட்டு “இனி என் வீட்டுப் பக்கமோ எங்க வீட்டில் யாருடனும் பேசவோ வேண்டாம் தயா.” என்று முறித்துக் கொண்டவன் தான். அதற்கப்புறம் இப்போதான் அவனைப் பார்க்கிறான். என்னவோ உடனேயே முறித்துக் கொண்டாலும் அவனுடைய இடம் தீபக்குக்கு வெற்றிடமாகவே இருந்தது. உள்ளூர ‘மண்டையிலே ரெண்டு தட்டு தட்டி சண்டை போட்டு முடித்திருக்கலாமோ’ இந்த விஷயத்தை என்று கூடத் தீபக் பலமுறை நினைத்திருக்கிறான். அதனால்தானோ என்னவோ அவன் கூப்பிட்ட உடனே போய்ப் பார்க்கலாம்னு முடிவு செய்து போய்ப் பார்த்தது.
“இப்போ என்னவாம்….?”
“திடீர்னு ஃபேஸ்புக்லே பார்த்துக் கண்டு புடிச்சு உன்னைப் பார்த்தாலே ஆச்சுன்னு சொன்னான். எத்தனை வருஷப் பழக்கம் சுபாக்கா…கூப்பிட்ட உடனே மறுக்கமுடியலை………….அவன் செஞ்ச தப்புக்கு அவனை வீட்டுலேயே சேர்த்துக்கமாட்டோம்னு அவனுக்கே தெரியும் அதனாலேதான் அவன் இங்கே வராமல் என்னைக் கூப்பிட்டது.”
“இருந்தாலும் அவன் கிட்டே ரொம்ப வச்சுக்காதே அது ஒரு லூசு…….இன்னிக்குப் போய்ப் பார்த்ததோட போகட்டும் மறுபடியும் வீட்டுக்கெல்லாம் வரவேண்டாம்…………புரியுதா?”
“அடப் போங்கக்கா………..நானே இன்னியோட அவனைப் பார்க்கப் போகக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்….……..”
“ஏன் என்னாச்சு?”
“என்னக்கா சொல்றது?............அவன் வீட்டுக்குப் போனதுலேருந்து ஒரே புதிர்தான்…….ஆளே மாறிட்டான்….கல்யாணம் ஆயாச்சு……………..ரொம்ப மாடர்ன் ஆக மாறிருக்கான். ……ரொம்ப மாடர்ன் ஆன வைஃப்….ஆனா ஏதோ சரியில்லை சுபாக்கா………”
“அதான் செட்டில் ஆகிட்டானே இன்னும் என்ன பிரச்னை?”
“திடீர்னு கொலை செஞ்சுருவேணோன்னு பயம்மாருக்குன்னு சொல்றான்….என் முன்னாடியே “கண்ணா” னு கொஞ்சுறான். என் தலை மறைஞ்சதும் சோத்துத் தட்டைத் தூக்கி விசிறடிச்சுருக்கான் ….அந்தப் பொண்ணு மேல……….நான் மறந்து வச்சுட்டு வந்த மொபைலை எடுக்கப் போனபோது பார்த்தேன்………….”
“அச்சச்சோ”
“கொஞ்ச நேரத்துலேயே அங்கே இருந்தாப் பையித்தியம் பிடிச்சிரும் போல இருக்குக்கா………..பாவமாயிருக்குக்கா அந்தப் பொண்ணைப் பார்க்க………….டி ஷர்ட் ஜீன்ஸ் எல்லாம் சாம்பார் சாதத்தோட மலங்க மலங்க முழிச்சுட்டு இருந்தது.”
“தீபக்….போதும் இனி அந்தப் பக்கமே போகாதே…….அது அவங்க குடும்பப் பிரச்னை….இன்னிக்கு சண்டை போடுவாங்க நாளைக்குச் சேர்ந்துப்பாங்க……… வா கீழே போகலாம்…அம்மாவும் கௌசியும் தூங்காமல் என்னவோ ஏதோன்னு முழிச்சுட்டிருப்பாங்க….”
“அம்மாகிட்டே நீங்க ஏதாவது சொல்லி சமாளிச்சுருங்க சுபாக்கா” என்றவாறு “ படியிறங்கினான் தீபக்.
தயாவின் பிரச்னை என்னவாக இருக்கும் என்று மனது குழம்பிக் கொண்டேயிருந்தது. அவன் ஏதாவது இசகு பிசகாக ஏதாவது செய்துவிடுவானோ என்றும் பயமாயிருந்தது. எதையெல்லாமோ கற்பனை செய்த மூளைக்கு இன்னியோட இதை மறந்துட்டு தயாவின் பிரச்னையை அவன்தான் தீர்த்துக் கொள்ளவேண்டும் ‘நான் யார் அவனுக்கு’ ? இத்தனை நாள் அவன் தனியாக்ச் சமாளிக்கவில்லையா? என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தான். இனி அவனைப் பார்க்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டே தூங்கினான் தீபக்.
அவனுக்கென்ன தெரியும் நாளைக்கு ஆஃபீஸில் அவனை வரவேற்கப் போவதே தயாதானென்று!?
தொடரும்
{kunena_discuss:678}