Chillzeeயின் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அன்புக்குரிய chillzee அன்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த சார்வரி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் எப்போதும் நாம் பார்த்தே இராத அளவில் COVID-19 கிருமியினால் குழப்பம் நிறைந்து இருக்கிறது.
இது கடினமான காலக்கட்டம். ஒரு சிலருக்கு மட்டுமல்லாமல் மனித குலம் முழுவதற்குமே கடினமான காலம்.
இன்று பிறக்கும் இந்த நல்ல நாளின் தொடர்ச்சியாக இந்த கடினக் காலமும் விரைவில் கடந்துப் போகும் என்று அனைவரும் நம்புவோம்.
எப்பேர்பட்ட பேரிடர் என்றாலும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடினால் வெற்றி பெற முடியும்.
இதை நம் மனிதக் குலம் பலமுறை செய்தும் இருக்கிறது.
இந்த நேரத்தில் நம்மையும், நம் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம். முடிந்த அளவில் வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.
இதை சொல்லும் அதே நேரத்தில் நம்மை போன்ற பலருக்காக அந்த கிருமியுடன் முன்னே நின்று போராடும் டாக்டர்கள், நர்ஸ்கள், விஞ்ஞானிகள், மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் நம் நன்றியை தெரிவிக்க கடமை பட்டிருக்கிறோம்.
அதேப் போல இந்த நேரத்திலும் அயராமல் சட்ட ஒழுங்கை சீராக வைக்க உதவும் காவல் துறைக்கும் நன்றி சொல்வது அவசியம்.
நமக்காக தங்கள் வீட்டையும், உறவையும் பிரிந்து கடமையாற்றும் இவர்கள் அனைவரின் நலனுக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
chillzee தளம் என்ற அளவில், பல்வேறு இடையூறுகளுக்கு இடையே தொடர்ந்து பணியாற்றும் ஒவ்வொரு chillzee டீம் மெம்பருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை சொல்ல விரும்புகிறேன்.
தெளிவில்லாத சூழலில் தற்காலிகமாக chillzee சேவையை நிறுத்தலாமா என்று யோசித்த போது வேண்டாமென்று சொல்லி தொடர்ந்து நம் இணையத்தளம் செயல்பட காரணம் நம் கண்ணுக்கு தெரியாமல் பின்னே இருந்து உழைக்கும் அவர்களே காரணம்.
அதேப்போல இப்படி ஒரு கடினமான சூழலிலும் நமக்காக தொடர்ந்து எழுதும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மிக விரைவில் இந்த கிருமியை வென்று, தற்போதைய குழப்பங்களின் பயனாக வரும் விளைவுகளையும் எதிர் கொண்டு வென்று, நம் வாழ்வும் உலகமும் இயல்பு நிலைமைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டை தொடங்குவோம்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பிரியமுடன்,
தேன்மொழி