குழந்தைகள் ஸ்பெஷல் குட்டிக் கதைகள் – 84. முயலின் நண்பர்கள்!!!
காட்டில் வசித்து வந்த ஒரு முயல் அந்தக் காட்டில் மிகவும் பிரபலமாக இருந்தது. விலங்குகள் அனைத்துமே முயலுடைய நண்பர்கள் என்று சொல்வதில் பெருமைக் கொண்டன!
ஒரு நாள் வேட்டை நாய்கள் தன் திசையில் வருவதை முயல் கண்டது!
தன்னுடைய நண்பர்களின் உதவியால் அவற்றிடம் இருந்து தப்பித்து விடலாம் என்று முயல் எண்ணியது!
எனவே, முயல் குதிரையிடம் சென்று, அதனுடைய முதுகில் தன்னை ஏற்றிக் கொண்டு வேட்டை நாய்களிடம் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டது!
ஆனால் குதிரையோ தனது எஜமானருக்கு செய்ய வேண்டிய முக்கியமான வேலை இருப்பதாகக் சொல்லி முயலுக்கு உதவ மறுத்து விட்டது!
முயல் வருத்தப்படவும், “கவலைப் படாதே, உன்னுடைய மற்ற நண்பர்கள் உனக்கு உதவுவார்கள்” என்று ஆறுதல் சொன்னது குதிரை.
முயலும் அடுத்து காளை ஒன்றிடம் சென்று உதவிக் கேட்டது!
அந்த முரட்டுக் காளை தன் கொம்புகளால் வேட்டை நாய்களை விரட்டுவான் என்று முயல் நம்பியது!
ஆனால் காளையோ, “மன்னித்துக் கொள். எனக்கு வேறு ஒரு முக்கிய வேலை இருக்கிறது. இப்போது உனக்கு உதவ முடியாது! நீ நம் நண்பர் ஆடிடம் உதவிக் கேட்டுப்பார். கட்டாயம் உதவும்” என்றது!
முயலும் ஆடிடம் சென்றுக் கேட்டது!
ஆடோ, தனக்கு முதுகு வலி என்று சொல்லி உதவ மறுத்து விட்டது!
அடுத்ததாக முயல், ஆட்டுக்கடாவிடம் சென்று விஷயத்தைச் சொல்லி உதவிக் கேட்டது!
ஆட்டுக்கடாவும் இப்போது உதவ இயலவில்லை என்று சொல்லியது!
கடைசியாக முயல் கன்றுக்குட்டியிடம் சென்று உதவிக் கேட்டது!
கன்றோ, “என்னை விட பெரியவர்களும், பலசாலிகளுமே உதவவில்லை. நான் எப்படி உனக்கு உதவ முடியும்” என்று சொல்லி விட்டது!
இந்த நேரத்தில் வேட்டை நாய்கள் மிக அருகில் வந்து விட்டிருந்தன!!
முயல் தன்னால் இயன்ற அளவு வேகமாக ஓடி ஒரு புதருக்குள் நன்றாக ஒளிந்துக் கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
கருத்து:
நிறைய நண்பர்கள் இருப்பவர்களுக்கு உண்மையான நண்பர் ஒருவரும் இல்லை என்று தான் அர்த்தம்!
இதை முயல் தன் ஆபத்து நேரத்தில் நன்றாக புரிந்துக் கொண்டது!!!!