குழந்தைகள் ஸ்பெஷல் குட்டிக் கதைகள் – 85. குதிரை & நத்தையின் ரன்னிங் ரேஸ்!!!
ஒரு பெரிய காட்டில் ஒரு குதிரை வாழ்ந்தது.
அது மிக வேகமாக ஓடக் கூடியது!
அப்படி ஓடி திரிந்துக் கொண்டிருந்தப் போது அந்த குதிரை ஒரு நத்தையைப் பார்த்தது.
அந்த நத்தை எவ்வளவு மெதுவாக நகர்கிறது என்பதைப் பார்த்த குதிரை, அதை கிண்டல் செய்யத் தொடங்கியது.
"ஏய், நத்தை! நாம் ஒரு ஓட்டப் பந்தயம் வைக்கலாமா?" என்று குதிரை கேட்டது.
குதிரையின் கிண்டல் மற்றும் கேள்வியால் நத்தை குதிரை மீது மிகவும் கோபமாக இருந்தது.
அதனால் "சரி! ஞாயிற்றுக்கிழமை நாம் நம் பந்தயத்தை வைத்துக் கொள்வோம்" என்றது.
வீட்டிற்குச் சென்ற நத்தை, அனைத்து நத்தைகளையும் அழைத்து இந்த ஓட்டப் பந்தயத்தைப் பற்றி சொல்லி, விவாதித்தது.
அனைத்து நத்தைகளுமாக சேர்ந்து குதிரையை விஞ்சும் திட்டம் ஒன்றை வகுத்தனர்.
எல்லா நத்தைகளும் பார்க்க ஒரே மாதிரியாக இருப்பதால், தங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி குதிரையை குழப்ப முடிவு செய்தனர்!
ஞாயிற்றுக்கிழமை வந்ததும், அனைத்து நத்தைகளும் சீக்கிரமே தங்கள் வீட்டை விட்டு கிளம்பின.
போட்டி தொடங்கும் இடத்தில் இருந்து முடியும் இடம் வரை, சிறு சிறு இடைவெளி விட்டு ஒவ்வொரு நத்தையும் ஒளிந்துக் கொண்டது!
பந்தயம் தொடங்கியது.
குதிரை கொஞ்சம் நேரம் ஓடியப் பின் நத்தை எங்கே வருகிறது என்றுப் பார்க்க கீழே பார்த்தது!!!!
அது எதிர்பார்த்ததற்கு மாறாக நத்தை அதன் முன்னால் சென்றுக் கொண்டிருந்தது!
திகைத்துப் போன குதிரை தனது வேகத்தை அதிகரித்தது. ஆனால் நத்தை இப்போதும் அதன் முன்னால் தான் இருந்தது!!!
குதிரை மேலும், மேலும் வேகமாக ஓடத் தொடங்கியது.
ஆனால் குதிரை எவ்வளவு கடினமாக முயன்றாலும், நத்தை அதற்கு முன் தான் இருந்தது.
மிகவும் கடினமாக முயற்சி செய்த குதிரை களைத்துப் போய், "நான் தோற்றேன்!" என்று ஒத்துக் கொண்டது!
அதைக் கேட்டு நத்தை சத்தமாக சிரித்தது.
ஹாஹாஹாஹா!
கருத்து:
புத்திமான் பலவான் ஆவான்!!!!!