கருத்துக் கதைகள் – 12. அப்பனுக்கிட்ட கப்பரை... - தங்கமணி சுவாமினாதன்
முனுசாமி மிகவும் வயதானவர். முதுமையின் காரணமாய் முதுகு வளைந்து தோல் சுருங்கி காதும் கேட்காமல் கண்ணும் தெரியாமல் பாவம் மிகவும் சிரமப்பட்டார். இளம் வயதில் அவர் மிகவும் சுறுசுறுப்பானவர். நல்ல உழைப்பாளியாக இருந்த அவர் கொஞ்சம் விளைச்சல் நிலம் ஒரு வீடு என்று வாங்கிப் போட்டிருந்தார். வயதாகி விட்டதால் இப்போது அவரால் வேலை செய்ய முடியவில்லை. அவருக்கு மனைவி இல்லை. ஒரு மகன் இருந்தான். அவனிடம்தான் முனுசாமி இருந்தார். அவருடைய மகனுக்குத் திருமணம் ஆகிவிட்டது. முனுசாமியின் மருமகள் ரொம்ப பொல்லாதவள். அவள் மாமனாராகிய முனுசாமியை மதிக்கவே மாட்டாள். சரியாக உணவளிக்கமாட்டாள்.
முனுசாமி மருமகளிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டால் கூட கொடுக்காமல் அலட்சியப் படுத்துவாள். முனுசாமியின் மகன் தன் மனைவியின் பேச்சைக்கேட்டு தானும் தன் தந்தையைக்கு அன்பு காட்டாமல் தந்தையை அலட்சியப் படுத்தினான். முனுசாமிக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது. பசிக்கும் வேளையில் உணவு கிடைக்காமல் தவித்தார். அவருக்கு எட்டு வயதில் ஒரு பேரன் இருந்தான். நல்ல வேளை அவன் மட்டும் தாத்தா முனுசாமியிடம் கொஞ்சம் அன்பாக இருந்தான். அவன் பள்ளிக்குச் செல்லும் முன்னும் பள்ளியிலிருந்து வந்த பின்னும் சிறிது நேரம் தாத்தாவிடம் பேசிக் கொண்டிருப்பான். அதனால் முனுசாமியின் மருமகள் தன் மகனைத் திட்டுவாள்.
ஒரு நாள் முனுசாமிக்கு ஜுரம் வந்தது. அவர் ரொம்பவும் இருமலால் சிரமப்பட்டார்.
அவர் இருமுவது தொந்தரவாய் இருப்பதாகச் சொல்லி மருமகள் அவரை வீட்டு வெளித் திண்ணையில் படுக்க வைத்தாள். அது முதல் அவ்விடமே அவரின் இடமாயிற்று.
அவர் சாப்பிட பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்கப் பயன்படுத்தும் திருவோடு எனப்படும் கப்பரையைக் கொடுத்துவிட்டாள். அவரால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. மகனும் ஏன் இப்படிச் செய்தாய் என மனைவியைக் கேட்கவில்லை.
முனுசாமி ஒரு நாள் இறந்து போய்விட்டார். அவர் பயன்படுத்திய பாய் தலையணை போர்வை துணிமணிகள் ஆகியவற்றை முனுசாமியின் மகனும் மருமகளும் எரித்தனர்.
அவர் படுத்திருந்த இடத்தை தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தினர். அப்போது அங்கிருந்த முனுசாமியின் பேரன் தன் தாத்தா சாப்பிட பயன்படுத்திய கப்பரையை எடுத்து ஒரு பையில் வைத்து பத்திரப் படுத்தினான். அதைப்பார்த்த முனுசாமியின் மகன் தன் மகனைப் பார்த்து. . எதற்கடா இந்தக் கப்பரையை அப்படி பத்திரமாய் பாதுகாப்பாய் எடுத்து வைக்கிறாய் என்று கேட்டான்.
அப்பா. . . தாத்தாவின் மகனாகிய நீங்கள் தாத்தாவிற்கு இதில்தான் உணவளித்தீர்கள்.
நான் வளர்ந்து பெரியவனாகி உங்களைபோல் ஆனதும் நீங்கள் தாத்தாவைபோல் வயதான கிழவனாகிவிடுவீர்கள் அப்போது உங்களை இதே திண்ணையில் வைத்து இதே கொப்பரையில் உணவளிக்க வேண்டாமா?அதற்காகத்தான் இந்த கொப்பரையைப் பாதுகாப்பாக பத்திரப் படுத்துகிறேன் என்றான் முனுசாமியின் மகனின் மகனும் முனுசாமியின் பேரனுமான எட்டுவயது சிறுவன்.
முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது முனுசாமியின் மகனுக்கு. தான் தன் தந்தைக்குச் ஆற்றவேண்டிய கடமையைச் செய்யாமல் அவரை தன் மனைவியின் சொல் கேட்டு அவமானமாய் நடத்தியது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முனுசாமியின் மருமகள் வெட்கித் தலை குனிந்தாள். தன் பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள் தம் மக்களால் தாமும் அவ்வாறே செய்யப்படுவர். அப்பனுக்கிட்ட கப்பரை ஆரச் சுவற்றில் கவிழ்த்திருக்கும் என்பது சொலவடை.
கதை சொல்லும் கருத்து:
தந்தை,தாய் பேண். . .