குழந்தைகள் சிறப்பு சிறுகதை - பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள் - நாரா நாச்சியப்பன்
ஒரு காட்டில் ஒரு முயல் இருந்தது. அதற்கு ஒரு நாள் பொழுதே போகவில்லை.
காட்டுக்குள் எங்கெங்கோ துள்ளிக் குதித்து ஓடியது. புல்வெளிகளில் பாய்ந்து ஓடி நல்ல அருகம் புல்லாகத் தேர்ந்தெடுத்துத் தின்றது. நெல் வயல்களில் புகுந்து விளையாடியது. காவற்காரன் கம்பெடுத்ததும் ஒரே தாவில் வேகமாய்த் தாண்டி விழுந்து எழுந்து ஓடியது.
பூஞ்சோலைகளில் புகுந்து அங்கு பூத்திருந்த வகை வகையான பூக்களின் மணத்தைச் சுவைத்தது.
பூஞ்செடிகளின் இளந்தளிர்களைக் கொரித்துச் சுவை பார்த்தது. மூங்கிற் புதர்களின் மத்தியிலே பாய்ந்து சிலம்பவித்தை யாடியது.
என்ன செய்தும் பொழுதுபோகவில்லை. மீதிப் பொழுதை என்ன செய்து கழிப்பது என்று அதற்குப் புதிராய் இருந்தது.
வெட்டிப்பேச்சுப் பேசுவதற்குக் காட்டில் யாரும் கிடைக்காததால் அது நகரத்துக்குப் போவதென முடிவு செய்தது.
தனியாகப் போவதை விடத் துணைக்கு யாராவது வந்தால் நன்றாயிருக்குமே என்று அந்த முயல் நினைத்தது.
அப்படி அது நினைத்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு ஒரு குட்டி முயல் வந்தது.
அந்தக் குட்டி முயலைப் பார்த்து இந்த ஆண் முயல் கேட்டது. "ஏய் குட்டி , எங்கே கிளம்பி விட்டாய்?
"அண்ணா , காலையிலிருந்து பொழுதே போக வில்லை. அதுதான் உன்னைத் தேடி வந்தேன்'' என்றது குட்டி முயல்.