குழந்தைகள் சிறப்பு சிறுகதை - ஒரு முயல் குட்டி சாபம் போட்டது - நாரா நாச்சியப்பன்
ஒரு காட்டில் ஒரு குட்டி முயல் இருந்தது. ஒரு நாள் அது ஒரு பாறையின் மேல் ஏறியது. அதன் உச்சியில் ஏறி நின்று பார்த்தது.
சிறிது தொலைவில் உள்ள நிலத்தில் பச்சைப் பசேலென்று புல் வளர்ந்திருந்தது. நீள நீளமாகத் தளதள வென்று வளர்ந்திருந்த புல் வெளியைக் கண்டது. இளம்பச்சைப் புல் நிறைந்திருந்த அந்த நிலம் பார்க்கப் பார்க்க அழகாயிருந்தது. முயல் குட்டிக்கு அந்தப் புல்லைக் கடித்துக் கடித்துத் தின்ன வேண்டும் என்று ஆசையாயிருந்தது.
பாறையிலிருந்து துள்ளிக் குதித்தது.
தாவித்தாவி அந்தப் புல்வெளியை நோக்கி ஓடியது. அங்கும் இங்குமாக ஓடி ஓடி ஆசை தீரப் புல் நுனிகளைக் கடித்துக் கடித்துத் தின்றது. ஒரு புல்லைக் கடிக்கப் போகும் போது கூர்மையாயிருந்த அந்தப் புல்லின் தாள் முயலின் மூக்கை அறுத்து விட்டது. சிறிது குருதி வழிந்தது. எரிச்சலோடு கூடிய வலி ஏற்பட்டது.
முயல் குட்டிக்குச் சினம் பொங்கியது. இந்தப் புல் என் மூக்கை யறுத்துவிட்டது. என்ன திமிர் இதற்கு! கடவுளே! இந்தப் புல்லெல்லாம் எரிந்து சாம்பலாகப் போகட்டும் என்று சாபம் போட்டது.
பிறகு மூக்குப் புண்ணோடு தான் இருக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தது. சிறிது நேரத்தில் தூங்கிப் போய் விட்டது.
திடீரென்று அந்தப் புல்வெளி யெங்கும் தீப்பற்றிக் கொண்டது. நெருப்புப் பட்டு அந்தப் புல் அனைத்தும் கருகின. தீ மெல்ல மெல்லப் பரவி முயல் குட்டி இருக்கும் இடம் வரை இருந்த புல் அனைத்தும் நெருப்பில் கருகிச் சாம்பலாய்ப் போயின.