குழந்தைகள் சிறப்பு சிறுகதை - பந்தயத்தில் வெள்ளை முயல் - நாரா நாச்சியப்பன்
காட்டில் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. என்ன வென்று தெரிந்து கொள்வதற்காக தினசரித் தாள் செய்தியாளர்கள் அங்கு பறந்து வந்தார்கள்.
பேருந்து ஓட்டி வந்தவன் சொன்னான். காட்டு நடுவில் உள்ள ஒரு பொட்டலில் எங்கு பார்த்தாலும் இலைகளும் பூக்களும் தோரணம் கட்டியிருந்ததாம். விலங்குகள் அங்கும் இங்கும் அவசர அவசரமாகவும் கூட்டம் கூட்டமாகவும் அந்தப் பொட்டலில் திரிந்து கொண்டிருந்தனவாம். இந்தச் செய்திகளைக் கேட்டதும் தினசரித்தாள் செய்தியாளர்கள் அங்கு பறந்தார்கள்.
செய்தியாளர்களைக் கண்டவுடன் விலங்குகளுக்கு மேலும் தெம்பு வந்துவிட்டது. முதலியேயே தெரிவித்திருந்தால், எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும் என்று யானையார் கூறினார்.
மணியோசை முன்னால் வரும். யானையார் பின்னால் தான் வருவார். தலைவர் யானையாருக்குப் பின்னால் தான் எல்லா நினைப்புகளும் தோன்றும். செய்தியாளர்களைக் கண்ட பிறகுதான் வானொலிக் கும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் தெரிவிக்க வில்லை என்பது நினைவு வந்தது.
செய்தியாளர்கள் யானையாரைச் சூழ்ந்து கொண்டார்கள். காட்டில் இன்று என்ன சிறப்பு என்று கேட்டார்கள்.
சிறப்பாக ஒன்றும் இல்லை. விளையாட்டுப் போட்டி ஒன்று வைப்பதென நேற்று ஒரு முடிவெடுத்தோம். பொதுக்குழு முடிவின்படி இன்று உடனே போட்டி வேலைகளைத் தொடங்கி விட்டோம்.
உங்களுக்கு எப்படி இந்தச் செய்தி கிடைத்தது?'' என்று யானையார் கேட்டார்.
உலகில் எந்த மூலை முடுக்கில் எது நடந்தாலும் நாங்கள் விடமாட்டோம்.