(Reading time: 9 - 17 minutes)

யார் அவர்? - ஜான்சி

Yaar

ஹாய் குட்டீஸ்,

ரொம்ப நாள் கழித்து ஒரு கதையோடு உங்கள் அனைவரையும் சந்திக்க வந்திருக்கிறேன்.

இன்றையக் கதையில் நாம ஒரு தாத்தா பாட்டியைப் பார்க்கப் போறோம்.

ஒரு ஊர்ல ஒரு தாத்தாவும் பாட்டியும் இருந்தாங்களாம்.அவங்களுக்கு பிள்ளைகள் இல்லாததனால அவங்களை கவனிக்க யாருமே இல்லை. அதனால அவங்க இரண்டு பேரும் அவங்களோட தள்ளாத வயதிலேயும் விறகுகளைப் பொறுக்கி வந்து அதை விற்று வரும் பணத்தில் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றி வந்தாங்க. ஒரு சில நாட்கள் தாத்தாவுக்கு ரொம்ப அசதியாக இருக்கும் போது அவங்க விறகு பொறுக்க போகாமல் வீட்டுல இருந்திடுவாங்க. அப்படி அவர் வீட்டில இருக்கிற நாட்களில் கஷ்டப்பட்டு விறகு வித்துட்டு களைப்பா வர்ற பாட்டி அவரை கோவித்துக் கொள்ளுவாங்க. இந்த ஒரு விஷயத்தில மட்டும் தான் அவங்க இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வரும்.

 ஒரு நாள் தாத்தா பக்கத்து மலையில் ஏறி விறகுகளைப் பொறுக்கி வரச் சென்றார்.அவரால மிக உயரமான இடத்துக்கு ஏறிச் செல்ல முடியாததால கொஞ்சம் கீழேயே நின்றுக் கொண்டு விறகுகளைப் பொறுக்க ஆரம்பித்தார்.அப்போது அவர் அருகில் கண்ணைக் கூச வைக்கும் அளவுக்கு வெண்ணிற உடை அணிந்த ஒரு ஆள் வந்து நின்றார். தாத்தாவும் இது யாரு புதுசா இருக்காரேன்னு அவரைப் பார்த்து பேசினார். சற்று நேரம் அவங்க ரெண்டு பேரும் சாதாரணமாக பேசிக் கொண்டார்கள். தாத்தாவின் வறுமை நிலையை அறிந்துக் கொண்ட அந்த நபர்,

"தாத்தா, நீங்க இந்த வயசான காலத்தில இப்படி கஷ்டப்பட வேண்டாம். இதோ இதை வைத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள்" என்றுச் சொல்லி அவர் கையில் எதையோ தந்து விட்டு மறைந்துப் போய் விட்டார்.

 தாத்தாவுக்கு கொஞ்ச நேரம் எதுவுமே புரியவில்லை. கையைத் திறந்துப் பார்த்தால் அவர் கையில் இரண்டு வைரங்கள் இருந்தன. ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தவாறே கையை மூடவும் தோன்றாமல் அப்படியே வீடு நோக்கி நடந்துச் சென்றார். வழியில் ஒரு ஓடையைக் கடக்கும் போது இரண்டு மீன்கள் அப்படியே துள்ளி வந்து அவரது கையிலிருந்த வைரங்களை ஆளுக்கு ஒன்றாக விழுங்கி தண்ணீருக்குள் சென்று மறைந்து விட்டன.

 தாத்தாவுக்கு இப்போது என்னச் செய்வது என்றே தெரியவில்லை.ஏனென்றால், வைரங்களை பார்த்த திகைப்பில் தான் சேகரித்து வைத்திருந்த விறகுகளையும் அவர் எடுத்து வர மறந்துப் போயிருந்தார். இப்போது இருட்டிப் போயிருந்தது. மறுபடிச் செல்லவும் வழியில்லையே? அவர் மட்டுமில்லாமல் பாட்டியும் விறகு கொண்டு வந்து விற்றாலும் கூட அவர்களுக்கு அதில் மிகவும் குறைந்த வருமானமே கிடைத்து வந்தது. இப்போது ஒருவர் வருமானம் குறைந்தாலும் கூட அடுத்த நாளுக்கான சாப்ப்பாட்டிற்காக என்னச் செய்வது? என்ற கவலை அவர் மனதை அழுத்தியது.

வீட்டிற்கு சென்று நடந்தவற்றை சொன்னதும் பாட்டி அவரை நம்பவில்லை.

"என்னது வைரமா? அதை மீன்கள் முழுங்கிடுச்சா? சோம்பேறித்தனமாக விறகு பொறுக்கப் போகாம இருந்ததோட மட்டுமில்லாமல், இப்படி புதுசு புதுசா பொய் சொல்ல வேற ஆரம்பிச்சிட்டீங்களா? எனச் சொல்லி கோபித்துக் கொண்டார். இருவருக்குமிடையில் மறுபடியும் சண்டை வந்துவிட்டது.

 டுத்த நாள் பாட்டி விறகு பொறுக்கச் செல்லும் முன்னதாகவே தாத்தா புறப்பட்டுச் சென்று விட்டார். முந்தைய நாளில் சேர்த்து வைத்திருந்த விறகுகள் இன்னும் யாரும் கொண்டுச் செல்லாமல் இருந்தது பார்த்து சந்தோஷப் பட்டவராக இன்னும் கொஞ்சம் விறகுகளைக் கூட்டிச் சேர்க்க ஆரம்பித்தார். அப்போது மறுபடியும் அந்த வெள்ளையுடை மனிதர் அங்கு வந்தார். தாத்தாவிடம், 

" தாத்தா, நேற்று நான் வைரங்களைத் தந்திருந்தேனே அதை விற்றுச் செலவழித்தால் உங்கள் முதிய வயதில் இப்படி கஷ்டப் பட வேண்டாமே? என்றுக் கேட்டார். தாத்தாவும் முன்தினம் நடந்தவற்றை வருத்தத்தோடு கூறினார். 

 "அப்படியா ,அப்படியென்றால் இதோ இந்த வைர மாலையைக் கொண்டுச் சென்று விற்று உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்"

 என்றுச் சொல்லி மிகவும் நீளமான ஒரு வைர மாலையை அவருக்குத் தந்துவிட்டு மறைந்து விட்டார். இது என்னடா ஆச்சரியமா இருக்கு என்று அவர் மிகவும் திகைத்தார். அந்த ஒளிரும் வைரங்களைக் கொண்ட மாலையின் அழகை வியந்து அதை கையில் தூக்கிப் பிடித்துப் பார்த்துச் சற்றுத் தூரம் நடந்தவர், முந்தைய நாளின் நியாபகம் வரவே அந்த மாலையைப் பத்திரமாக வைக்க தன்னுடைய கையை கீழே இறக்கினார். அதே நேரம் ஒரு பறவை மிகவும் வேகமாக அவரிடம் பறந்து வந்து அவர் கையிலிருந்து அந்த மாலையை கொத்திக் கொண்டு கண் இமைக்கும் நேரத்திற்கு முன்னதாக அவர் பார்வையிலிருந்து மறைந்தது.

 தாத்தாவிற்கு மிகவும் வருத்தமாக ஆயிற்று, அந்த நல்ல மனிதர் 2 முறை உதவிச் செய்தும் அதனை அனுபவிக்க முடியவில்லை. நாம் இறுதி வரை வேலைச் செய்துதான் பிழைக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் போல என்று தன்னை நொந்துக் கொண்டார். வீட்டில் போய் தான் உண்மையைச் சொன்னாலும் தன் மனைவி தன்னை நம்பப் போவதில்லை என்பதால் மறுபடி திரும்பச் சென்று சேர்த்து வைத்திருந்த விறகுகளைச் சுமந்து வீட்டுக்கு வந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.