(Reading time: 7 - 14 minutes)

பேராசை பெரு நஷ்டம் - ஜான்சி

Greedy

ரு ஊரில ஒரு அக்காவும் தங்கையும் இருந்தாங்களாம். அக்காகிட்ட நிறைய வீடுகள், பங்களா, ஆடுகள், மாடுகள் என்று நிரம்ப செல்வம் இருந்ததாம். ஆனால், அவங்களுக்கு குழந்தை இல்லை. தங்கை ரொம்ப ஏழை அவங்களுக்கு ஐந்து பிள்ளைகள். ஒரே ஊரில் இருந்தாலும் அக்காவிற்கு தங்கை மேல கொஞ்சம் கூட இரக்கம் கிடையாது. ஒரு உதவியும் கூட செய்ய மாட்டாங்க. அவங்க கிட்ட இருக்கிற செல்வத்தை இன்னும் இன்னும் சேர்க்கணும் என்கிற பேராசை தான் அவங்களுக்கு உண்டே தவிர , மற்றவங்களுக்கு கொடுத்து உதவணும் என்கிற எண்ணம் துளி கூட கிடையாது. மற்றவங்களுக்கு கொடுக்கா விட்டாலும் தன் கூட பிறந்த தங்கையும் , அவள் பிள்ளைகளும் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப் படறாங்க என்பதற்காவது அவங்களுக்கு கொடுத்து உதவலாம் என்கிற சிந்தனையே இல்லாதவங்க அந்த அக்கா.

 தங்கையோட கணவர் காலையிலேயே கூலி வேலைக்கு போயிட்டு இரவுதான் வருவார். தங்கையோ அக்கம் பக்கம் சின்ன சின்ன வேலைச் செய்து கொஞ்சம் சாப்பாட்டிற்கு சேர்ப்பாள். அன்று அவள் வீட்டில் ஒரு பருக்கைக் கூட அரிசி இல்லை. பக்கத்து வீட்டில் வேலைக்கு கூப்பிட்டுக் கொண்டிருக்க அவள் அங்கு செல்ல புறப்பட்டாள். அப்போது அக்கா அவளிடம் வந்து

 "நீ என் வீட்டுக்கு வந்து எனக்கு பேன் பார், சாயங்காலம் ஆனதும் நான் உனக்கு அதற்கு கூலியாக அரிசி தந்து விடுகிறேன்" என்று கூறினாள்.

 உடனே தங்கையும் நம் அக்கா சொன்ன வேலையைச் செய்யலாம் என்றுச் சொல்லி அவள் வீட்டிற்குச் சென்று காலையிலிருந்து சாயங்காலம் வரை பேன் பார்த்தாள். சாயங்காலம் ஆனதும் அவள் வீடு திரும்பும் போது அக்கா தான் சொன்னபடியே அரிசியை அளந்து ஒரு பையில் போட்டு கொடுத்தாள். தங்கை வீட்டுக்கு வந்து அரிசியை வைத்து விட்டு தண்ணீர் எடுக்க சென்றாள். தங்கை தன் வீட்டிற்கு சென்ற பிறகு அக்கா தன் தலையைச் சொறிய அவளது விரல் நகத்தில் ஒரு பேன் வந்தது. அதைப் பார்த்த அக்காவிற்கு மிகவும் கோபம் வந்து விட்டது. உடனேயே அவள் தன் தங்கையின் வீட்டுக்குப் போய் தான் கொடுத்திருந்த அரிசிப்பையை திரும்ப கொண்டு வந்து விட்டாள். 

 சமைப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்த தங்கை அரிசிப் பையை தேடினாள்.ஆனால்,அங்கே அரிசிப்பையை காணவில்லை. அப்போது ஏதேச்சையாக அங்கு வந்த பக்கத்து வீட்டுக்காரம்மா

 "உன் அக்கா இப்போ தான் உன் வீட்டுக்கு வந்துட்டு போனாள்" என்று போகிறப் போக்கில் சொல்லிச் செல்ல, அக்காவிடம் சென்று தங்கை விசாரித்தாள்.

" ஆமா , நான் தான் அந்த அரிசிப் பையைக் கொண்டு வந்தேன். நீ பேன் பார்த்தது சரியில்லையே, பின்ன நான் ஏன் உனக்கு அரிசி தரணும், தர முடியாது போ" என்றுச் சொல்லி அக்கா அவளை விரட்டினாள்.

 தங்கையோ "வீட்டில அரிசியே இல்லை அக்கா தயவு செய்து இப்போ அரிசியைத் தந்திடு , நான் வேணும்னா நாளைக்கும் உனக்கு வந்து பேன் பார்க்கிறேன்னு " சொல்லி கெஞ்சி கேட்டாள். அதற்கு அக்கா மனமே இரங்கவில்லை. மன வருத்தத்தில திரும்ப வந்த தங்கை இரவு உணவுக்கு என்னச் செய்யலாம்னு யோசிச்சுக் கிட்டே கொஞ்சம் காடு மாதிரி இருக்கிற செடி அடர்ந்த இடத்தில போய் கீரையை பறிக்க ஆரம்பித்தாள். 

 அங்கே பக்கத்தில சின்ன குடிசையில இருக்கிற ஒரு பாட்டி சாயங்கால நேரத்தில அது யாரு இங்கே வந்து கீரையை பறிக்கிறதுன்னு பார்க்க வந்தாங்க,

"நீ ஏன் இந்த நேரம் இங்கே வந்து கீரை பறிக்கிறாய்" னு பாட்டி அவளிடம் விசாரிக்கவும், மன வருத்தத்தில் இருந்த தங்கை காலையிலிருந்து நடந்த எல்லாத்தையும் அவங்களோடு பகிர்ந்துக் கொண்டாள்.

" பாட்டி நான் இந்த கீரையைக் கொண்டு போய் மசிச்சு இதையே என் கணவருக்கும், பிள்ளைகளுக்கும் இரவு உணவா கொடுக்க போறேன்" என்றுச் சொன்னாள்.

 அதைக் கேட்டப் பாட்டி, "அப்படியா, வருத்தப் படாதே நான் உனக்கு உதவி செய்ய விரும்புறேன். என் கூட என் குடிசைக்கு வருவியா? என்றுக் கூப்பிட்டு அவளை தன்னுடன் கையோடு அழைத்துக் கொண்டுப் போனார். வீட்டின் வாசலில் போனதும் அவளிடம் "மகளே, வீட்டுக்கு உள்ளே போய் உனக்கு எது தேவையோ அதை ஒன்று மட்டும் எடுத்துக் கொண்டு வா" என்றுச் சொன்னார்.

 அந்தக் குடிசைக்கு உள்ளேச் சென்றவள் உள்ளே சின்னதும் பெரியதுமான பற்பல ஓலைப் பெட்டிகள் இருக்கக் கண்டாள். அவை இரு புறமும் மூடப் பட்டவையாக இருந்தன. பாட்டி மனம் வருந்தக் கூடாது என்பதற்காக மறுப்புச் சொல்லாமல் சம்பிரதாயத்திற்காக எடுத்துக் கொள்ளும் விதமாக இருப்பதிலேயே மிகவும் சிறிய ஓலைப் பெட்டியை எடுத்து வெளியே வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.