Chillzee சமையல் குறிப்புகள் - மணத்தக்காளி வத்தல் குழம்பு
தேவையான பொருட்கள்
1 எலுமிச்சை அளவிலான புளி
3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
3 டேபிள் ஸ்பூன் மணத்தக்காளி வத்தல்
½ டீஸ்பூன் கடுகு
½ டீஸ்பூன் வெந்தயம்
1 - 2 காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை – சிறிது
1 சிட்டிகை பெருங்காயம்
1.5 - 2 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள்
உப்பு – தேவைக்கு
1 டீஸ்பூன் அரிசி மாவு (விரும்பினால்)
½ டீஸ்பூன் வெல்லம் (விரும்பினால்)
செய்முறை
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை அளவிலான புளி எடுத்து, 1 கப் சூடான நீரைச் சேர்க்கவும். புளியை அப்படியே 20 - 30 நிமிடங்கள் மூடி ஊற வைக்கவும்.
பின் புளியை பிழிந்து புளிக் கரைசல் உருவாக்கி தனியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சூடாக்கவும். ஸ்டவ்வை குறைவான தீயில் வைத்து ½ டீஸ்பூன் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்கட்டும்.
ஸ்டவ்வை குறைவான தீயிலேயே வைத்து ½ டீஸ்பூன் வெந்தயம், 1-2 காய்ந்த மிளகாய், சிறிது கறிவேப்பிலை மற்றும் 1 சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும்.
மிளகாய் நிறம் மாறும் வரை வறுக்கவும், கிளறவும்.
இப்போது 3 டேபிள் ஸ்பூன் மணத்தக்காளி வத்தலை சேர்க்கவும்.
தொடர்ந்து கிளறி, மணத்தக்காளி யின் நிறம் மாறும் வரை சில நொடிகள் வறுக்கவும். அவை கருகி விடாமல் வறுக்கவும்..
இப்போது ஸ்டவ்வை அணைத்து 1.5 - 2 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள் சேர்க்கவும். 1 நிமிடம் வறுக்கவும்.
ஸ்டவ்வை அணைக்காமல் குறைந்த தீயில் கூட வறுக்கலாம். ஆனால் சாம்பார் தூள் கரிந்து விடக் கூடாது.
ஸ்டவ்வை மீண்டும் குறைந்தாஹ் தீயில் வைத்து, புளி கரைசல் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். நன்றாக கலக்கி விடவும்.
தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். மீண்டும் நன்றாக கலந்து, வத்தக் குழம்பை சுமார் 25 முதல் 30 நிமிடங்கள் மீடியம் தீயில் கொதிக்க விடவும்.
குழம்பு சிறிது கெட்டியாகும் வரை தொடர்ந்து வேகவைக்கவும். எண்ணெய் பிரிந்து வரைக்கும் கொதிக்க விடவும்.
பின்னர் விருப்பம் இருந்தால் 1 டீஸ்பூன் அரிசி மாவு சேர்க்கவும்.
அடுத்து, விருப்பம் இருந்தால் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்.
நன்றாக கலந்து வத்த குழம்பை 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு ஸ்டவ்வை அணைத்து விடவும்.
பிறகு, குழம்பை 2 நிமிடங்கள் மூடி வைத்து, பின் பரிமாறவும்!