Chillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பிரியாணி - ரஞ்சி
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கிலோ
ஆட்டிறைச்சி – ஒரு கிலோ
பச்சை மிளகாய் – 25 (காரத்திற்கு ஏற்ப கூட்டி / குறைத்துக் கொள்ளவும்)
கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை – கைப்பிடி அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
வெங்காயம் – 2
பூண்டு – 10
இஞ்சி – ஒரு துண்டு
பெரிய தக்காளி – 1
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
நெய் அல்லது டால்டா - 4 ஸ்பூன்
எண்ணெய் – 3 ஸ்பூன்
பட்டை – 2 துண்டுகள்
ஏலக்காய் – 3
கிராம்பு – 2
உப்பு – தேவைக்கு
முந்திரி பருப்பு – 20 (தேவை என்றால்)
செய்முறை
- ஒரு வெங்காயத்தை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
- தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- ஐந்து பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
- மட்டனை நன்கு சுத்தம் செய்து குக்கரில் உப்பு, கீறி வைத்த 5 பச்சை மிளகாய், சிறிது மஞ்சள் தூள், மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- பட்டை, கிராம்பு, ஏலக்காய் மூன்றையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து தூள் செய்துக் கொள்ளவும்.
- ஒரு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
- அரிசியை நன்கு கழுவி பதினைந்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற விடவும்.
- பொதுவாக வதக்க தொடங்கும் முன் அரிசியை ஊற வைத்தால் சரியாக இருக்கும்.
- அடுப்பில் குக்கரை வைத்து, நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, சூடானதும், தூள் செய்து வைத்திருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காயை போடவும்.
- பொருட்களை வதக்கும் போது அடுப்பை மிதமான அளவில் வைக்கவும்
- பின் கறுவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
- கொஞ்சம் ‘ரிச் டேஸ்ட்’ விரும்புபவர்கள், 20 முந்திரி பருப்பை சேர்த்து வதக்கவும்.
- இப்போது சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் இரண்டையும் சேர்த்து, நன்றாக வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வெந்து கலந்த உடன், கரம் மசாலா தூள், உப்பு, மஞ்சள் தூள், வேக வைத்த மட்டன் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
- கறி கலவையில் நன்கு சேர்ந்த பிறகு, ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீரை சேர்க்கவும்.
- தண்ணீர் கொதித்தவுடன் அரிசியை சேர்க்கவும்.
- நன்றாக கிளறி, உப்பு அளவை சரி பார்த்து விட்டு குக்கரை மூடி விடவும்.
- இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
- சுலபமாக செய்யக் கூடிய ஆனால் சுவையான கம கம பிரியாணி தயார்! முட்டை மாற்றி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.