குடும்பம் - குழந்தைகளையும் கவனியுங்கள் - நந்தினி
ந்யூக்லியர் குடும்பங்கள் நிறைந்த இந்த காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் மீது அக்கறையுடன் கவனத்தையும் வைத்திருப்பது மிக மிக முக்கியம்.
இது எந்த அளவிற்கு முக்கியம் என்பதை எடுத்து சொல்லும் நிஜ வாழ்க்கை சம்பவம் இது.
கர்ப்பவதியான தோழி ஒருவரின் கே.ஜி படிக்கும் மகளிடம் திடீரென சில மாற்றங்கள். சுட்டி பெண்ணாக இருந்தவள், பொய் பேசுவது, எதெற்கெடுத்தாலும் கத்துவது, படுக்கையில் சிறுநீர் கழிப்பது என ஏதேதோ செய்ய தொடங்கினாள்.
அவளை கண்டிப்பது, திட்டுவது என்பதற்கு மேல் பெற்றோர் இருவருமே அவளின் மாற்றத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
திடீரென ஒரு நாள் அந்த சிறுமி படிக்கும் பள்ளியில் இருந்து போன் கால்! ஸ்கூலில் ஒரு சிறுவனை கத்தியை வைத்து குத்தி விடுவேன் என திரும்ப திரும்ப மிரட்டுவதாக அவளின் கிளாஸ் டீச்சர் போன் செய்து கம்ப்ளெயின்ட் செய்தார்.
என்னவாகி விட்டது இவளுக்கு என்று குழம்பி போன தோழி, எங்களின் நட்பு வட்டதிற்கான வாட்ஸ்-அப் க்ரூப்பில் புலம்ப, அவருக்கு எல்லோரும் சொன்ன ஒரு அறிவுரை மகளிடம் தனியாக பேசு என்பது தான்.
இந்த அறிவுரையை முதலில் என் தோழி சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் தோழிகள் வற்புறுத்தவே சரி என ஏற்றுக் கொண்டார்.
ஒரு பார்க்கிற்கு மகளை அழைத்து சென்று அவளிடம் இயல்பாக கதை பேச, மெல்ல மெல்ல அந்த பிஞ்சு முகத்தில் பிரகாசம்!
மகளின் முக மாற்றம் புரிந்தாலும், தோழியின் மனதில் குழப்பம் இருக்கவே பேச்சை தொடர்ந்து, மெல்ல,
"ஏன் பாப்பா இப்போ எல்லாம் பேட் கேர்ளா பீகேவ் செய்ற?" என்று நேரடியாகவே கேட்க,
முதலில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவள், பின் அவளாகவே பேசி இருக்கிறாள்!
அவள் சொன்னது எல்லாம் இது தான்.
"இந்த குட்டி பாப்பா வந்தப்புறம் நீங்க என் கிட்ட பேசுறதே இல்லை, செல்லம் கொஞ்சுறது இல்லை, விளையாடுறது இல்லை..."
இதை படிக்கும் பெரியவர்களுக்கு இது சிறிய விஷயமாக தெரியலாம். ஆனால் குழந்தைகளின் மனதிற்கு இது ஒரு பூதாகரமான பிரச்சனை.
இரண்டாவது குழந்தையின் போது உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களால் அம்மா சோர்ந்து போயிருப்பதை புரிந்துக் கொள்ள முடியாத குழந்தை, அம்மா தன்னை புறக்கணிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
எனவே பெற்றோரின் கவனத்தை கவர அவள் செய்தது தான் கத்துவது, உடன் படிக்கும் சிறுவனை தொந்தரவு செய்தது எல்லாம்.
இதை மருத்துவர்கள் "attention seeking behavior" என்று சொல்வார்கள்.
முன்பு பெரியவர்கள் என யாரேனும் உடன் இருப்பதால், குழந்தைகளை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என நம்பலாம். அவர்கள் பெரிய குழந்தையிடம் சிறு குழந்தை வருகை பற்றி எடுத்து சொல்லி மனதை பக்குவப் படுத்தவும் செய்வார்கள்.
ஆனால் கணவன் மனைவி மட்டும் வாழும் இன்றைய சிட்டி வாழ்க்கையில் பாசம், அக்கறை இருந்தாலும் சில சமயம் குழந்தைகள் பற்றி நினைத்து பார்க்க தவறி விடுகிறோம்.
அதுவும் வேலைக்கு போகும் பெற்றோர் என்றால் வேலை சம்மந்தமான பிரச்சனைகள், சம்பள உயர்வு, ப்ரோமோஷன் என பல பல விஷயங்கள் நம் மனதை ஆக்ரமித்துக் கொள்கின்றன.
குடும்பத்தில் புது குழந்தையின் வரவு என்றில்லாமல், அம்மா, அப்பாவின் பாசம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் தோன்றும் போதும் குழந்தைகள் எந்த அளவிற்கும் செல்வார்கள்.
இதை பிடிவாதம், உடல் நலம் சரியில்லை(ஜுரம் அடிக்குது) என எப்போதும் சொல்வது, ஓடி போயிடுவேன் என பயமுறுத்துவது என பல வடிவங்களில் பார்க்கலாம்.
இது போல எந்த ஒரு சிறு அறிகுறி தெரிந்தாலும் பெற்றோர்களில் ஒருவரேனும் அந்த குழந்தையிடம் நேரம் செலவிட்டு பேசி தங்களின் அன்பை புரிய வைக்க வேண்டும்.
தன் பெற்றோருக்கு தன் மீது அக்கறை இருக்கிறது என்ற நம்பிக்கை வந்தாலே குழந்தைகள் தானாக இயல்புக்கு திரும்பி விடுவார்கள்.
குழந்தைகளின் இதயம் பூ போன்றது! அவர்களின் உலகமோ மிக மிக சிறியது! அதை வசந்தபுரியாக்கும் கடமை பெற்றோரான நம் அனைவருக்கும் இருக்கிறது.
எனவே குழந்தைகளின் மீது கவனத்தை வையுங்கள்! ஏதேனும் மாறுபட்டு தெரிந்தால் என்ன எது என்று விசாரித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
{kunena_discuss:747}