தொடர் - கீதம் சங்கீதம்....- 10 - அருணாச்சல கவிராயர் - தேவி
வணக்கம் நண்பர்களே..
இதோ மீண்டும் கீதம் சங்கீதம் தொடரில் அடுத்த பாடலுடன் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி..
இந்திய இதிகாசங்களில் இரு கண்களாக இருப்பது இராமாயணமும் , மகாபாரதமும். அந்த இரு புராணங்களையும் இசையாக, நடனமாக, நாடகமாக, சினிமாவாக, சொற்பொழிவாக என எல்லா விதத்திலும் நாம் கேட்டு இருக்கிறோம்.
இசை என்று வரும்போது கவிதை, பாடல், உரைநடை என்ற எல்லா பிரிவுகளிலும் அநேகம் பேர் அனுபவித்து இருக்கிறார்கள். அந்த விதத்தில் இராமாயணத்தை நாடக கீர்த்தனைகளாக கொடுத்தவர்
திரு.அருணாச்சல கவிராயர்.
இவர் இசை மும்மூர்த்திகள் மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. இளமையில் கவிபாடும் புலமையும் பாடல்களை இசையுடன் பாடும் ஆற்றலும் கைவரப் பெற்றவர். மேலும் நூற்பயன்களை இசையுடன் சொற்பொழிவாற்றும் திறமையும் இவருக்கு இருந்தது. அருணாசலக் கவிராயரின் பல்புலமைத் திறன்களைத் தருமபுர ஆதீனத் தலைவர் பெரிதும் மதித்தார். எனவே கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்து, குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார்.
இவர் படைப்புகளில் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது.
பொதுவாக இராமயணத்தில் மிக அழகான இடம் என்பது சுந்தர காண்டத்தை தான் கூறுவார்கள். அனுமனின் கீர்த்திகளை முழுதுமாக கூறும் சுந்தர காண்டத்தின் மிக முக்கியமான இடமாக கருதப்படுவது அனுமன் இலங்கையில் சீதை இருப்பதை கண்டு அறிந்து ராமனிடம் கூறும் இடம் தான்.
ராமனின் மேல் உள்ள அளவில்லா பக்தியால் சீதையை கண்டேன் என்ற பதம் கூட ராமனிடம் பதட்டத்தை உருவாக்கிவிடும் என்று எண்ணி, முதலில் கண்டேன் என்ற சொல்லை உதிர்ப்பதாக சில பேச்சாளர்களின் சொற்பொழிவுகளில் கேட்டு இருக்கிறேன்.
அந்த விளக்கம் எத்தனை பொருத்தமானது என்பதை அருணாச்சல கவிராயரின் இந்த கீர்த்தனையில் புரிந்தது.
“எந்த ஒரு மானிடராலும் புக முடியாத இலங்கை தீவில், தாமரை போன்ற கண்களை உடைய அன்னையை கண்டேன் ராமா. பனிகாலத்தில் பூக்கும் பாரிஜாதம் பூவை போலே நிறத்தில் , ஒவ்வொரு பகலையும் யுகமாக கழிக்கும் அன்னையின் அருகில் ராவணன் வர, நில்லடா என்று கூறி, இந்த போராட்டம் தாங்க மூடியாமல், தன் உயிரை மாய்த்துக் கொள்ள செல்லும் சமயம் அன்னையை கண்டேன். இனியும் தாமதம் செய்யாமல் உடனே மீட்க செல்..”
என்பதே இந்த கீர்த்தனையின் விளக்கம்.
சில வருடங்களுக்கு முன்னால் திருமதி.பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் குரலில் இந்த கீர்த்தனையை கேட்டு இருந்தேன்.. என்ன அழகான குரல்.. ஆரம்பத்தில் வரும் கண்டேன்.. கண்டேன்.. கண்டேன்.. இந்த வரிகளில் எத்தனை குழைவு. மகிழ்ச்சி.. ஆராவரம். . அத்தனையும் குரலில் காண்பித்து இருப்பார் ஜெயஸ்ரீ மேடம். அடுத்த அடுத்த வரிகளில் பாடலின் ஆழத்தை அத்தனை இனிமையாக கொடுத்து இருப்பார்கள். பாகேஸ்ரீ ராகத்தில் இந்த பாடல் கேட்பவரின் மனதை நெகிழ வைப்பதாக இருக்கும்.
நான் ரசித்த அந்த பாடல் வரிகளும், பாடல் ஒலிப்பதிவும் கீழே கொடுத்து இருக்கிறேன்.. நீங்களும் ரசித்து அனுபவியுங்கள்.
மீண்டும் ஒரு அருமையான இசையோடு சந்திக்கிறேன்.
ராகம் - பாகேஸ்ரீ
இயற்றியவர் - அருணாச்சல கவிராயர்
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் ராகவா நான் (கண்டேன்)
அண்டரும் காணாத இலங்காபுரியில்
அரவிந்த வேதாவை தரவந்த மாதாவை (கண்டேன்)
பனிகால வாரிஜம் போல நிறம் பூசி பகலோடு
யுகமாக கழித்தாலே பிரயாசி
நினைதங்கி ராவணன் அந்நாள் வர ச்சிச்சி
நில்லடா என்றே ஏசி
தனித்துதன் உயிர் தன்னை தான்விட மகராசி
சாரும் போதே நானும் சமயமிதே வாசி
இனி தாமதம் செயல் ஆகாதேன்றிடர் வீசி
ராம ராம ராம என்றெதிர் பேசி ||
மீண்டும் சந்திப்போம்.
{kunena_discuss:1092}