சிவராத்திரி சிறப்பு கீதம் சங்கீதம்....- 17 - தேவி

வணக்கம் பிரெண்ட்ஸ்.
கீதம் சங்கீதத்தில் அடுத்து ஒரு பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்து இருக்கிறேன்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நடனம் ஆடினார் பாட்டு கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது. இதற்கு முன்னாலும் ஒரு சில தடவை கேட்டு இருக்கிறேன் என்றாலும் இந்த அளவிற்கு கவனித்தது இல்லை.
நாட்டிய நாடகம் , கதாகாலட்சேபத்தில் புகழ் பெற்ற திரு. கோபால க்ருஷ்ண பாரதியார் எழுதிய பாடல். அவர் இயற்றிய எப்போ வருவாரோ பாடல் மிகுந்த பரிச்சயம் உண்டு. நடனம் ஆடினார் அவரோட கீர்த்தனைன்னு இப்போ தான் தெரியும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் பாடல்கள் பற்றித் தெரிந்து கொண்ட அளவு, மற்ற விவரங்கள் தெரியவில்லை.
இப்போ இந்தக் கீர்த்தனையை எடுத்துக் கொண்டதின் காரணம் சிவராத்திரி என்பதுதான்.
பரதத்தின் தலைவனான சிவனின் நடனத்தைக் கொண்டாடும் அற்புதமான பாடல். பாடலின் வரிகளும் அதன் ஜதியும் பார்ப்பவரை பரவசப் படுத்த வைக்கும்.
ஆடல் தலைவனைப் பற்றிய பாடல் என்பதால் பாடுபவரைப் பற்றி இல்லாமல் , நடன வகுப்புகள் பற்றி சில விவரங்கள்.
சென்னையில் எப்படி இசைத் திருவிழா புகழ் பெற்றதோ , அதே போல் சென்னையின் மற்றொரு கலைப் பொக்கிஷம் கலாக்ஷேத்ரா என்று சொல்லலாம்.
கலை மற்றும் கலாசாரத்திற்காக ஏற்படுத்தப் பட்டு இருக்கும் ஒரு மிகப்பெரிய கூடம் தான் கலாக்ஷேத்ரா.
திருமதி ருக்மணி தேவி அவர்களால் 1936 ஆரம்பிக்கப் பட்டது. நடனம், இசை மற்றும் கலை வகுப்புகள் இங்கு நடத்தப் படுகின்றது. நடனம் முக்கிய பிரிவாக செயல்படுகிறது. தனி வகுப்புகள் மட்டுமில்லாமல், டிப்ளோமா படிப்பாகவே படிக்கலாம்.
1993 கலாக்ஷேத்ரா தனி பல்கலைகழகமாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு மாணவர்கள் பரிவர்த்தனை மூலமும், தனியாகவும் வெளிநாட்டிலிருந்து கூட நடனம் கற்றுக் கொள்ள வருகிறார்கள். நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கலாக்ஷேத்ராவில் மாதம் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அங்கே படிப்பவர்கள் அரங்கேற்றம் நடக்கிறது. அதை தவிர நாட்டிய நாடகம் போன்ற மற்ற கலை நிகழ்சிகளும் நடைபெறுகின்றன. பரத நாட்டியம் மட்டுமில்லாமல் தென்னியந்திய நடனக் கலைகள் இங்கே கற்றுக் கொடுக்கப் படுகிறது.
கலாக்ஷேத்ராவில் அருங்காட்சியகம் ஒன்றும் அமைத்து இருக்கிறார்கள். இங்கே சுற்றிப் பார்க்கவும் அனுமதி உண்டு.
கலை, இலக்கியத்தில் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் கலாக்ஷேத்ராவிற்கு நடன உலகில் தனி இடம் உண்டு. அந்த மாணவர்களுக்கு உலகத்தில் எங்கு சென்றாலும் தனிச் சிறப்பு கிடைக்கும்.
மெரினாவிற்கு எப்படி ஒரு சிறப்பு உண்டோ, அதே போல் மெரினாவின் அருகில் அமைந்துள்ள கலாக்ஷேத்ராவிற்கும் சிறப்பு உண்டு.
இவை எல்லாம் நான் அறிந்து கொண்ட சில விவரங்கள்.
இப்போது இந்தப் பாடலைப் பற்றி சொல்ல வேண்டும்.
நந்தனார் வேள்வித்தீயில் புகுந்து வெளிவந்த போது அவர் கண்ணில் தெரிந்த நடராஜனின் ஆடல் காட்சியை வரிகளால் வெளிப் படுத்தி இருக்கிறார் கோபாலக்ருஷ்ண பாரதியார். அவர் இயற்றிய நந்தனார் சரித்திரம் நாட்டிய நாடகத்தில் இடம் பெற்ற பாடல் இது.
நடன குருவான பதஞ்சலி முனிவருக்கு வாக்களித்தப்படி கைலாயத்தில் கண்ட ஆனந்த நடனத்தை இங்கே தில்லையிலும் ஆடுவதாக கற்பனை செய்கிறார். அதோடு எட்டுத்திசையும் நடுநடுங்க, அண்டம் அதிர, கங்கை துளி சிதற, அத்தனை பேரும் கொண்டாட , பாடல் ஆசிரியர் இஷ்டமுடன் பாட நடனம் ஆடினார் தில்லையம்பலன் என்று எழுதி இருக்கிறார்.
இந்தப் பாடலின் வரிகளில் மிகக் கவர்ந்தது வெகு நாகரிகமாகவே என்ற சொல்லே. அதிகம் பாடல்களில் கேட்டிராத சொல். நடனம் என்ற சொல்லில் ட (Da) என்று உச்சரிக்கப் படாமல் Ta என்று உச்சரிக்கப் படுவது பாடலுக்கு தனி அழகு சேர்க்கிறது.
அதே போல் நடனம் என்றவுடன் அதற்கான ஜதியோடு சேர்த்து பாடல் இயற்றியிருக்கிறார்.
பாடல் வசந்தா ராகத்தில் அமைந்து இருக்கிறது. அடத் தாளம்.
அதனால் இந்தப் பாடலை வாய்ப் பாட்டாக இல்லாமல் நடனமாகவே காணும்படி லிங்க் பகிர்ந்து இருக்கிறேன்.
இந்த சிவராத்திரியில் சிவனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
நன்றி. மீண்டும் வேறு பாடலில் சந்திக்கலாம்.
பல்லவி
நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த (நடனம்)
அநுபல்லவி
வடகயிலையில் முன்னாள் மாமுனிக்கருள் செய்தபடி தவறாமல் தில்லைப்பதியில் வந்து தை மாதத்தில் குரு பூசத்தில் பகல் நேரத்தில் (நடனம்)
சொல்கட்டு ஸ்வரம்(ஜதி)
தாம் தகிட தகஜம் தகணம் தரிகும் தரிதீம் திமித
தகஜம் தகிணம் தத னீ ச ரி ச ரி சா சா
ரி ச தா ச னி த த ரி ச சா த னி சா ச சச
ரீ ச ரீ ரி ரீ ரி ரீ ச னி த ச ச ச ரி ச
ச ரி ச ச ச னி ச ரி ச ரி ச ச சா ச ரி ச னி
தா தா த னி த த மா த ம க ரி ச
சரணம்
அஷ்டதிசையும் கிடுகிடுங்க சேஷன்தலை நடுங்க
அண்டம் அதிர கங்கை துளி சிதற பொன்னாடரும் கொண்டாட
இஷ்டமுடனே கோபாலக்ருஷ்ணன் பாட சடையாட அரவு படமாட
தோளில் தொடியாட தோம்தோமென்று பதவிகள் தந்தோமென்று (நடனம்)
தோம்-தகிட தகஜெம்-தகணம்-தரிகும்-தரி தீம்-திமிததகஜம்
தகிணம்-தரிணம்தக-தஜ்ஜணுஜ்ஜணு-தித்தாம் தித்தாம்
தித்தாஹத் தஜ்ஜணு-தணந்த-டீங்குடீங்கு-தையதையதக
ததிமிகிடதக-தகதிமிதகஜணு-தாகிடதகதாம்
தக்கிட-தகதையென (நடன)
மீண்டும் சந்திப்போம்.
{kunena_discuss:1092}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.