ஆரோக்கியக் குறிப்புகள் - டீ அருந்துவது ஆரோக்கியமான பழக்கம் தானா?
பல ஆண்டுகளாக, பல்வேறு ஆய்வுகள் காபிக்கு பதிலாக டீ குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுவதாக காட்டுகின்றன. அதனால் தான், சமீபத்திய புள்ளிவிபரத்தின் படி, தேநீர் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது பானமாக இருக்கிறது (முதல் இடம் தண்ணீருக்கு!).
தேநீர் அருந்துவது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்கும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
ஆனால் தேநீர் நோயை குணப்படுத்தும் மருந்து இல்லையென்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக தேநீரில் மூன்று முக்கிய கலவைகள் உள்ளன.
கேடசின் – தேநீரின் பெரும்பாலான ஆக்ஸிஜனேற்றங்கள் (antioxidants) மற்றும் சுவையை வழங்குவது இது.
எல்-தியானைன் - இயற்கையில் அரிதான அமினோ அமிலம். இது ஒருவரின் நரம்பியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பல ஆசிய நாடுகளில் பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவும் ஒரு துணைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
காஃபின் - இது சரியான அளவுகளில் மூளை ஆரோக்கியத்திற்கு உதவக் கூடியது. சிறு தலைவலியை குணப்படுத்தவும் உதவக் கூடியது.
எனவே, மிக அதிக அளவில் அல்லாமல், தேவையான அளவில், தரமான நல்ல தேயிலையில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்துவது ஆரோக்கியமானது. நம்மை ரிலாக்ஸ் செய்யக் கூடியதும் கூட!
ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே?!