பொது - எமோஜி இல்லாமல் ஒரு நாள் - அனுசுயா
நீரின்றி அமையாது இவ்வுலகுனு சொல்லிய காலம் போல இமோஜி இன்றி அமையாது இவ்வுலகு என சொல்லும் காலத்தில் வாழ்கிறோம். கொஞ்சம் நிதானித்து யோசித்தால் , நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு எத்தனை இமோஜிகளை பயன்படுத்துகிறோம் என்பது புரியும். நம்மில் பெரும்பாலானவர்கள் நம் அன்றாட வாழ்வின் இமோஷன்களை வெளிப்படுத்துவதே இமோஜிகளால் தான் என்றாகிவிட்டது. இல்லையா ?
என் சிறு வயதில் ஊரில் இருந்த ஒருநாள் , தென்னந்தோப்பை விற்கும் விவகாரத்தில், சாமிநாத மாமாவிற்கும், பெரியப்பாவிற்கும் சண்டை. ரெண்டு பேரும் உரக்க கத்தி கத்தி மாறி மாறி திட்டி கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள் (மறுநாளே கட்டிங் போட்டு சமரசமானது கிளை கதை ). சில வருடங்களுக்கு பின், பெரியப்பாவின் மகன் ரமேஷ் அமெரிக்காவிற்கு போனபொழுது ,மச்சான் - செட்டில் ஆய்ட்டிங்க போங்க என ஆத்மார்த்தமாக சொல்லி , அட்டகாசமாக மாமா சிரித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது
மனதில் தோன்றியதை , தோன்றிய விதத்தில், தோன்றிய நேரத்தில் , செய்கைகளின் மூலமோ, வார்த்தைகளின் மூலமோ வெளிப்படுத்தும் சுபாவத்தையுடைய பெரியப்பா, 2 நாட்களுக்கு முன்பு சாமிநாத மாமாவின் டார்ஜிலிங் ட்ரிப் போட்டோஸ் ,எங்கள் பேமிலி குரூப்பில் ஷேர் செய்யப்பட்ட பொழுது , வித வித எமோஜிகளால் தன் இமோஷன்களையும் லைக்ஸையும் காட்டினார். நேற்று , பெரியப்பாவின் அமெரிக்கா பயண போட்டோக்களை , கட்டை விரலை உயர்த்தியும் ஹார்ட் டை அனுப்பியும் , உதட்டை குவித்த முத்தங்கள் மூலமும் மாமா தனது எக்ஸ்பிரஷன்களை கொட்டுகிறார். இதை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி , தென்காசி வரை எட்டி இருக்கிறது என நினைத்து மகிழ்வதா அல்லது உள்ளத்தில் தோன்றியதை உள்ளபடி வெளிக்காட்டும் அடிப்படை மனித குணம், இந்த இமோஜிகளால் இயந்திரத்தனமாக மாறிவிட்டது என வருந்துவதா என தெரியவில்லை.
அதெல்லாம் சரி. ஏற்கனவே “ Monday Blues”. நாளைக்கு ஆபிசுக்கு போகணுமேன்னு நினைச்சதுல சண்டே சாயங்காலமே Monday Morning மாதிரி தான் தெரிஞ்சது. இதுல என்ன திடீர்னு 90- களுக்கு பயணமாகி ஒரு flashback வேறு என உங்களுள் சிலருக்கேனும் தோன்றி இருக்குமே ? காரணம் இருக்கிறது ..
இன்று காலையில் ஆபீஸ் போகும் வழியில் , ரோட்டில் இருவர்க்கிடையில் சண்டை. கண்டமேனிக்கு கன்னடத்தில், ஒருவரை ஒருவர் திருப்பி திருப்பி திட்டிக் கொண்டிருந்தார்கள்.. அந்த சின்ன ரோட்டில் , Traffic ஸ்தம்பித்தது... ஒரு எழுத்தாளனிற்கு அல்லது எழுத்தாளனாக ஆக முற்படுபவனிற்கு வாய்த்த சாபம் -- தன்னை சுற்றி நடப்பது எல்லாவற்றையும் கதையாக அல்லது ஒரு சுவாரசிய எழுத்தாக மாற்றும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஒரு குரங்கு புத்தி ஆராயத்தொடங்கும் {சில சமயங்களில் உரக்க சொல்லும்படி யோசனைகள் வாய்க்கும் . பல சமயங்களில், நீ ஏண்டா சிரிச்சபடி என் சண்டையை பாக்கறன்னு அவங்க போட்டுட்டு இருந்த சண்டை நின்னுபோய், நம்மளோட ஒரு புது சண்டை போடற நிலைமையை கொண்டு வந்து விட்டுடும் } அந்த சண்டையை பார்த்தபடி சில நொடிகள் நின்னபொழுது, குரங்கு புத்தி குதித்தபடி சொல்லிச்சு , குரு { மச்சான் என்னும் தமிழ் சொல்லின் கன்னட பதம் } இதே சண்டையை இமோஜியால போட முடியுமா ? அப்படி போடறதுனா , என்ன என்ன இமோஜி யூஸ் பண்ண வேண்டி இருக்கும் ? இதை யோசிச்சபடியே வண்டி ஓட்டி ஆபிஸ் போய் சேர்ந்து , வாட்ஸ் அப் ஐ பார்த்தால், இருந்த நாப்பது மெசெஜ்களில் முப்பதில் எமோஜிதான் எட்டி பார்த்தது.
அந்த ஒரு கணத்தில் உதித்த ஒரு யோசனை தான். இன்றைக்கு ஒரு நாள், ஒரே ஒரு நாள் - எந்த ஒரு எமோஜிகளையும் உபயோகிக்காமல் - வார்த்தைகளால் மட்டுமே பதில் போடலாமேன்னு { voice message கணக்கில் வராது} ... முயன்றால் முடியாதது எதுவுமில்லைனு மூதாதையர்கள் சொல்லி இருக்காங்க இல்லையா ? முயன்று பார்க்க முடிவு செய்திருக்கிறேன். முயற்சி திருவினையாச்சா அல்லது முயல முற்பட்ட மூன்று நிமிடங்களுக்குள்ளேயே மூச்சுமுட்டி , முயற்சி கைவிடப்பட்டதா என நாளை சொல்கிறேன்…
{kunena_discuss:747}