பாண்டுரங்கன் பக்தர்கள் கதை – 03 - சக்கு பாய் - தங்கமணி சுவாமினாதன்
தோழிகளோடு மணலில் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருந்தாள் ஐந்து வயது சக்குபாய்.துறுதுறுவென்று கொள்ளை அழகுடன் அவள் ஓடியாடி விளையாடுவதைப் பார்த்தால் பார்ப்பவர்கள் மனது கொள்ளைபோகும்.
தந்தை கங்காதரராவ் தாய் கமலாபாய் இருவருமே பாண்டுரங்க பக்தியில் திளைப்பவர்கள் என்பதால் சக்குவுக்கு இயல்பாகவே பாண்டுரங்கன் மீது அலாதி பக்தி அந்த குழந்தைப் பருவத்திலேயே.
தோழிகள் அனைவருமே ஆளாளுக்கு ஒரு மணல் வீடு கட்ட சக்குவும் ஒன்றைக் கட்டி முடித்தாள்.ஆயிற்று விளையாடி முடித்தாகிவிட்டது.தோழிகள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட சக்கு மட்டும் தனியாக அமர்ந்து தான் கட்டிய மணல் வீட்டை ரசித்துக் கொண்டிருந்தாள்.அப்போது கிழவர் ஒருவர் தம்புராவை மீட்டிக்கொண்டு பகவன் நமாவைச் சொல்லிக்கொண்டு கணகளை மூடியபடி நடந்து வந்தார்.வந்தவர் சக்கு கட்டியிருந்த மணல் வீட்டின் மேல் கால்வைக்க அவ்வீடு சிதைந்து போனது. தான் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு அந்தக் கிழவரின் கால்பட்டு சிதைந்து போனது கண்டு மிகவும் வருந்திய சக்கு மிகவும் கோபம் கொண்டாள்.அந்தக் கிழவரோ அவர்பாட்டுக்கு நடந்து சென்று கொண்டே இருந்தார் பாட்டுப் பாடியபடி.
சக்கு அவர் பின்னாலேயே ஓடினாள்.பெரியவரே என்று கூவியழைத்தாள் அவரை.அவர் பாடுவதை நிறுத்திவிட்டுக் கண்களைத் திறந்தார்.அவருக்கு அச்சிறு பெண் எதற்காகத் தம்மை அழைக்கிறாள் என்று புரியவில்லை.
என்ன குழந்தாய் எதற்காக என்னை அழைத்தாய்?..
பெரியவரே..நான் கட்டிய மணல் வீட்டை காலால் மிதித்துக் கலைத்துவிட்டு ஏதும் செய்யாதவரைப் போல் செல்கிறீரே?என்று கடிந்து கேட்டாள்.
அப்படியா?நீ கட்டிய வீட்டை நான் மிதித்துக் கலைத்துவிட்டேனா?அறியாமல் செய்து விட்டேன்..உனக்கு நான் ஒரு மணல் வீட்டைக் கட்டிக் கொடுத்து விடுகிறேன் சரியா?என்றார்.
வேண்டாம்..நீங்கள் ஒன்றும் எனக்கு மணல் வீடு கட்டித் தர வேண்டாம்..என்றாள் சக்கு.
பின் நான் என்ன செய்வது..?இடித்த வீட்டைக் காட்டித் தருவது நியாயம்தானே என்றார் அக்கிழவர்.
இல்லை..நீர் செய்த தவறுக்கு வீடு சரியாகாது..
வியப்பாய் இருந்தது அக்கிழவருக்கு..பின் வேறென்ன நான் செய்ய வேண்டும்?
உங்கள் கையில் வைத்திருக்கிறீர்களே அது என்ன?..
ஓ..இதுவா ?இது தம்புரா..
அதுதான் வேண்டும்.நீங்கள் என் வீட்டை சிதைத்ததற்கு பதிலாக அந்த தம்புராவைத் தாருங்கள்..
சிரித்தார் அக்கிழவர்.ஐயோ இது என்ன நியாயம்?மணல் வீட்டுக்குப் பதில் தம்புராவா?..
ஆம்..எனக்கு அந்த தம்புராதான் வேண்டும்.ம்ம்ம்ம் அழ ஆரம்பித்தாள் சக்கு.
அழும் குட்டிப் பெண் சக்குவைப் பார்த்து சிரிப்பாய் இருந்தது அக்கிழவருக்கு.அவள் மேல் ஒரு பரிவும் ஏற்பட்டது அவருக்கு.
சரி..சரி..அழாதே...இந்தா இந்த தம்புராவை வைத்துக்கொள்..தம்புராவை சக்குவிடம் நீட்டினார் அவர்.
முகமெல்லாம் சந்தோஷமாக தம்புராவை வாங்கிக்கொண்டாள் சக்கு.அக்கிழவர் விரலால் அதனை மீட்டியது போலவே மீட்டிப் பார்த்தாள்.ம்கூம் சரியாக வரவில்லை.ஒருவேளை இவரைப் போலவே கண்களை மூடியபடி பாடிக்கொண்டே நடந்து சென்றால் சரியாக இதனை மீட்டவருமோ என்று எண்ணியவள்
அது போலவே செய்ய கண்களை மூடியிருந்ததால் எக்குத்தப்பாய் கால் வைக்க கீழே விழுந்தாள்.
சிரித்தபடியே அவளைத் தூக்கிவிட்ட அக்கிழவர் தம்புராவை எப்படி மீட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததோடு அவள் காதுகளில் பஞ்சாட்சர மந்திரத்தையும், ஓம் நமோ நாராயணா எனும் நாமத்தையும் உபதேசித்தார்.மேலும் சக்குவின் தலையில் கைவைத்து பிரகலாதனைப் போல் எப்பவும் இறைனாமத்தைச் சொல்லிக்கொண்டிரு என்று அருளாசி செய்துவிட்டுக் கிளம்ப என்ன தோன்றியதோ தம்புராவை அவரிடமே திருப்பிக்கொடுத்தாள் சக்கு.
அந்தப் பெரியவரை சந்தித்த பிறகு சக்கு பெருமளவு மாறிவிட்டாள்.இப்போதெல்லாம் அவள் தோழிகளுடன் விளையாடச் செல்வதில்லை.சதா பாண்டுரங்கன் நாமத்தையே சொல்வதும் பாடுவதுமாக இருந்தாள்.
பெற்றவர்களுக்கு மகளின் பக்தி கண்டு பெரு மகிழ்ச்சி.காலம் சென்றது.சக்கு திருமணவயதை அடைந்தாள்.
வீட்டில் அவளின் திருமணப் பேச்சு எழுந்த போது அவள் தான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் அப்படிச் செய்தால் பாண்டுரங்கனே எனது கணவராக வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.இது நடக்கக் கூடிய காரியமா என அவளின் பெற்றோர்கள் வருத்தமடைந்தனர்.