பயணங்கள் முடிவதில்லை - 04 - சென்னை 'அன்புடன்' வரவேற்றது!!!! - பிந்து வினோத்
சென்னை
சென்னை காற்றை சுவாசித்த உடன் எங்கிருந்து தான் அப்படி ஒரு எனர்ஜி வந்ததோ தெரியாது!!! களைப்பு, வலி எல்லாம் காற்றில் பறக்க தெம்புடன் விமானத்தில் இருந்து குழந்தைகளுடன் இறங்கினேன்.
Immigration இடத்தில் இருந்த சின்ன க்யூவில் நின்று ஆபிசரிடம் பாஸ்போர்ட், OCI கொடுக்க, என் தோளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் முகத்தை காட்ட சொன்னார்.
எதையோ செக் செய்து விட்டு, நேராக இருங்கள் என்றார்.
என்னை தான் சொல்கிறார் என்று நான் அட்டென்ஷனில் நிற்க, குழந்தையை நேராக வையுங்கள் என்றார் அவர் கடுப்புடன்
‘அட போங்கய்யா நீங்களும் உங்க சட்டமும்’ என மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.
ஒரு வழியாக அவர் செக் செய்து முடிக்க, பெட்டிகள் வரும் இடத்தை நோக்கி சென்றோம்.
அங்கே போகும் போது வந்த சின்ன சின்ன வரிசைகளை கடக்கும் போது, வீல்-சேரில் வயதான பெண்மணி ஒருவரை அழைத்து வந்துக் கொண்டிருந்த ஏர்போர்ட் பணியாளர், ‘குழந்தை வச்சிருக்காங்க, அவங்களை முதல்ல அனுப்புங்க’ என்று எனக்காக ரெகமன்ட் செய்தார்.
பரவாயில்லையே நம் ஊரில் இப்படி எல்லாம் ஹெல்ப் செய்கிறார்களே என்று மனம் குளிர்ந்து ஒரு தாங்க்ஸ் சொன்னேன். அது தான் பெரிய பிழையாகி விட்டது!!!
பெட்டிகள் வந்து சேரும் இடத்தை அடைந்து, எங்கள் பெட்டிகள் வந்து விட்டதா என தேடும் போது அதே பணியாளரும் அங்கே இருந்தார்.
ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய உடன் பெட்டி தூக்க வேண்டுமா, வேண்டுமா எனக் கேட்டு வருவார்களே, அதே போல கிட்டத்தட்ட இங்கேயும் உண்டு... இங்கே எக்ஸ்ட்ராவாக க்ரூப் க்ரூப்பாகவும் செயல் படுகிறார்கள்.
என்னிடமும் சிலர் பெட்டி எடுக்க வேண்டுமா என்றுக் கேட்டார்கள்... அப்படி கேட்டவர்களில் நான் மேலே சொன்ன பணியாளரும் ஒருவர்...
நமக்கு உதவி செய்தவராயிற்றே, நாமும் அவருக்கு உதவி செய்வோம் என அவரிடமே பெட்டிகளை எடுக்க சொன்னேன்.
ஒவ்வொரு பெட்டியாக வர, அதை இரண்டு ட்ராலிகளில் எடுத்து வைத்து உதவியவர், அந்த ட்ராலிகளை தள்ளிக் கொண்டு எங்களுடனே வந்தார்...
ரிசீவ் செய்ய நின்றிருக்கும் கூட்டம் கண்ணில் படவும்,
“மேடம், டாலர் நோட் வைத்திருக்கிங்களா?” என்றார்.
இல்லை என நான் தலை அசைக்க,
“என்ன மேடம் 20 டாலர் கூடவா எடுக்காம வருவீங்க...” என்றார்.
மேலே பேசாமல் நான் என் உறவினர்களை தேடி கண்டுப் பிடிக்கும் மும்முரமான வேலையில் ஈடுபட... அத்தை, மாமா, அக்கா குடும்பம் கண்ணில் பட்டது. என் பெற்றோர் ஊருக்கு சென்றிருப்பதால் அவர்கள் அங்கே வரவில்லை.
வெளியே வந்தோமோ இல்லையோ...ஒரே நலம் விசாரிப்புகள்... செல்லம் கொஞ்சல்கள்... என எதிர்பார்த்தது போலவே பேமிலி கெட்-டுகெதர் நடந்தது... ரொம்பவும் மகிழ்ச்சியான தருணங்கள் அவை...!!!
அப்படியே பேசியபடி சாலையை கடந்து கார் பார்க்கிங் அருகே வந்தோம்...
பெட்டிகளை எடுத்து வந்தவரிடம் எவ்வளவு ரூபாய் வேண்டும் என்றுக் கேட்க, “1800 ரூபாய் கொடுங்க...” என்றார்.
என்னடா நாம இல்லாத டைம்ல் இந்தியா இவ்வளவு காஸ்ட்லியாகி விட்டதா என நான் வாயை பிளக்க...
“ஒரு பெட்டிக்கு 3௦௦ ரூபாய் வேண்டும்...” என்றார் கறாராக.
பெட்டிகளை எடுக்கும் இடத்தில இருந்து ட்ராலியில் அதை தள்ளிக் கொண்டு வர ஐந்து நிமிடம் கூட ஆகி இருக்காது...
குழந்தை கையில் இல்லையென்றால் நானே கூட எடுத்து வந்திருப்பேன்...!
உழைப்புக்கு பணம் கொடுக்கலாம்... தவறில்லை... ஆனால் இது பகல் கொள்ளை...!
பல வருடம் கழித்து வந்திருக்கிறோம், வந்தவுடன் எதற்கு ஒரு நெகடிவ் எனர்ஜி என்று நான் அவர் கேட்பதை கொடுக்க சொல்ல, எப்படியோ, பேசி ஆயிரம் ரூபாய் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்கள்...
போகும் முன்,
“இவ்வளவு பெட்டி எடுத்துட்டு வராமால் கம்மியா எடுத்துட்டு வாங்க... அப்போ இவ்வளவு காசு கொடுக்க வேண்டாம்...” என எனக்கு இலவச ஆலோசனை வேறு வழங்கி சென்றார்
நம் ஏர்போர்ட்டை பொறுத்த வரை இது போன்ற புலம்பல்களை நீங்கள் நிறைய பேரிடம் கேட்கலாம்... அதுவும் குழந்தைகளுடன் இருப்பவர்களின் புலம்பல் எக்ஸ்ட்ரா அதிகம்!
அப்படி புலம்பாமல் இருக்க, ஒன்று நீங்களே ட்ராலியை தள்ளி பழக வேண்டும்... இல்லை, நீங்களோ, உங்கள் உறவினர் ஒருவரோ கட்-அண்ட்-ரைட்டாக பேசுபவராக இருந்து அவர்களிடம் பேசி வாக்குவாதம் செய்து ரேட் பேச வேண்டும்... வேறு வழியே இல்லை!
அவரை மறந்து பல வருடங்கள் கழித்து சந்திப்பதால், ‘குண்டாகிட்ட!’, ‘ஒல்லியாகிட்ட’, ‘வளர்ந்துட்டா’, ‘முடி லாங் ஆகிருச்சு..’ என ஏதேதோ பேசியபடி நாங்கள் இனோவாவில் ஏர்போர்ட் விட்டு வெளியே வந்தோம்...
போகும் வழியில் சரவணபவனில் சாப்பிட்டு செல்லலாம் என முடிவு செய்து சரவணபவன் சென்றோம்.
முதல் கேள்வியாக,
‘ஏசியா, நான் ஏசியா?” எனக் கேட்டார்கள்.
ஏற்கனவே முகம் முழுக்க வியர்வை துளிகள்... நான் ஏசி எல்லாம் வாய்ப்பே இல்லை... ஏசியே தான்!!!
ஏசி ஹாலில் சென்று மெனு வாங்கி தோசை விலையை பார்த்து நான் மயங்கி விழாதது ஆச்சர்யம் தான்...!
சரி, தரத்திற்கு நாம் தரும் விலை என மனதை தேற்றிக் கொண்டேன்...
கூடவே இன்னுமொரு கேள்வி...!
சென்னை பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் எல்லாம் தோசை விலை என்னவாக இருக்கும்???
சரி, யூ.எஸ் ரிட்டர்ன்ட் கெத்தை மெயின்டெயின் செய்வோம் என்று கேள்வியை பின்னுக்கு தள்ளி உணவை & உறவினர்களின் பேச்சை ரசிக்க தொடங்கினேன்...
பயணம் தொடரும்...
{kunena_discuss:1127}