மணப் பெண் தேவை - ஜான்சி
எப்படிப் பட்ட வரணை எதிர் பார்க்கிறீர்கள் என்ற தரகரின்
கேள்விக்கு.........
அழகில் சிறந்தவளும்;
பணி புரியும் அளவிற்கு படிப்புக் கொண்டவளும்;
சீர் வரிசை சீதனங்கள் நிறைவாக செய்யும் குடும்ப நிலை இருப்பவளும் மட்டும் போதுமெனக்கு........
அகவை 18 தொடங்கி 25 வரை இருப்பது நலமென்றார்...
மணமுடியா பெண் என்றால் மிக்க சம்மதமே;
ஆயினும், பொட்டிழந்த விதவை என்றாலும் பரவாயில்லை;
விவாகம் முறிந்த பெண்ணாக இருந்தாலும் தடையில்லை.
ஒரே ஒரு குறிப்புண்டு கேளீர்;
அத்தகைய பெண்ணிற்கு குழந்தை இருத்தல் மட்டும் எமக்கு தகாதென்றார் .
இப்படி பெண்ணிருந்தால் இக்கணமே கூறிடுவீர்;
ஜாதகங்கள், தோஷங்கள் எதுவும் பார்க்க தேவையில்லை;
இப்போதே மணம் முடிக்க நான் சம்மதித்திடுவேன் .
ஒரு போதும் நான் அவளை கண்கலங்க விட மாட்டேன்,
கண்மணிப் போலவே என்றென்றும் காத்திடுவேன்.
அவள் மகிழ்ச்சிக்கு மாறாக எதுவும் நிகழ விட மாட்டேன்.
ஒருவேளை அவளுக்கு விருப்பம் இல்லை என்றால் ..........
என் 15 வயது மகளையும், 10 வயது மகனையும் கூட விடுதியில் சேர்த்திடுவேன்.
அவளது விருப்பத்திற்கு ஏற்ற விதமாக நான் என்றுமே நடந்திடுவேன்.
என்றே கூறிட்டார்.....
கடந்த மாதத்தில் மனைவியை இழந்திருந்த அந்த புது மாப்பிள்ளை.