கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 50 - வருவாயா என்னவனே...!!!! - மீரா ராம்
வந்து வந்து போகும் உன் நினைவுக்கும் பஞ்சமில்லை…
நொந்து வெந்து போகும் என் நிலைக்கும் மஞ்சமில்லை…
எத்தனை முறை எனைக் கடந்த உன்னை ரசித்திருக்கிறேன் தெரியுமா?...
எத்தனை முறை நீ எனைப் பார்க்க வேண்டியிருக்கிறேன் தெரியுமா?...
எத்தனை முறை உன்னை உதட்டுக்குள்ளேயே அழைத்திருக்கிறேன் தெரியுமா?...
எத்தனை முறை என்னை அழைக்கமாட்டாயா என ஏங்கியிருக்கிறேன் தெரியுமா?..
எத்தனை முறை என் உள்ளம் நீ உணர கடவுளிடம் மன்றாடியிருக்கிறேன் தெரியுமா?..
எத்தனை முறை உன் உள்ளம் தனை நீ கூறமாட்டாயா என தவித்திருக்கிறேன் தெரியுமா?...
எத்தனை முறை!!!!!!....
அத்தனை முறையும் நான் உனை சேர்ந்திட தானடா என் கண்ணா…
ஏனடா அதனை உணராது நடந்து கொள்கிறாய்?...
நான் என் பாவம் செய்தேன்?...
மனதால் உன்னை நினைத்தது குற்றமா?...
உயிராய் உன்னை காதலிப்பது குற்றமா?..
எதை குற்றமென்று கூறுவாய் நீ?...
குற்றம் செய்தது தவறெனில்
அக்குற்றத்தை செய்யத் தூண்டியதும் யாரடா???…
பதில் சொல்வாயா என்னவனே…
இந்நொடி இக்கணம் நான் வேண்டுவது
உன் கடைக்கண் பார்வை மட்டுமே…
அதையேனும் எனக்கு கொடுப்பாயா அன்பே…
அந்த ஓர் நொடி பார்வை போதும்
என்னுள் இலட்சம் பூக்கள் பூத்திடுமே…
ஏனடா அது உனக்கு புரியவில்லை…
பேதலித்து நிற்கும் பாவையும்
இவள் கொண்ட வேதனையும்
நீ உணர்வதும் எந்நாளோ?...
ஆயிரம் வலிகள் என்னுள் நான் உணர்ந்தாலும்
அவை அனைத்தும் உன்னைக் காணும் வரையில் மட்டுமே…
ஆம்… ஆதவனைக் கண்ட பனித்துளியாய் அது உருகி போகிறது என்னுள்…
எப்படியடா உன்னை இப்படி காதலிக்கிறேன்…
நானே அறிந்துகொள்ளமுடியவில்லை..
உன்னைக் காணாது தவிக்கும் நான்
உன்னைக் கண்ட நொடி குதிப்பதும் விந்தையே…
இந்த காதல் பொல்லாதது…
இந்த காதல் சொல்லாதது…
இந்த காதல் கல்லாதது…
இந்த காதல் நில்லாதது…
பரந்து விரிந்த உன் நெஞ்சமதில்
புள்ளியாய் என் வானம் இருந்திட
நான் கொண்ட காதல்
வெறும் மேகக்கூட்டமாகவே கலைந்திடுமா?..- அல்லது
அது மழையாய் உருமாறி உன் இதயம் வந்து சேர்ந்திட
உன் காதல் வழி செய்திடுமா?...
வழியினை எதிர்பார்த்து நானும்
விழியினை பதித்து காத்திருக்கிறேன்….
வருவாயா என்னவனே!!!!....
இக்கவிதைத் தொடரின் ஐம்பதாவது கவிதை இது…
தொடர்ச்சியாக நான் இக்கவிதை தொடரை எழுத எனக்கு ஆதரவும் ஊக்கமும் தந்த சில்சீக்கும் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…
நன்றி….
பூ மலரும்…
{kunena_discuss:1088}