04. இளம்பூவை நெஞ்சில்... - மீரா ராம்
பேரழகான உன் ஒற்றை சொல்லில்…
ஏதோ ஒர் எரிச்சலில் மனம் துவண்டிருக்க,
கவலை வந்து மனதை நிரப்ப முனைந்த நேரம்
சட்டென வந்தது ஒரு குறுஞ்செய்தி…
யார் அது என்று சலிப்புடன் பார்த்த கண்கள்
அதில் மின்னிய பெயரை கண்டதும் உற்சாகம் கொண்டதோ?..
அதெப்படி சாத்தியமானது என எண்ணிய வேளையில்
அளவில்லா காதல் கொண்ட நெஞ்சம்
கடிவாளமில்லா குதிரையில் பயணிக்க ஆரம்பிக்க,
அதை கட்டுப்படுத்தும் வித்தை அறியாது நானோ பேதலிக்க,
நீயோ கண்டும் காணாமல் இருந்து என்னை இம்சிக்கிறாயே ஏனடா?..
உன் பெயர்…. நீ,…. அல்லது உன் சம்பந்தப்பட்ட ஒன்றே ஒன்று போதுமா
நானிருக்கும் எந்த ஒரு மனநிலையையும் மாற்ற?..
கள்வன் தாண்டா நீ…
திருடிக்கொண்டு சென்றுவிட்டாயே என் இதயத்தை….
தொலைந்தது இதயம் மட்டும் என்று எண்ணிடாதே….
நானும் தான்…
ஆம்… உன்னில் என்னை தொலைத்து நாட்களாச்சு…
இரவில் தூக்கமும் பறிபோயாச்சு…
பசி, தாகமும் ஓடிபோச்சு…
என்ன மாற்றமடா இது?
எப்படியடா என்னை இப்படி மாற்றி போனாய்?...
தேடலில் கிடைக்காத விடையென தெரிந்தும்
கேள்வி கேட்கும் என்னை நீ என்ன செய்வாயென
தெரியாமலிருந்தால் தான் ஆச்சரியம்…
என்னடா கண்ணா பார்க்கிறாய்?..
எப்படி எனக்கு அது முன் கூட்டியே தெரியுமென்றா?...
பின்னே நீ அடிக்கடி சொல்வது போல் தானே நானிருக்கிறேன்…
எனக்கே எனக்கான செல்ல வார்த்தை அல்லவா அது…
ஆம்…. என்னவன் என்னைப் பார்த்து, சிரித்து
ரசித்து சொல்லும் காதல் அல்லவா அது…
ஒவ்வொரு முறை நீ அதை சொல்லும்போதும்
உள்ளத்தில் ஏற்படும் உவகை அறிவாயா கண்ணா?...
என் மீதான உன் காதலை அந்த ஓர் வார்த்தையில்
நானறிவேன் என்பதும் இன்றுவரை உனக்கு தெரியாமல்
நான் பாதுகாக்கும் சிதம்பர ரகசியமே…
உன் மேல் நான் கொண்டுள்ள என் காதலும் அழகானது தான்…
எனினும் அது நீ சொல்லும் வார்த்தையை விட அழகானது அல்ல…
ஆம்… என்னவனின் அழகிய காதல் வெளிப்பட்டிடுமே
“லூசு….” என்ற பேரழகான உன் ஒற்றை சொல்லில்…
பூ மலரும்……….
{kunena_discuss:779}