கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 38 - என்னடா செய்திட்டாய் என்னை???...!!! - மீரா ராம்
சலசலக்கும் அருவியைப் பார்க்கையில்
மனம் அதுபோலவே துள்ளி தான் குதிக்கிறது
அதில் நனைந்து நீராடவும், விளையாடவும்…
எனினும் அடுத்த கணமே, அது உன்னை நினைக்கிறது…
கைகட்டி நீ அங்கு நின்று சிரிப்பது போல் தோன்ற
என் பார்வை உன்னிடத்தில் திரும்புகிறது…
இப்போது அருவியோடு ஒன்றி நிற்கும் உன்னை ரசிக்கிறேனா???..
இல்லை இத்தனை நேரம் ஆவலோடு பார்க்க
துடித்திட்ட அருவியை ரசிக்கிறேனா???..
எதில் என் ரசனை நிற்கிறது?...
கண்ணைக் கவரும் பசுமை எங்கும் நிறைந்து நிற்க
அந்த வயல்வெளியின் அழகில் மனம் தொலைந்தே போக
அதன் வாய்க்கால் வரப்பில் ஓடிச்செல்ல நினைக்கிறேன்…
ஓரடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டேன்…
வரப்பின் நடுவே உன் பிம்பம் நான் காண,
அப்படியே நீ நடந்து வரும் அழகில்
மெய்மறந்து போகின்றேன் நானும்…
இப்போது நான் தொலைந்து நிற்பது உன்னிலா?..
இல்லை என் கண்களுக்கு விருந்தளித்த வயல்வெளியிலா?...
எதில் நான் கரைந்து காணாமல் போனேன்?...
வாசம் வீசும் பல வண்ண மலர்கள்…
என் நாசியை துளைத்தெடுக்க,
கைகளோ அவைகளை தொட்டு பார்க்கும் முன்னர்
என் கண்களோ அவற்றின் மீது மேய துவங்கிற்று…
புன்னகை முகத்தோடு எனை பார்த்து அது தலையாட்ட,
கை நீட்டி அதை தொட விழைகையில்
பூவுக்குள் உன் முகம் காணுகின்றேன் நான்…
முத்துப் பற்கள் ஒளிவீச நீ சிரிக்க,
உன் ஆகர்ஷ சிரிப்பில் நான் ஆகர்ஷிக்கப்பட்டேன் அக்கணமே…
இதழ் விரித்து நீ சிந்திய சிரிப்பில் நான் ஈர்க்கப்பட்டேனா?...
இல்லை பூங்காற்று பூவிதழில் மோத அது தன்னை மறந்து
தலைசாய்த்து குலுங்கி சிரித்ததில் ஈர்க்கப்பட்டேனா?..
எதில் நான் தன்னிலை மறந்தேன்?...
சொல்லடா என் மன்னா?...
ரசிப்பது… தொலைவது… ஈர்க்கப்படுவது… என அனைத்துமே
உன்னை…. உன்னில்…. உன்னால்….. தானா?...
என்னடா வசியமிது?...
இப்படி என்னை பாடாய் படுத்தினால்
நான் என்ன தான் செய்வது என் செல்லக் கண்ணா?...
அனைத்தையும் நினைத்துப்பார்க்கையில்
சிரிப்பு தாண்டா வருகிறது எனக்கு…
எப்படியடா என்னை இப்படி ஆக்கினாய்?..
உன் நினைவினை ஊற்றி
என் மனதினை மாற்றிட்டாயாடா?...
சொல்லடா என் அழகு மன்மதா…
என்னடா செய்திட்டாய் என்னை?..
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…
தொடர்ந்து இந்த தொடரை நான் எழுத ஆரம்பித்துவிட்டேன்…
ரொம்ப ரொம்ப நன்றி… தங்களின் ஆதரவிற்கும், தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கும்…
மிக மிக நன்றிகள்…
மீண்டும் அடுத்த வாரம் இக்கவிதைத் தொடரில் சந்திக்கலாம்…
பூ மலரும்…
{kunena_discuss:1088}