உனக்குள்ளே நான் - புவனேஸ்வரி
என்னவனே ,
உன் விரல் பற்றும் வாய்ப்பு கிடைத்திருந்தால்
சில நொடிகளின் சிலிர்ப்பில்
என் உணர்வுகள் அடங்கி இருக்கும் !
இன்றோ , உன் கைவிரல்கள் எப்படி இருக்கும் என கனவு காணுகிறேன் !
எப்படி கரம் பிடிப்பாய் என்னை ?
நீ எனக்கு மட்டுமே உரிமையானவளடி
என்று உரைக்கும் விதத்தில் அழுத்தமாகவா ?
அல்லது
என் கரங்களுக்கு வலிக்குமோ
என்று சிந்தித்தவாறு மென்மையாகவா ?
நீ என் விழியோடு விழி கலந்திருந்தால்
நாணத்தை மறைக்க முடியாமல் தலை குனிந்திருப்பேன் !
இன்றோ உன் பார்வையின் ரகசியங்களை கற்பனை செய்து கொண்டிருக்கேன் !
எப்படி பார்ப்பாய் என்னை ?
எனக்கே தெரியாமல் ஒர பார்வை பார்ப்பாயா ?
அல்லது
எனது சுவாசத்தை தடுமாற வைப்பதற்காகவே
இமைக்காமல் பார்ப்பாயா ?
உன்னோடு என் பயணத்தை தொடங்கி இருந்திருந்தால்
சில மணி நேரங்களில் நமது பயணம் முடிந்திருக்கும் !
இன்றோ கடவு சான்றிதல் இல்லாமலேயே உன்னோடு பல கண்டங்களை தாண்டிவிட்டேன் !
முதலில் என்னை எங்கு கூட்டி செல்வாய் ?
நம்ம இணைத்த இறைவனுக்கு நன்றி
கூறும்படி கோவிலுக்கா ?
அல்லது
உன்னை எனக்கு தந்த வாழும் தெய்வங்களான
உன் பெற்றோரை சந்திக்க உன் வீட்டிற்கா ?
காதலித்து கோபம் கொண்டிருந்தால்
இந்நேரம் உன்னை பிரிந்திருக்கலாம் !
ஆனால் இன்றோ நீ எப்படியெல்லாம் கோபப்படுவாய் என்று சிந்திக்கிறேன் ?
"போடீ " என்று உரைத்துவிட்டு திரும்பி நின்று கொள்வாயா ?
அல்லது
உன் ஐவிரல்களும் என் கன்னத்தில் பதியும் வகையில் அறைந்திருப்பாயா ?
கன்னத்தில் கை வைத்துக்கொண்டே கற்பனை செய்கிறேன் !
சந்திக்க தொடங்கியிருந்தால் உன்னுடன் பேசி வைத்து
ஒரே நிறத்தில் உடை அணிந்து ரசித்திருப்பேன்
இன்றோ , உனக்கென்ன வண்ணம் பிடிக்கும் ? இன்றென்ன நிறத்தை தேர்ந்தெடுப்பது என்று குழம்பி நிற்கிறேன் !
நீ என்ன சொல்வாய் ? தினமும் நமக்கான உடை நிறத்தை தேர்ந்தெடுப்பாயா ?
அல்லது
இது என்ன சிறுபிள்ளைத்தனம் என்று நகைப்பாயா ?
என்னவனே ,
உனக்கும் எனைப்போல் காதல் வந்திருந்தால்
இன்னும் சில நாட்கள் மௌனமாகவே இருந்துவிடு
வார்த்தைகளால் கோர்க்காமல்
பார்வையால் அவ்வப்போது பிணைந்து தவிக்கும்
இந்த ரகசிய காதலும் அழகுதான் ..!
உன்னுடன் மட்டும்தான் என்னால்
இணைந்து வாழ்ந்துவிட முடியுமாடா !
அப்படியிருக்கையில் சில நாட்கள்,
உன் மீது கொண்டுள்ள ஒருதலை காதலை சுமக்கும் நாட்களாய் கடக்கட்டுமே !
நமக்குள் நடந்திட்டும் கண்ணாமூச்சியில்
நான் உனக்குள் ஒளிந்திருக்கிறேன்
என்பதை உணர்ந்தாலும்
அதை உரைத்துவிடாதே !
விதம் விதமாய் கனவு கண்டு
நிதம் நிதமாய் நம்மை உணர்ந்து
இதம் இதமாய் மலரட்டும்
நிரந்தரமான நம் உறவு!
{kunena_discuss:779}