கவிதை - அலைபாய்ந்த உள்ளத்தில் அனல்பாயும் - புவனேஸ்வரி
அழுத்தங்களுக்கு மட்டுமே துணை போன
உன் எண்ணங்களும் வார்த்தைகளும்
என்றோ தூறும் மழை நீரை
சிந்திடும்போதெல்லாம் முதல் ஆளாய் நிற்கிறேன் ஏந்திட ..
நீ உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும்
எனக்கு கல்லூரியாகும்
ஒருமுறை நீ எழுதி தூக்கி எறிந்த கவிதை
ஓராயிரமுறை எனக்கு அர்த்தங்கள் கற்பிக்கும்
வராதே என்று தடுத்தும் என்னை
விழுங்கிவிடும் ஒரு கர்வம் !
உன் வார்த்தைகள் அனைத்தும்
எனக்கே எனக்கென்று எண்ணி என்னுள் எழும் கர்வமது !
பலமுறை சிரித்தேன் பல முறை பிறந்தேன்
ஒன்றே ஒன்றை மட்டும் நினைத்திட மறந்தேன் !
நான் யார் உனக்கு ?
நீ ஏன் எனக்காக உருகிட வேண்டும் ?
உன் நெஞ்சில் இருந்து சுரக்கும் கவியருவி
என்னை நீராட்டிட என்ன பந்தம் நமக்குள் ?
வானத்தை அண்ணார்ந்து பார்த்து நிலவை காதலித்தது போல ,
நீ யாருக்கோ எழுதிய கவிதைகளை எனக்கென எண்ணி மகிழ்ந்தேனோ
நினைக்கும்போதே அலைபாய்ந்த உள்ளத்தில்
அனல் பாய்கிறேன் !
என்றும் எனக்கென நீயில்லை என்ற
உண்மை ஓங்கி அறைகிறது !
{kunena_discuss:779}