காதலென்பது.... - தங்கமணி சுவாமினாதன்
காதலர் தினம் களைகட்டிவிட்டது..
அங்காடிகள் தோறும் பரிசுப்பொருட்கள்..
அமோக விற்பனை..அன்லிமிடெட் வசூல்..
காதல் வாழ்க; காதல் வாழ்க..
உண்மைக்காதல் என்றும் வாழ்க..
காதல் காதல் காதல் காதல் போயின்..
சாதல் சாதல் சாதல்..பாடினான் பாரதி..
அவன் பாடிய எத்தனையோ கருத்துக்கள்
ஏட்டில் இருக்க..காதலை மட்டுமிவர்கள்
கையிலெடுப்பானேன்?
அங்கிங்கெனாதபடி எங்கும் காதல்....
சினிமாவில் காதல்..சீரியலில் காதல்..
பார்க்கில் காதல்..பீச்சில் காதல்..
பஸ்ஸில் காதல்..ட்ரைனில் காதல்.
மாலில் காதல்..ஹோட்டலில் காதல்..
பள்ளியில் காதல்..கல்லூரியில் காதல்..
புனிதமான ஆலயத்துள்ளும் நடக்குது பார்
அசிங்கக் காதல்..
கண்களால் பேசிக் கருத்தில் நுழைந்து..
இதயத்தால் இணைந்து ..
மெய்யால் மெய் தீண்டாது..வளரும் அன்பே
உண்மைக்காதல்..
மற்றதெல்லாம் கள்ளக்காதல்..
கள்ளக்காதலில் மலரும் பூக்கள்
காற்றில் பறக்கும் காகிதப் பூக்கள்..
இதில் ஒருதலைக்காதல் முக்கோணக்காதல்
வித விதமான காதல் வேறு..
காதலை மறுத்தால் ஆசிட் வீச்சு..
கல்யாணம் மறுத்தால் கத்தி வீச்சு..
ஜீரோவை ஹீரோவாய் எண்ணி..
காதலில் விழும் கன்னிப் பெண்கள்
அவன் காரியம் முடிந்து கைகழுவி
விட்டால்...
காலம் முழுதும் கண்ணீர்க்கடலில்..
பொருந்தாக் காதலுக்குப் பெற்றோர்
கருப்புக்கொடி காட்டினால்..
தண்டவாளத்தில் இருவரும் தலை வைத்துப்
படுப்பதும்..
முழக்கயிற்றை முத்தமிட்டு முடிந்து போக
நினைப்பதும்....
மாற்று வழி தேடி உயிரை மாய்த்துக்கொள்ள
முயல்வதும்..
பெற்றோர் நெஞ்சில் நேராய் நெருப்பு வைக்கும்
செயலன்றோ?..
எனவே வேண்டாம்..வேண்டாம்..இந்த..
வீணான காதல்..
படிக்கும் காலத்தில் படிப்பைப் பாருங்கள்..
பெற்றோர்..சொல்..வார்த்தை கேளுங்கள்
சாதனை புரிய வழியைத் தேடுங்கள்...
சிகரம் தொட்டு..வாழ்வில் உயர்ந்து நில்லுங்கள்...
உண்மைக் காதல் கங்கை நீராகும்...
அது இல்லாக் காதல் கானல் நீரே...