வாருங்கள் தோழியரே... - தங்கமணி சுவாமினாதன்
மார்ச்- 8 மகளிர் தினமாம்...
வழக்கம் போல் வருடம் ஒரு நாள்..
வண்ணத் தொலைக் காட்சிகளில்..
மகளிர் மாகாத்மியம்..
மகளிருக்குக் குல்லாய் போடவும்..
"அல்வா"கொடுக்கவும்..
தயாராகும் மணிமகுடங்கள்..
மகளிரே நீவிர் அவரவர் தலையினை..
சிரமம் இருந்தாலும் சீவிச் சிக்கெடுத்து..
சீர்படுத்தி சிங்காரித்து வைத்துக் கொள்க..
உங்கள் சிரத்தில் வைக்க... மணி மகுடம்..
அலங்காரத் தேர்களில் அமர்க்களமாய் ஊர்வலம்..
அன்று அரசாங்கம் மகளிருக்கு..
மகுடம் சூட்டி அழகு பார்க்க..
அறிவிப்புகள் பல தரவே ஆலோசனை செய்கிறதாம்.
மகளிருக்குப் "பார்லியில்"33 விழுக்காடாம்..
அரசுப் பணிகளில் ஆண்களின் ஆதிக்கம்..
வெகுவாய் "அடக்கப்பட்டு"பெண்களின் கரங்களில்..
அதிகாரப் பகிர்வாம்...
கனவு காண்பது அனைவர்க்கும் உரியதாம்..
சொல்லிச் சென்றார் உத்தமர் அன்று..
இதெல்லாம் நடக்குமென்று மகளிர் நாமும்..
தினம் தினம் கனவு காண..
காசா?பணமா?செலவொன்றுமில்லையே..
மகளிர் பலபேர்க்கு இப்பாட்டில்..
உடன்பாடு இருக்காது..
அவர்கள் "வரம்"வாங்கி வந்தவர்கள்...
வாழட்டும் அவர்கள் வாழ்த்துவோம் அவர்களை..
ஆயினும் நாட்டில் நாலில் மூன்று பங்கு.
நசுக்கப் பட்ட பெண்கள்தான்..
நமக்கு மகுடம் வேண்டாம் அல்வா வேண்டாம்..
நாம் ஒன்றும் இரண்டாம் பிரஜை இல்லை..
இனியும் ஏமாந்து போவதற்கு..
வாருங்கள் தோழியரே நமை நாமே..
முதன்மை ஆக்கிடுவோம்..
முஷ்டி உயர்த்திடிடுவோம்..
மார்ச் 8 ல் ஒன்றாய்க் கூடி சபதம் ஏற்றிடுவோம்..
{kunena_discuss:779}