கவிதை - ஒண்ணுமே புரியலே உலகத்திலே... - தங்கமணி சுவாமினாதன்
இன்று..
மார்ச் 8..மகளிர் தினம்..
வழக்கம்போல் தொலைக்காட்சியில்..
தலைவர்களின் வாழ்த்துக்கள்..
பாடாவதிப் படங்கள்,பட்டிமன்றங்கள்..
அரைகுறை ஆடையில் தொகுப்பாளினிகள்..
நுனி நாக்கு ஆங்கிலம்..
நடிகையினரின் அலட்டல் பேச்சுக்கள்..
ஆரவாரக் கைத்தட்டல்கள்..
வருடத்திற்கொரு நாள்..
இதுதான் கூத்திங்கே..
மேல்தட்டுப் பெண்மணிகள்..
அழகழகாய் அணிகலன்கள்..
ஆடைகள் அணிந்துகொண்டு..
கால்மேல் கால் போட்டுத்-தம்
ஆங்கிலப் புலமைதனை..
அவையோர்க்குத் தெரிவித்து..
மகளிர் தினத்தை மகிழ்வாய்க்..
கொண்டாடிட..
ராமாயியும்,கிருஷ்ணாயியும்..
மகளிர்தான் என்றாலும்..
அவர்கள் அறிவாரோ இன்று..
மகளிர் தினமென்று?..
என்றும்போல் இன்றும்-கடும்..
உழைப்புத்தான்.. அரை வயிற்றுச்..
சோற்றுக்கு..
குடித்து வரும் கணவனால்..
அடியும் உதையும்தான்..
உழைத்துக் களைத்த மேனிக்கு..
எத்தனை கொடுமை இங்கே..
ஏட்டில் வடிக்க முடியாது..
பெண்படும் துயர்தனையே..
வார்த்தையால் சொல்ல முடியாது..
தினம்தினம் நடக்குதிங்கே..
வன் புணர்ச்சி..பெண்கள் மேல்..
தளிர் மொட்டுக்கள்கூட..
கசங்கும் அவலந்தனைக்..
காணச்சகிக்கவில்லை..
நெஞ்சம் பொறுக்கவில்லை..
பெண்களை வெட்டிச்சாய்ப்பதும்...
கொளுத்தித் தீர்ப்பதும்..
வாடிக்கையானதிங்கே-அரசும்..
வேடிக்கைப் பார்க்குதிங்கே..
பெண்களுக்குச் சுதந்திரம்..
பேச்சளவில் மட்டும்தான்..
வாக்குரிமை தந்துவிட்டால்..
வந்திடுமோ சம உரிமை..?
பெண்கள்..... நாற்காலியில் அமர்ந்திட்டால்..
சாமி குத்தம் ஆகிடுமாம்..
கட்டிலில் அமர்ந்துகொண்டால்--நாடு..
சுடுகாடாய் மாறிடுமாம்..
சட்டீஸ்கர் மானிலத்து.
ஊரொன்றில் நடந்திடுதாம்..
பெண்களுக்கெதிரான அடக்குமுறைக்..
கேலிக் கூத்து..
இதுபோலே நடந்திடுதாம்..
மேலும் பல மானிலத்தில்..
அங்கெல்லாம்..
பெண்கள்-- தேர்தலில் நிற்க முடியாது..
விருப்பம்போல் ஆடை அணிய முடியாது..
கைப்பேசி வைத்து பேசி மகிழ முடியாது..
பள்ளி சென்று படிக்க இயலாது..
விரும்பும் எதையும்... விரும்பிச் செய்ய..
முடியானிலையில்.. பெண்கள் (பெருமளவில்) இருக்க..
வருடம் ஓர் நாள் "மகளிர் தினமாம்"..
யாருக்கு வேண்டும் இந்த வேடிக்கை வினோதம்?..
வாருங்கள் தோழியரே நம் உரிமை மீட்போம்..
சம உரிமை காண்போம்..அதன்பின்பு நமக்கெல்லாம்..
தினதினம் "மகளிர் தினம்"தான்..
அதுவரை இன்னாளை மறுப்போம்..துறப்போம்..
{kunena_discuss:779}