கவிதை - ஒரு பெண்ணின் பிரார்த்தனை - சிவரஞ்சனி
இறைவா!!!
என் குலத்திற்கு ( பெண் )
உள்ளமில்லா உடல் அருள்வாய்!
சிரைச் சேதம் செய்யப்படும்
பலி ஆடும் சில நொடிகள்
துடிதுடித்து அடங்குகிறது !
நாங்களோ வாழும் ஒவ்வொரு
நொடியும் துடிக்க வேண்டியுள்ளது !
அடுத்தவர் ( ஆடவர் ) அதிகாரத்திற்கும் ,ஆணவத்திற்கும் ,
இச்சைக்கும், இம்சைக்கும்
பயந்து,பணிந்து
அடங்கி,ஒடுங்கி ,முடங்கி,
வாழ எதற்கு உள்ளம்?
சில்லு சில்லாய் சிதற
சிந்திக்கும் திறன் எதற்கு?
சுட்டெரிக்கப்படும் சுயமும்,
சுயஉணர்வும் தான் எதற்கு?
எங்களின் கண்ணீரால் தான்
கடல் உப்பாய் உள்ளதோ
என்ற ஐயம் எப்போதும்
உண்டெனக்கு!
இவை ஏதும் இல்லா
எந்திரம் ஆக்கு எங்களை!
இல்லையேல் சமநீதி கொண்ட சமுதாயம் அருள்வாய் !
இத்தகைய ப்ரார்தனைக்கும்
என் உள்ளம் உலையில் வீசப்படும்
அவரறிந்தால்!
ரகசியம் காப்பாய் ரட்சகனே!!!
{kunena_discuss:779}