காதலன் - சிவரஞ்சனி
விழியில் கருவுறுவதல்ல,
உயிரில் கருவுறுவதே காதல் என்பதைக் கருத்தில்
கருவுறச் செய்தவள் நீ!
புலன்களின் கிளர்ச்சி அல்ல,
புரிந்து கொள்ளுதலே காதல்
என்பதைப் புரிய வைத்தவள் நீ!
உதடுகளின் உச்சரிப்பில் அல்ல,
உணர்வுகள் ஒன்றுவதிலேயே உள்ளது காதல் என்பதை உணர்த்தியவள் நீ!
களிப்பது மட்டுமே அல்ல,
கண்ணீருக்குக் கைக்குட்டையாய்
இருப்பதே காதல் என்பதை
கனிவாய்ச் சொன்னவள் நீ!
கண்டதும் வருவதல்ல,
காணாமல் இருந்தும் கண்ணில் நிற்பதே காதல் என்றவள் நீ!
அன்று உன்னைக் காதலிப்பதாய்க் கூறினேன்,
ஆனால் உண்மையில்
காதலிப்பதைதான் காதலித்தேன்.
காதல் கையில் கிடைத்தது!
ஆனால் இன்று உண்மையில்
உன்னைக் காதலிக்கிறேன்!
ஆனால் காதலோ, கல்லறையில்!!!
அனைத்தையும் அறிவுறுத்திய நீ
இறுதியில் உன் பிரிவால்,
அறிவறுத்தாமலேயே ஒன்றை
அறிவில் ஏற்றினாய்!
எதிர்த்துக் கொண்டும்,
ஏங்கிக் கொண்டும்
அழிவதில் இல்லை காதல்!
எதார்த்தங்களில் கலந்து,
ஏணிப்படிகளில் ஏறுவதிலேயே
உள்ளது காதல்!
காதலியை அடைந்து,
காதலைக் கருவறுப்பவன் அல்ல,
காதலியை இழந்தும்
காதலை வாழ வைப்பவனே
உண்மைக் காதலன்!!!
{kunena_discuss:779}