(Reading time: 2 - 4 minutes)

கவிதை - உனக்கான இரவுகளில் - கண்ணம்மா

nights

எப்பொழுதும் போல்

இப்பொழுதெல்லாம் இருப்பதில்லை

என் இரவுகள்

 

நிலவு

விண்மீன்

சில துண்டு மேகங்கள்

இவைகள் தான் இது வரையில் இரவுகளில்

 

இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை

 

படுத்ததும் உறங்கி பழகியவளின்

கண்களில் கலவரம் மட்டுமே இப்பொழுது

 

இரவு பகலென மாறிடும் நொடியில்

என் தனிமையின் தவிப்புகள்

 

நிலவு கூட சூரியனாய்

அனல் கூட்டுகிறது தினமும்

 

விண்மீன்களின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை

இப்பொழுதெல்லாம் ரசிக்க முடிவதே இல்லை

 

சுகமான தென்றல் கூட

பெரும் புயலாய் மோதி உடைக்கிறது என்னை

 

இதுவரை இரவினை காரிருளாய் மட்டும் கண்டவள்

இப்பொழுது கலர் கலரான இரவுகளால்

கதிகலங்கி நிற்கின்றேன்

 

முன்பெல்லாம் கனவுகளில்

 

அம்மா, அப்பா, நண்பன்

கடவுள், பாம்பு, இவை தவிர

இறந்து போன தாத்தா பாட்டி

இவர்களே வந்து போவார்கள்

 

இப்பொழுதெல்லாம் உன்னை தவிர

யாருமே கனவுகளில் வருவதில்லை

என் முழு இரவுகளையும்

ஆக்கிரமித்து கொண்டவன் நீ

என் கனவுகள் உட்பட

 

இது வரையில் வெறும் பஞ்சு மூட்டையாய்

இருந்த என் தலயணைகளில்

இப்பொழுதெல்லாம் அவ்வபொழுது

தெரியும் உன் முகம்

வெட்கம் விட்டு சொல்கிறேன்

நீ என நினைத்து தலையணைக்கு

முத்தமிட்டு ஏமாறுவதை தொடரத்தான் செய்கிறேன்

 

காலை உன்னை காண வேண்டி

விரைந்து எழ அலாரம் வைத்து

விடிய விடிய விழித்திருந்து

அலாரத்தின் நிமிடங்களையும்

ரசித்து கொண்டிருப்பதும்

புது சுகமெனவே படுகிறது இப்பொழுதெல்லாம்

 

நீ அழைப்பாய் அழைப்பாய் என

யாரும் அழைக்காத கைபேசியை

பொம்மை கடையை விடாமல்

வெரித்து பார்க்கும் குழந்தை போல

பார்த்து கொண்டேதான் இருக்கிறேன்

உன் அழைப்பிற்காய்

 

வேலை இல்லாதவன்

நோயாளி

இரவு காவலாளி

போன்றோரின் இரவுகள் போலவே

இப்பொழுதெல்லாம் கடினமாகி போகிறதடா

என் இரவுகள்

 

உனக்கான இரவுகளில் என்

தலைப்பிட்டு என் இரவுகளை

பற்றி எழுதுவதை நினைத்து

நீ சிரிப்பதும் எனக்கு புரியாமல் இல்லை

 

என்ன செய்ய

முதன் முறை இரவை களவு கொடுத்து நிற்கிறேன்

உன்னிடம்

 

ஆம் எனக்கு தெரிந்தவரை

இரவு

உரக்கம்

கனவு

என அனைத்தையும் என்னிடமிருந்து

இவ்வளவு சாமார்த்தியமாய்

ஒரே ஒரு புன்னகையிலும்

சிறு சிறு ஓரபார்வைகளாலும்

கொள்ளையடித்து சென்றவன்

யாருமில்லை

உன்னை போல . . .

 

இப்படித்தான் . . .

 

ஏக்கத்துடனும்

தவிப்புடனும்

கனவுகளுடனும்

புலம்பல்களுடனும்

விழித்து கொண்டே

வந்து செல்கிறது

எல்லா நாளும்

உனக்கான இரவுகள் . . . .

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.