கவிதை - தீருமா இக்கேள்வி? - ரேவதிசிவா
அனைவரும் சமமென்று கூறி
ஆயிரம் பேதங்களை வளர்!
அனைவரும் சகோதரரென கூறி
அகப்பட்டால் கழுத்தை அறு!
அனைவருக்கும் வளர்ச்சியென்று கூறி
அநியாயமாய் சுரண்டு!
அனைவருக்கும் கல்வியென்று கூறி
அதிக கட்டணங்களை வாங்கு!
அனைவருக்கும் வேலையென்று கூறி
அடிமைப்படுத்தி ஏய்த்து கொள்!
கையில் வரும்வரை கும்பிட்டுவிட்டு
கைக்கு வந்தபின் குத்திவிட்டு
தன்னுடல் வளர்க்க
தன் தலைமுறை செழிக்க
தாயை விற்ற கயவன் போல்
தரணியில் தலைகள் (தளைகள்) உருவாகினரே!
பணம் என்னும் பித்து பிடித்த உங்களை
பேயோட்ட மனிதர் வந்தால்
பொய் பேசி பூட்டிவிட்டு
படம் போட்ட
புடம் போட்ட தகரங்களே!
அநியாய செயல்களை பகீரங்கமாய்
அரங்கேற்றிவிட்டு
அப்பழுக்கில்லா உள்ளம் போல்
உலா வருகிறீர்களே!
உங்களை எல்லாம் என்னவென்று சொல்ல?
அன்று
மக்கள் துன்புற்று இருக்க
இசை வாசித்துக் கொண்டிருந்தானாம்!
அவனோ ஒருவன்தான்!
ஆனால் இன்றோ
ஆயிரக்கணக்கானவர்கள்!
மக்கள் துன்பத்தில் துடிக்க
மகிழ்ச்சியாய் ஊர்சுற்றும் சுயநலப்பிண்டங்கள்!
மாறுமோ இந்நிலை?
பூமியில் மனிதர்கள் இருக்கும்வரை
தீருமா இக்கேள்வி?
{kunena_discuss:779}