(Reading time: 1 - 2 minutes)

கவிதை - வீழவில்லை..!வீழ்த்தப்படுகிறாள்..! - சமீரா

Women

அவளுள் எழும் ஆசைகளும்

அவளது ஆளுமைகளும்

அனுமதிகள் மறுக்கப்பட

அரங்கேற்றமின்றியே ஒதுக்கப்பட

அழுகையையும் ஆதங்கத்தையும்

அறையினுள்ளே விம்மலாய்

அடக்கிக் கொள்கிறாள்..!

 

கற்பனையில் கண்ட கனவுகள்

கருத்தரிக்க முற்படுகையில்

கலாசாரம் எனும் பெயரில்

கண்ணெதிரிலே கனாக்கள்

கருணையின்றி கலைக்கப்பட

காரிகை அவளோ

காயப்படுகிறாள்..!

 

விண்ணளவு சாதிக்க எண்ணும்

விண்மீன் அவளோ..!

விடியலைத் தேடி விழைகையில்

விதைகள் முளைவிட முன்னரே

வினாக்கள் விடைக்காணாமலே

விடைபெறுகையில் பாவை அவளோ

விக்கித்துபோகிறாள்..!

 

சாத்திரங்கள் பேசிடும்

சமூகமெனும் சதுரங்க ஆட்டத்தில்

சத்தமின்றி அவளோ! கனவுகளுடன்

சடுதியில் சாய்க்கப்படுகிறாள்..!

சாதனைகள் புரிய

சரித்திரங்கள் படைக்க

சந்தர்ப்பமின்றியே வீழ்கிறாள்! இல்லை

சதிகளால் வீழ்த்தப்படுகிறாள்..!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.